பாடல் #1413

பாடல் #1413: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பொற்கொடி யாளுடன் பூசனை செய்திட
வக்களி யாகிய வாங்காரம் போய்விடு
மற்கடி யாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொறகொடி யாளுடன பூசனை செயதிட
வககளி யாகிய வாஙகாரம பொயவிடு
மறகடி யாகிய மணடலந தனனுளெ
பிறகொடி யாகிய பெதையைக காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொற் கொடியாள் உடன் பூசனை செய்திட
அக் களி ஆகிய ஆங்காரம் போய்விடும்
மற் கடி ஆகிய மண்டலம் தன் உளே
பிற் கொடி ஆகிய பேதையை காணுமே.

பதப்பொருள்:

பொற் (தங்கம் போல் பிரகாசிக்கின்ற) கொடியாள் (கொடியாக இருக்கின்ற) உடன் (இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து) பூசனை (பூஜைகள்) செய்திட (செய்து கொண்டு இருக்கும் போது)
அக் (அங்கு) களி (கிடைத்த இன்ப) ஆகிய (எண்ணமாகிய) ஆங்காரம் (இறைவி என்னோடு இருக்கின்றாள் என்கிற அகங்காரத்தை) போய்விடும் (சாதகரை விட்டு போக வைத்துவிடும்)
மற் (அதன் பிறகு நிலைபெற்று) கடி (காவலாக) ஆகிய (தம்மைச் சுற்றி இருக்கின்ற) மண்டலம் (மண்டலத்தை) தன் (அதற்கு) உளே (உள்ளேயே)
பிற் (சாதகரோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கின்ற) கொடி (கொடி) ஆகிய (ஆக இருக்கின்ற) பேதையை (குழந்தை போன்ற இறைவியை) காணுமே (தமக்குள்ளே தரிசிக்க முடியும்).

விளக்கம்:

பாடல் #1412 இல் உள்ளபடி தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாக இருக்கின்ற இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து பூஜைகள் செய்து கொண்டு இருக்கும் போது அதில் இறைவி என்னோடு இருக்கின்றாள் என்கிற இன்பமான எண்ணமாகிய அகங்காரம் சாதகரை விட்டு விலகி விடும். அதன் பிறகு சாதகரைச் சுற்றி காவலாக நிலைபெற்று நிற்கின்ற மண்டலத்திற்கு உள்ளேயே சாதகரோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கின்ற கொடியாகவும் குழந்தை போலவும் இருக்கின்ற இறைவியை தமக்குள்ளே சாதகரால் தரிசிக்க முடியும்.

பாடல் #1414

பாடல் #1414: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பேதை யிவளுக்குப் பெண்மை யழகாகுந்
தாதை யிவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மாதை யிவளுக்கு மண்ணுந் திலதமாய்க்
கோதையர் சூழக் குவிந்திடுங் காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெதை யிவளுககுப பெணமை யழகாகுந
தாதை யிவளுககுத தாணுவுமாய நிறகும
மாதை யிவளுககு மணணுந திலதமாயக
கொதையர சூழக குவிநதிடுங காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும்
தாதை இவளுக்கு தாணுவும் ஆய் நிற்கும்
மாதை இவளுக்கு மண்ணும் திலதம் ஆய்
கோதையர் சூழ குவிந்திடும் காணுமே.

பதப்பொருள்:

பேதை (குழந்தை போல இருக்கின்ற) இவளுக்கு (இறைவிக்கு) பெண்மை (சக்தியின் பரிபூரணமே) அழகு (பேரழகாக) ஆகும் (இருக்கின்றது)
தாதை (அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும்) இவளுக்கு (இறைவிக்கு) தாணுவும் (உறுதுணை) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்கின்றார்)
மாதை (இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும்) இவளுக்கு (இறைவிக்கு) மண்ணும் (அழகாக பூசிய) திலதம் (குங்குமத் திலகம்) ஆய் (போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்க)
கோதையர் (மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும்) சூழ (அவளைச் சுற்றி) குவிந்திடும் (ஒன்றாக கூடி இருப்பதை) காணுமே (சாதகரால் தரிசிக்க முடியும்).

