பாடல் #153

பாடல் #153: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டைவிட்டு நம்பி நடக்கின்ற வாறே.

விளக்கம்:

தன் நாட்டிற்கு அரசனாகவும் குடிமக்களில் முதல்வனாகவும் இருப்பவன் பலவித பல்லக்கில் ஏறித் திரிந்தவன் கடைசியில் சுடுகாட்டிற்குச் செல்லும் பாடையில் உயிர் பிரிந்து கிடக்க அவனது நாட்டின் குடிமக்கள் அவனுக்குப் பின்னால் வர அவனுக்கு முன்னால் பறை அடிப்பவர்கள் மத்தளம் கொட்ட இதுவரை அவன் ஆட்சி செய்த நாட்டைவிட்டு சுடுகாட்டுக்கு அவன் செல்லும் முறை இதுவே ஆகும்.

உட்கருத்து: நாட்டின் தலைவன் என்றாலும் கடைசியில் ஒரு நாள் சுடுகாட்டுக்குப் போய்தான் ஆகவேண்டும். போகும்போது மக்கள் பின்வந்தாலும் அவர்கள் உடன் வர மாட்டார்கள். அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள்.

பாடல் #154

பாடல் #154: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

விளக்கம்:

மனித உடலில் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழுகின்றன. இந்தத் தொண்ணூற்றாறு தத்துவங்களாலும் செய்யப்பட்ட மதிலாகிய உடல் சூழ்ந்த கோயிலுக்குள் ஆன்மாவாகிய உயிர் வாழுகின்றது. எப்போது அந்தக் கோயிலாகிய உடல் பழுதடைந்து கெட்டு உயிர் போகிறதோ அப்போது அதன் மதிலாக இருந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஒன்றாக ஓடி விடுகின்றன.

96 தத்துவங்கள் – 25 பஞ்சபூத காரியங்கள், 5 வாசனாதிகள்/அவத்தைகள், 10 வாயுக்கள், 10 நாடிக்கள், 4 வாக்குகள், 3 மலங்கள், 3 குணங்கள்) 5 சிவ தத்துவம், 7 வித்யா தத்துவம், 24 ஆன்ம தத்துவம்.

பாடல் #155

பாடல் #155: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே.

விளக்கம்:

தேன் நிறைந்த வாசனை மிக்க மலர்களைத் தன் கூந்தலில் சூடியிருக்கும் மனையாளும் சம்பாதித்த செல்வங்களும் சொத்துக்களும் ஒருவன் இருந்த ஊரிலேயே தங்கிவிட அவன் மட்டுமே பாடையில் ஏற்றப்பட்டு ஊருக்குப் பொதுவாக வெளியில் இருக்கும் சுடுகாட்டுக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அவனது குழந்தைகளும் சுற்றத்தாரும் அன்பு கலந்த சோகத்தோடு அவனது உடலைப் பாடையிலிருந்து வாங்கி சுடுகாட்டில் வைத்து சுட்டெரித்துவிட்டு அல்லது புதைத்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுவிடுவார்கள்.

கருத்து : தேடிய சொத்துக்கள் மனைவி மக்கள் அனைத்தும் வீட்டிலேயே இருக்க தேடியவன் மட்டும் காட்டில் எரிக்கப்படுவான் என்பதை இப்பாடலில் உணரலாம்.

பாடல் #156

பாடல் #156: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாதுநின் றிளைக்கின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #155 இல் கூறியபடி தேடிய சொத்துக்கள் மனைவி மக்கள் அனைத்தும் வீட்டிலேயே இருக்க தேடியவன் மட்டும் காட்டில் எரிக்கப்படுவான் என்று கண்கூடாக கண்ட மனிதர்கள் கூட தங்களின் உடலைவிட்டு உயிர் என்றும் பிரியாது இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பெரும் பாடுபட்டு பலவித செல்வங்கள் சேர்ப்பதும் சேர்த்த செல்வங்களின் மேலே அதிகமான ஆசை வைப்பதும் அவரைத் பின்பற்றி மற்றவர்களும் அவ்வாறே செய்வதும் இதனால் அவர்கள் பிறவியோடு வந்த கர்ம நிலைகள் மாறாமலேயே அவர்களும் உடல் இளைத்து வயதாகி ஒரு நாள் அவர்கள் முதலில் கண்டவனைப் போலவே உயிர்பிரிந்து சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவதையும் பார்த்தால் இவர்களின் எண்ணத்தை என்னவென்று சொல்வது?

பாடல் #157

பாடல் #157: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலைப் போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலையில் மூழ்குவர் நீதியில் லாரே.

