பாடல் #1515

பாடல் #1515: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

தீம்புன லான திகையது சிந்திக்கி
லாம்புன லாய்வறி வார்க்கமு தாய்நிற்குந்
தேம்புன லான தெளிவறி வார்கட்குக்
கோம்புன லாடிய கொல்லையு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தீமபுன லான திகையது சிநதிககி
லாமபுன லாயவறி வாரககமு தாயநிறகுந
தெமபுன லான தெளிவறி வாரகடகுக
கொமபுன லாடிய கொலலையு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தீம் புனல் ஆன திகை அது சிந்திக்கில்
ஆம் புனல் ஆய் அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புனல் ஆன தெளிவு அறிவார்கட்கு
ஓம் புனல் ஆடிய கொல்லையும் ஆமே.

பதப்பொருள்:

தீம் (நல்ல சுவையோடு இனிமையான / மூலாதார அக்னியில் இருக்கின்ற) புனல் (தண்ணீர் / அமிழ்தம்) ஆன (ஆனது) திகை (எந்த திசையில் இருக்கின்றது) அது (என்பதை) சிந்திக்கில் (சிந்தித்து பார்த்தால்)
ஆம் (மேலிருந்த வருகின்ற / சகஸ்ரதளத்தில் இருந்து வருகின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீர் / அமிழ்த நீர்) ஆய் (ஆகவே) அறிவார்க்கு (அதை அறிந்தவர்களுக்கு) அமுதாய் (நல்ல நீராக / நன்மை தரும் அமிழ்தமாக அதுவே) நிற்கும் (நிற்கும்)
தேம் (அப்போது சேர்ந்து இருக்கின்ற / சகஸ்ரதளத்திலிருந்து இறங்கி வந்து அன்னாக்கில் தங்கி இருக்கின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீர் / அமிழ்தம்) ஆன (ஆகிய) தெளிவு (கிணற்றில் / ஞானத்தை தெளிவாக)
அறிவார்கட்கு (சேமித்து வைக்கும் முறை அறிந்தவர்களுக்கு / அறிந்து உணர்ந்தவர்களுக்கு)
ஓம் (ஓடுகின்ற / அன்னாக்கிலிருந்து உடல் முழுவதும் பரவுகின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீரினால் / அமிழ்த நீரினால்) ஆடிய (பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து / உடலுக்கு சக்தியும் பேரின்பமும் கொடுத்து) கொல்லையும் (விவசாய நிலத்தில் பயிர்களை வளர்க்கும் முறை / ஞானத்தை வளர்க்கின்ற முறை) ஆமே (அது ஆகும்).

உவமை விளக்கம்:

நல்ல சுவையோடு இனிமையான தண்ணீரானது எந்த திசையில் இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்த்தால் மேலிருந்த வருகின்ற ஆற்றுத் தண்ணீராகவே அதை அறிந்தவர்களுக்கு நல்ல நீராக அதுவே நிற்கும். அப்போது சேர்ந்து இருக்கின்ற ஆற்றுத் தண்ணீராகிய கிணற்றில் சேமித்து வைக்கும் முறை அறிந்தவர்களுக்கு ஓடுகின்ற ஆற்றுத் தண்ணீரினால் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து விவசாய நிலத்தில் பயிர்களை வளர்க்கும் முறை அதுவாகும்.

கருத்து விளக்கம்:

மூலாதார அக்னியில் இருக்கின்ற அமிழ்தமானது எந்த திசையில் இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்த்தால் சகஸ்ரதளத்தில் இருந்து வருகின்ற அமிழ்த நீராகவே அதை அறிந்தவர்களுக்கு நன்மை தரும் அமிழ்தமாக அதுவே நிற்கும். அப்போது சகஸ்ரதளத்திலிருந்து இறங்கி வந்து அன்னாக்கில் தங்கி இருக்கின்ற அமிழ்தமாகிய ஞானத்தை தெளிவாக அறிந்து உணர்ந்தவர்களுக்கு அன்னாக்கிலிருந்து உடல் முழுவதும் பரவுகின்ற அமிழ்த நீரினால் உடலுக்கு சக்தியும் பேரின்பமும் கொடுத்து ஞானத்தை வளர்க்கின்ற முறை அதுவாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.