விளக்கம்:

பாடல் #1413 இல் உள்ளபடி குழந்தை போல இருக்கின்ற இறைவிக்கு சக்தியின் பரிபூரணமே பேரழகாக இருக்கின்றது. அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும் இறைவிக்கு உறுதுணையாக நிற்கின்றார். இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும் இறைவிக்கு அழகாக பூசிய குங்குமத் திலகம் போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்க மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும் அவளைச் சுற்றி ஒன்றாக கூடி இருப்பதை சாதகரால் தரிசிக்க முடியும்.

பாடல் #1415

பாடல் #1415: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

குவிந்தன சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே
யிருந்தனர் காணு மிடம்பல கொண்டே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குவிநதன சததிகள முபபத திருவர
நடநதனர கனனிகள நாலெணமர சூழப
பரநதித ழாகிய பஙகயத துளளெ
யிருநதனர காணு மிடமபல கொணடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குவிந்தனர் சத்திகள் முப்பத்து இருவர்
நடந்தனர் கன்னிகள் நால் எண்மர் சூழ
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே
இருந்தனர் காணும் இடம் பல கொண்டே.

பதப்பொருள்:

குவிந்தனர் (இறைவியைச் சுற்றி ஒன்றாக கூடி இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) முப்பத்து (முப்பதும்) இருவர் (இரண்டும் கூட்டி மொத்தம் முப்பத்து இரண்டு பேர் இருக்கின்றார்கள்)
நடந்தனர் (இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற) கன்னிகள் (என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகள்) நால் (நான்கு திசைகளுக்கும்) எண்மர் (எட்டு எட்டு பேராக மொத்தம் முப்பத்து இரண்டு பேர்களும்) சூழ (இறைவியைச் சுற்றி இருந்து)
பரந்து (அண்ட சராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து) இதழ் (இதழ்களாக) ஆகிய (இருக்கின்ற இறைவியின் செயல்களாகவும்) பங்கயத்து (தாமரை மலரான இறைவியோடு அதற்கு) உள்ளே (உள்ளேயும்)
இருந்தனர் (இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இருப்பதை) காணும் (சாதகர் தமக்குள் தரிசிக்க முடியும்) இடம் (அவர்கள் அண்ட சராசரங்களில் இருக்கின்ற இடமாக) பல (பலவித இடங்களிலும்) கொண்டே (இருந்து கொண்டு புரிகின்ற அனைத்து செயல்களையும்).

விளக்கம்:

பாடல் #1414 இல் உள்ளபடி இறைவியைச் சுற்றி ஒன்றாக கூடி இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்து இரண்டு பேர் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகளாக நான்கு திசைகளுக்கும் எட்டு எட்டு பேராக மொத்தம் முப்பத்து இரண்டு பேர்களாக இறைவியைச் சுற்றி இருக்கிறார்கள். தாமரை மலரான இறைவியின் செயல்களான இதழ்களில் இந்த முப்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக சேர்ந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து புரிகின்ற அனைத்து செயல்களையும் சாதகர் தாம் அமர்ந்த இடத்திலிருந்தே தமக்குள் தரிசிக்க முடியும்.

பாடல் #1416

பாடல் #1416: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கொண்டங் கிருந்தனர் கூத்த னொழியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமா
மின்றென் மனத்துள்ளே யில்லடைந் தாளுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொணடங கிருநதனர கூதத னொழியினைக
கணடங கிருநதனர காரணத துளளது
பணடை மறைகள பரநதெஙகுந தெடுமா
மினறென மனததுளளெ யிலலடைந தாளுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள் அது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடும் ஆம்
இன்று என் மனத்து உள்ளே இல் அடைந்து ஆளுமே.