விளக்கம்:

ஒருவன் இறந்தபின் அவனது உடலைச் சுற்றி நின்று கூவி ஒப்பாரி வைக்கும் உறவினர்களும் சுற்றத்தாரும் மனைவியும் மக்களும் அவனது உடலை ஊரின் எல்லை சுடுகாடு வரை எடுத்துச் சென்றபின் தங்களின் நெற்றியின் மேல் அரும்பிவிட்ட வேர்வையை துடைத்து நீக்குவது போல் அவனது உடலையும் இறக்கி வைத்து விறகுகளை அடுக்கி அதற்கு நெருப்பு மூட்டிவிட்டு நீரினில் தலை முழுகி விட்டுச் சென்று விடுபவர்கள். தனக்கு உறுதிணையாய் இருந்த அவனது உடலையும் அவனது அன்பையும் அப்போதே மறந்துவிட்ட நீதியில்லாதவர்கள் இவர்கள்.

கருத்து: ஒருவன் இருக்கும் வரை அவன் மூலம் கிடைத்த அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அவனோடு அன்பாக இருந்தவர்கள் அவன் இறந்ததும் அனைத்தையும் மறந்துவிட்டும் தங்களுக்கும் ஒரு நாள் இறப்பு வரும் என்பதை நினைத்துப் பார்க்காதவர்கள் நீதியில்லாதவர்கள்.

பாடல் #158

பாடல் #158: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.

விளக்கம்:

இந்த உலகம் முழுவதும் பிறக்கின்ற உயிர்களின் உடல்கள் எல்லாம் அழகாக செய்யப்பட்ட மண்குடம் போன்றது. தாயின் வளமை பொருந்திய இடையின் முன்பிருக்கும் வயிற்றிலிருக்கும் குளமாகிய கருப்பைக்குள் சுரோணிதமாகிய மண் மற்றும் சுக்கிலமாகிய நீர் கலந்து குயவனாகிய இறைவனால் படைந்த உடல் இது. மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்து போனால் கூட ஓடாக பயன்படும் என்று வைத்திருக்கும் மனிதர்கள் தோலாகிய மண்ணால் செய்யப்பட்ட இந்த உடலாகிய குடம் உடைந்து போனால் (இறந்து போனால்) மட்டும் வைத்திருக்காமல் வெளியே எடுத்துச் சென்று சுடுகாட்டில் வைத்து எரித்துவிடுவார்கள்.

கருத்து: களிமண்ணால் செய்யப்பட்ட உடைந்த குடத்திற்கு இருக்கும் மதிப்பு கூட உயிர்பிரிந்த உடலுக்கு கிடையாது.

பாடல் #159

பாடல் #159: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஐந்து தலைப்பறி யாறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்தது கிடந்தது மேலறி யோமே.

விளக்கம்:

ஐம்புலன்களும் செயல்படும் தலையாய ஐந்து இந்திரியங்களும் (கண், காது, மூக்கு, வாய், தோல்) நாடிகளோடு பினைந்துக் கிடக்கும் ஆறு ஆதாரங்களும் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) முப்பது எலும்புகளும் அந்த எலும்புகளை இணைக்கும் பதினெட்டு மூட்டுக்களும் இவை அனைத்தையும் போர்வை போல மூடி வைத்திருக்கும் தோலும் அந்தத் தோலிலுள்ள ஒன்பது துவாரங்களும் (2 கண், 2 காது, 2 நாசி, வாய், பால்குறி, ஆசனவாய்) பதினைந்துவித எலும்புவரிகளும் (மண்டையெலும்பு, தாடையெலும்பு, கழுத்தெலும்பு, மார்பெலும்பு, முதுகெலும்பு, முதலியன) ஆகிய அனைத்தும் சேர்ந்து இருக்கும் இந்த மனித உடலானது இறந்தபின் சுடுகாட்டில் கொண்டுபோய் எரிக்கப்படும்போது அனைத்தும் எரிந்து வெறும் சாம்பல் மட்டுமே கிடக்கும். அப்படி வெந்து கிடக்கும் சாம்பலுக்குப் பிறகு அந்த உயிருக்கு என்னவாகின்றது என்பதை யாரும் அறிவதில்லை.

பாடல் #160

பாடல் #160: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

விளக்கம்:

அத்திப்பழத்தையும் (பெண்ணின் உடல்தரும் சுரோணிதம்) நல்ல அரைக்கீரை வித்தையும் (ஆணின் உடல்தரும் சுக்கிலம்) ஒன்றாகக் கலக்கும்படி கொத்தி (ஆணும் பெண்ணும் ஒன்றாக சேருதல்) அதை உலையில் வைத்து (கருப்பை) கூழாக (தூமை எனப்படும் குழந்தையின் சதை உருவம்) சமைத்து வைத்தனர் பெற்றோர். பின்பு அத்திப்பழமாகிய சுரோணிதத்தை அரைக்கீரை வித்தாகிய சுக்கிலம் உண்டு குழந்தையின் உடலாக மாறிவிட்டபின் பிரசவ வேதனையில் கதறி அதைப் பெற்றெடுத்தவர்கள் ஒரு நாள் அந்த உடல் இறந்தபின் அதை எரிக்க சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

