பாடல் #1241

பாடல் #1241: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆமயன் மாலர னீசன்மா லாங்கதி
ஓமய மாகிய வொன்பது மொன்றிடத்
தேமய னாளுந் தெனாதென வென்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

விளக்கம்:

பாடல் #1240 இல் உள்ளபடி அம்மை அப்பராகிய இறைவன் இறைவியோடு தாமும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்குள்ளேயே அடங்கி பேரின்பத்தில் இருக்கின்ற சாதகர்கள் தமக்குள் இருக்கின்ற ஒன்பது மண்டலங்களிலும் ஓங்கார மந்திரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட ஒன்பது தெய்வங்களோடும் தாமும் சேர்ந்து ஓங்காரத்தின் நாதத் தன்மை பெற்றுவிடுவார். அதன் பிறகு தனக்குப் பிடித்த வகையான தேன் இருக்கின்ற பூவைத் தேடி மொய்த்து அதிலிருக்கும் தேனை உறிஞ்சிக் குடித்து இன்பத்தில் திளைத்திருக்கும் தேனீக்களைப் போல சாதகரும் தமக்குக் கிடைக்கப் பெற்ற ஓங்காரத்தின் நாதத் தன்மையில் கிடைக்கும் பேரின்பத்திலேயே திளைத்து இருப்பார்.

சாதகருக்குள் இருக்கின்ற ஒன்பது மண்டலங்கள்:

  1. மூலாதாரம் – சூரிய மண்டலம்
  2. சுவாதிஷ்டானம் – பிரம்மா
  3. மணிபூரகம் – திருமால்
  4. அனாகதம் – உருத்திரன்
  5. விசுக்தி – மகேஸ்வரன்
  6. ஆக்ஞா – சதாசிவம்
  7. சகஸ்ராரம் – பரா
  8. துவாதசாந்த வெளி (தலை உச்சியிலிருந்து 12 அங்குலம் தூரத்தில் உள்ளது) – பரை
  9. சந்திர மண்டலம் (துவாதசாந்த வெளிக்கு மேலே ஆகாயத்தில் உள்ளது) – பராபரை

பாடல் #1242

பாடல் #1242: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களுங்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

விளக்கம்:

பாடல் #1241 இல் உள்ளபடி ஓங்காரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட சாதகரைத் தேடி வந்து அவரது திருவடியைப் போற்றி வணங்கி நின்று தேவர்களும் அசுரர்களும் இந்திரன் முதலாக எட்டு திசைக்கும் தலைவர்களாக இருக்கின்றவர்களும் சாதகர் தமக்குள்ளேயே நறுமணம் மிக்க மலர்களைச் சூடிக்கொண்டு இருக்கும் அழகிய கூந்தலைக் உடைய இறைவியையும் அவளோடு ஒன்றாகச் சேர்ந்து அனைத்திற்கும் அரசனாக இருக்கின்ற இறைவனையும் தமது வழிபாட்டின் மூலமே சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியை சொல்லி அருளுமாறு வேண்டிக் கொள்வார்கள்.

எட்டு திசைக்கும் தலைவர்கள் இருப்பவர்கள்:

பாடல் #69 மற்றும் #70 இல் உள்ளபடி முதல் நான்கு திசைகளுக்கும் தலைவர்களாக இருப்பவர்கள்:

  1. இந்திரன்
  2. சோமன்
  3. பிரம்மன்
  4. உருத்திரன்

மற்ற நான்கு திசைகளுக்கு தலைவர்களாக இருப்பவர்கள்:

  1. எமதருமன்
  2. குபேரன்
  3. வருணதேவன்
  4. வாயுதேவன்

பாடல் #1243

பாடல் #1243: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங்
கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம்
பயிற்று முலகினிற் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

விளக்கம்:

பாடல் #1242 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியைச் சொல்லி அருளுமாறு வேண்டிக் கொண்டவர்களுக்கு அவர் கூறிய வழியாவது இறைவனை நினைத்து அவரின் நன்மையான மந்திரங்களை ஓதி நறுமணம் மிக்க மலர்களைத் தூவி தூய்மையான வாசனை மிக்க தூபத்தைக் காட்டி மனதையும் ஐந்து புலன்களையும் அடக்கி வைத்து எண்ணங்கள் முழுவதையும் தூய்மைப் படுத்தி கவர்ந்து கொள்கின்ற தூய்மையான நெய்யில் எரிகின்ற தீபத்தை ஏற்றி வைத்து வேத ஆகமங்கள் அருளிய முறைப்படி இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து உலகங்களுக்கும் தலைவனாகிய இறைவனுக்கு பூசை செய்து அனைத்து உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கின்ற அந்த இறைவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இறைவனையும் இறைவியையும் சென்று அடையும் வழி இதுவே என்று அருளுகின்றார்.