பதப்பொருள்:

கொண்டு (உலக செயல்களை புரிந்து கொண்டு) அங்கு (பலவிதமான இடங்களில்) இருந்தனர் (இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்து இரண்டு சக்திகளும்) கூத்தன் (ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின்) ஒளியினை (பேரொளி வடிவத்தையே)
கண்டு (தரிசித்துக் கொண்டு) அங்கு (அந்தந்த இடங்களில்) இருந்தனர் (இருந்து) காரணத்து (உலக நன்மைக்கான காரணத்திற்காக) உள் (இறைவிக்கு உள்ளே இருந்து) அது (அவற்றை செயல் பட வைக்கின்றனர்)
பண்டை (ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்து கொண்டு அவனைத் தேடி அடைய வேண்டும் என்ற காரணத்தினால்) மறைகள் (அருளப்பட்ட வேதங்களை) பரந்து (அண்ட சராசரங்கள் முழுவதும் பரவும் படி எடுத்துச் சென்று) எங்கும் (அங்கெல்லாம் இருக்கின்ற உயிர்களில்) தேடும் (இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு) ஆம் (உதவியும் புரிகின்றனர்)
இன்று (இவர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே இப்போது) என் (இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின்) மனத்து (மனதிற்கு) உள்ளே (உள்ளே இருந்து) இல் (அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு) அடைந்து (அவருக்குள் வீற்றிருந்து) ஆளுமே (சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1415 இல் உள்ளபடி உலக செயல்களை புரிந்து கொண்டு பலவிதமான இடங்களில் இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்து இரண்டு சக்திகளும் ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின் பேரொளி வடிவத்தையே தரிசித்துக் கொண்டு அந்தந்த இடங்களில் இருந்து உலக நன்மைக்கான காரணத்திற்காக இறைவிக்கு உள்ளே இருந்து அவற்றை செயல் பட வைக்கின்றனர். ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்து கொண்டு அவனைத் தேடி அடைய வேண்டும் என்ற காரணத்தினால் அருளப்பட்ட வேதங்களை அண்ட சராசரங்கள் முழுவதும் பரவும் படி எடுத்துச் சென்று அங்கெல்லாம் இருக்கின்ற உயிர்களில் இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு இவர்கள் உதவி புரிகின்றனர். இவர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே இப்போது இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின் மனதிற்கு உள்ளே இருந்து அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு அவருக்குள் வீற்றிருந்து சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகின்றாள்.

பாடல் #1417

பாடல் #1417: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

இல்லடைந் தாளுக்கு மில்லாத தொன்றில்லை
யில்லடைந் தானுக் கிறப்பது தானில்லை
யில்லடைந் தானுக் கிமையவர் தானொவ்வர்
ரில்லடைந் தானுக்கு மில்லாதில் லானையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலலடைந தாளுககு மிலலாத தொனறிலலை
யிலலடைந தானுக கிறபபது தானிலலை
யிலலடைந தானுக கிமையவர தானொவவர
ரிலலடைந தானுககு மிலலாதில லானையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இல் அடைந்தாளுக்கும் இல்லாதது ஒன்று இல்லை
இல் அடைந்தானுக்கு இறப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தான் ஒவ்வர்
இல் அடைந்தானுக்கும் இல்லாது இல் ஆனையே.

பதப்பொருள்:

இல் (சாதகரின் உள்ளத்தையே கோயிலாக) அடைந்தாளுக்கும் (கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு) இல்லாதது (இல்லாதது என்ற எந்த) ஒன்று (ஒன்றுமே) இல்லை (இல்லை)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கு (உள்ளத்தை அடைந்த சாதகருக்கு) இறப்பது (இனி இறப்பது) தான் (என்கிற நிகழ்வு) இல்லை (இல்லை)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கு (உள்ளத்தை அடைந்த சாதகருக்கு) இமையவர் (கண்ணின் இமை போல் உலகத்தை காத்துக் கொண்டு இருக்கின்ற விண்ணவர்கள்) தான் (அனைவரும்) ஒவ்வர் (சரிசமம் ஆவார்கள்)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கும் (உள்ளத்தை அடைந்த சாதகருக்கும்) இல்லாது (இல்லாத) இல் (இடம் என்று எதுவும் இல்லை) ஆனையே (இறைவன் வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட ஆன்மாவுக்கு).