கருத்து: சில பொருள்கள் சேர்த்து சாப்பாடு சமைப்பது போலவே ஆணும் பெண்ணும் சேர்ந்து சமைத்த இந்த மனித உடல் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரத்தைக் கழுவி எடுத்து வைத்ததுபோல ஒரு நாள் உயிர் போனபின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்டுவிடும். நன்றாக சமைத்த சாப்பாடும் நிரந்தரமாக பசியைப் போக்காதது போலவே உடலும் நிரந்தரமாக இருக்காது.

பாடல் #161

பாடல் #161: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

விளக்கம்:

இந்த மனித உடலாகிய வீட்டிற்கு மேலும் கூரையில்லை (உச்சியில் தலை மட்டுமே) அடியிலும் செப்பனிட்ட தளமில்லை (காலுக்குக்கீழ் ஒன்றுமில்லை) வீட்டின் சுவரைத் தாங்கும் கழிகளும் இரண்டுதான் இருக்கின்றது (இரண்டு கால்கள் மட்டுமே) அதன் நடுவில் உத்திரத்தைத் தாங்கும் கழி (முதுகெலும்பு) ஒன்றுதான் இருக்கிறது. இப்படி இருக்கும் வீட்டிற்கு சொந்தக்காரனோ (மனித உயிர்) வீட்டை என்றும் அழியாமல் உறுதியாக வைக்கத் தெரியாமல் விட்டுவிட்டான் (சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை செலுத்தத் தெரியாமல் விட்டுவிட்டான்). வேலையால் (வினைக் கர்மங்கள்) செய்யப்பட்ட இந்த வெள்ளிக் கோயில் போன்ற உடல் (வெள்ளை நிற சுக்கிலத்தால் உருவானது) வீணே அழிந்து போகின்றது (இறந்து போகின்றது).

கருத்து: இறைவன் மனித உடலில் கூரையாக சகஸ்ரர தள பரவெளியையும் அடித்தளமாக குண்டலினி சக்தியையும் கால்களாக இடகலை பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளையும் தாங்கும் முதுகெலும்பாக நடுவில் சுழுமுனை நாடியையும் கொடுத்து உடம்பை ஒரு கோயிலாக படைத்திருக்கின்றான். இருப்பினும் உயிர்கள் தம் உடலிலுள்ள குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலெழுப்பி சகஸ்ரர தளத்தில் சேர்த்து என்றும் அழியாத உடலைப் பெறும் வழியைத் தெரிந்து கொள்ளாமல் தங்களின் வாழ்க்கையை வீணே கழித்து ஒரு நாள் அழிந்து போகின்றார்கள்.

பாடல் #162

பாடல் #162: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

விளக்கம்:

நாட்டியம் ஆடுகின்ற கலைக்கூடம் வெறுமனே கிடக்கின்றது (உயிர் ஆடிய உடல் செத்துக் கிடக்கின்றது). அங்கே அழகிய அலங்காரங்கள் எதுவும் இல்லை (பிணத்திற்கு அழகு இல்லை). நாட்டியம் ஆடும் சுதியும் லயமும் இல்லை (மூச்சுக் காற்றும் இருதயத் துடிப்பும் இல்லை). அந்தக் கலைக்கூடத்தில் பாடுகின்றார்கள் சிலர் (பண்டாரங்கள் பறையறைந்து பாடுதல்) சுதியும் லயமும் இல்லாமல் வெறும் பண் வைத்துப் பாடுவது அழுவதுபோல இருக்கிறது (பிணத்தைச் சுற்றி ஒப்பாரி வைத்து அழுகின்றார்கள்). இதனால் அழகிய நாட்டியத்தைக் காண வேண்டும் என்று தேடி வந்தவர்களின் ஆசைத் தீயினில் ஏமாற்றமெனும் தீயை வைத்து ஆசையை எரித்துவிட்டார்கள் (காய்ந்த விறகுகளைத் தேடி எடுத்து வந்து வைத்த தீயினில் உடலை வைத்து எரித்துவிட்டார்கள்).

கருத்து: உயிர் இருக்கும் வரை ஓயாது ஆசை எனும் தீயினில் ஆடும் இந்த உடல் அந்த உயிர் பிரிந்தவுடன் மற்றவர்கள் வைத்த தீயினில் வெந்து சாம்பலாகின்றது. அழிகின்ற உடலை நம்பி ஆசை எனும் தீயினில் ஆடாமல் இறைவனை நாடி என்றும் நிலைத்திருக்கும் வழியைத் தேட வேண்டும்.