பாடல் #1244

பாடல் #1244: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தாங்கி யுலகிற் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவ னுலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்று
பாங்குட னேற்பப் பராசத்தி போற்றே.

விளக்கம்:

பாடல் #1243 இல் உள்ளபடி உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கின்ற பரம்பொருளான இறைவன் அண்ட சராசரங்களையும் தாங்கி நின்று அதிலிருக்கும் அனைத்து உலகங்களாகவும் அதிலிருக்கும் அனைத்து பொருட்களாகவும் இருக்கின்றான். அனைத்தும் அழிந்து போகின்ற பேரூழிக் காலத்திலும் கூட தான் ஒருவன் மட்டும் எப்போதும் அழியாமல் இருக்கின்றான். பசுமையான கிளியை தனது திருக்கையில் ஏந்திக் கொண்டு சுருண்ட அழகிய கூந்தலை உடைய இறைவியானவள் அப்போதும் இறைவனின் மேன்மையான நிலைக்கு ஏற்பவே தாமும் அவனுடன் சரிசமமான பாகமாகக் கலந்து நின்று இருவரும் சேர்ந்து இருக்கின்ற தன்மையில் பராசக்தியாக இருக்கின்றாள். ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் இவர்கள் இருவரையும் போற்றி வழிபடுங்கள்.

பாடல் #1245

பாடல் #1245: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பொற்கொடி மாதர் புனைகழ லேத்துவர்
அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

விளக்கம்:

பாடல் #1238 இல் உள்ளபடி இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரின் பேரழகுடைய திருவடிகளை தூய்மையின் உருவமாக தங்க நிறத்தில் கொடி போல மென்மையாக இருக்கும் உப சக்திகள் அனைவரும் நாடி வந்து போற்றி வணங்குவார்கள். அந்த உப சக்திகளின் நிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கின்ற அனைத்து உயிர்களும் இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர் மாயையின் உருவத்தில் கருமை நிறத்தில் கொடி போன்ற மென்மையுடன் இருக்கும் போது அவரை நாடி வருகின்ற உயிர்களுக்கு தலைவியாகவும் இருக்கின்றார். அவரே உயிர்களுக்கு நன்மை தரும் உருவமாக கொடி போன்ற மென்மையுடன் மூன்று கண்களைக் கொண்டு மாயையை நீக்கி உண்மையை உணர்த்தும் போது இறைவியின் பேரொளியின் உருவத்தில் இருக்கும் அவரை விரும்பி போற்றி வணங்கி நீங்களும் உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.

பாடல் #1246

பாடல் #1246: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொ ளிலம்பிய மொன்று தொடரே.

விளக்கம்:

பாடல் #1245 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் விளங்கிக் கொண்ட பேரொளியாக இருக்கின்ற இறைவியானவள் தனது கழுத்தில் எப்போதும் பிரகாசமாக ஒளி வீசுகின்ற மணி மாலையை அணிந்திருக்கின்றாள். உயிர்களுக்குள் மிகுதியாக இருக்கின்ற ஆணவ மலம் நீங்கி அவர்கள் தாம் யார் என்பதை உண்மையாக உணர வேண்டும் என்பதற்காக நீல நிறக் கழுத்துடன் இருக்கின்ற இறைவனோடு மிகுந்த அன்பு கொண்டு அவருடன் சேர்ந்து இருந்து ஆணவ மலங்களை நீக்கி அருளுகின்றாள். கிடைப்பதற்கு அரிய அந்த பெரும் பேறை நீங்களும் அடைய வேண்டும் என்றால் இறைவியோடு தியானத்தில் எப்போதும் ஒன்றி இருந்து அவளைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்.

பாடல் #1247

பாடல் #1247: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தொடங்கி யுலகினிற் சோதி மணாளன்
அடங்கி இருப்பதெ னன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடு மோருரு வாமே.

விளக்கம்:

ஆரம்பத்திலிருந்தே உலகத்தில் எப்போதும் ஒளி வடிவான இறைவியுடன் துணையாகவே சேர்ந்து இருக்கும் இறைவனே எமது உள்ளத்திற்குள்ளும் பேரன்பின் உச்ச நிலையாக எப்போதும் வீற்றிருக்கின்றான். இந்த இறைவனே பாடல் #1245 இல் உள்ளபடி சாதகர்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற இறைவிக்குள்ளும் எப்போதும் அடங்கி ஒரே உருவமாக தனது கழுத்தில் விஷம் கொண்ட பாம்பையும் பின்னிய நீண்ட சடையின் உச்சியில் எப்போதும் பொங்கி வழிகின்ற கங்கையையும் கொண்டு வீற்றிருக்கின்றான்.