விளக்கம்:

பாடல் #1416 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்தையே கோயிலாக கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு இல்லாதது என்ற எந்த ஒன்றுமே இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு இனி இறப்பது என்கிற நிகழ்வு இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு கண்ணின் இமை போல் உலகத்தை காத்துக் கொண்டு இருக்கின்ற விண்ணவர்கள் அனைவருக்கும் சரிசமம் ஆவார்கள். இறைவனே வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவும் இறைவனைப் போலவே இல்லாத இடம் என்று எதுவும் இல்லை.

பாடல் #1418

பாடல் #1418: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆனை மயக்கு மறுபத்து நாற்றறி
யானை யிருக்கு மறுபத்து நாலொளி
யானை யிருக்கு மறுபத்து நாலறை
யானை யங்கோடு மறுபத்து நாலிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆனை மயககு மறுபதது நாறறறி
யானை யிருககு மறுபதது நாலொளி
யானை யிருககு மறுபதது நாலறை
யானை யஙகொடு மறுபதது நாலிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆனை மயக்கும் அறு பத்து நால் தறி
ஆனை இருக்கும் அறு பத்து நால் ஒளி
ஆனை இருக்கும் அறு பத்து நால் அறை
ஆனை அங்கு ஓடும் அறு பத்து நாலிலே.

பதப்பொருள்:

ஆனை (இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவின்) மயக்கும் (இறை தன்மையில் கவர்ந்து இழுக்கப்பட்டு வணங்குகின்ற ஆன்மாக்களுக்கு அருளுகின்ற) அறு (ஆறும்) பத்து (பத்தும்) நால் (நான்கும் கூட்டி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) தறி (சக்திகள் இருக்கின்றார்கள்)
ஆனை (இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள்) இருக்கும் (இருக்கின்ற) அறு (ஆறும்) பத்து (பத்தும்) நால் (நான்கும் கூட்டி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) ஒளி (சக்திகளும் ஒளியாக இருக்கின்றார்கள்)
ஆனை (இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள்) இருக்கும் (இருக்கின்ற) அறு (ஆறும்) பத்து (பத்தும்) நால் (நான்கும் கூட்டி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) அறை (சக்திகளும் நவாக்கிரி சக்கரத்தை சுற்றி காவலாக நிற்கின்றார்கள்)
ஆனை (இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள்) அங்கு (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை) ஓடும் (நாடி வருகின்ற ஆன்மாக்களை இந்த) அறு (ஆறும்) பத்து (பத்தும்) நாலிலே (நாலும் கூட்டி வரும் மொத்தம் அறுபத்து நான்கு சக்திகளும் காத்து அருளுகின்றனர்).

விளக்கம்:

பாடல் #1417 இல் உள்ளபடி இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவின் இறை தன்மையில் கவர்ந்து இழுக்கப்பட்டு வணங்குகின்ற ஆன்மாக்களுக்கு அருளுகின்ற பாடல் #1371 இல் உள்ளபடி அறுபத்து நான்கு சக்திகள் இருக்கின்றார்கள். இவர்கள் அந்த ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் அறுபத்து நான்கு ஒளிகளாக இருக்கின்றார்கள். இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை சுற்றி காவலாக வீற்றிருக்கின்ற இந்த அறுபத்து நான்கு சக்திகளும் சாதகரை நாடி வருகின்ற ஆன்மாக்களை காத்து அருளுகின்றனர்.