பாடல் #1248

பாடல் #1248: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உருவம் பலவுயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிப்
புரிவளைக் கைச்சியெம் பொன்னணி மாதை
மருவி யிறைவன் மகிழ்வன மாயமே.

விளக்கம்:

பல்வேறு விதமான உயிர்களில் அந்தந்த உருவமாகவே இருக்கும் வல்லமையை உடையவனும் பாடல் #1247 இல் உள்ளபடி இறைவியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற சாதகருக்குள் பாம்பும் கங்கையையும் அணிந்து இருக்கின்றவனும் ஆகிய இறைவனை தமக்குள் ஆராய்ந்து தேடிப் பார்த்து உணர்ந்து கொண்டால் அவனே குருநாதகராக வீற்றிருந்து பலவிதமான செயல்களைப் புரிந்து அருளும் அழகிய வளையல்களை அணிந்த திருக்கைகளையும் தங்க அணிகலன்களை முழுவதும் அணிந்திருக்கும் திருமேனியையும் உடைய இறைவியாகவே தான் மாறி இருக்கும் திருக்கோலத்தைக் காட்டி அருளுவதை பேரின்பத்தோடு பார்த்தால் ஒரு மாபெரும் அதிசயமாகவே இருக்கின்றது.

பாடல் #1249

பாடல் #1249: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்குஞ் சலந்தீ யமலனைக்
காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.

விளக்கம்:

அசையா சக்தியாகிய இறைவனுக்குள் அண்ட சராசரங்களையும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களையும் அதற்குள் அனைத்து உயிர்களையும் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும் போது அவரிடமிருந்து அசையும் சக்தியாகப் பிரிந்து வருகின்ற இறைவியின் மாயா அம்சத்தோடு உலகங்களும் உயிர்களும் உருவாக வேண்டும் என்ற காரணத்திற்காக சேருகின்ற நீண்ட சடையை உடைய மாசற்ற இறைவன் தம்மை அறிந்து அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற உயிர்களுக்கு அருள வேண்டும் என்கிற பெருங்கருணையில் உயிர்களின் உடலை பஞ்ச பூதங்களிலுள்ள நீரையும் நெருப்பையும் கலந்து உருவாக்கும் போது தமது திருவடியையும் சேர்த்தே வைத்து உருவாக்கி அருளுகின்றான். உயிர்கள் பிறவி எடுப்பதற்கு தேவையான உடலை உருவாக்க வேண்டி இறைவனுடன் சேர்ந்து கலக்கின்ற பராசக்தியாகிய இறைவியும் தங்களின் கலப்புக்குள்ளிருந்து பலவித உருவங்களோடு உயிர்கள் அனைத்தையும் ஒரு மாபெரும் கூட்டமாக உலகங்கள் அனைத்திலும் சேர்ந்து பிறப்பதற்கு மாபெரும் காரணமாக இருக்கின்றாள்.

உட்கருத்து:

கர்மங்களைத் தீர்த்துக் கொள்ள மாயையுடன் உயிர்களைப் படைத்தாலும் அந்த மாயை நீங்கி உண்மையை உணர்ந்து தம்மிடம் வந்து அடைவதற்கான ஆதாரமாக தமது திருவடியை உயிர்களுக்குள் வைத்தே படைத்து அருளுகின்றான் இறைவன். தமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து பற்றிக் கொண்ட உயிர்களுக்கு கிடைக்கும் மாபெரும் ஆதேயமாக இறைவனின் திருவருள் இருக்கின்றது.

பாடல் #1250

பாடல் #1250: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உணர்ந்தொழிந் தேனுவ னாமெங்க ளீசன்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரை
அணைந்தொழிந் தேனெங்க ளாதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்தன் னருள்பெற்ற வாறே.

விளக்கம்:

பாடல் #1249 இல் உள்ளபடி எமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து மாயையை ஒழித்து பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகின்ற பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து கொண்டேன். அவனோடு ஒன்றாகக் கலந்து நின்று நான் எனும் அகங்காரத்தை ஒழித்தேன். அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கின்ற அவனோடு ஒன்றாகச் சேர்ந்து நின்று அவனது திருவடிகளைத் தவிர வேறு பற்றுக்கள் அனைத்தையும் ஒழித்தேன். அவனோடு பின்னிப் பிணைந்து என்னையே நான் ஒழித்துவிட்டேன். ஆதலால் யானும் இறைவனும் ஒன்றே எனும் திருவருளை யாம் பெற்ற வழி இதுவே.