பாடல் #1231

பாடல் #1231: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

அதுவிது வென்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

விளக்கம்:

பாடல் #1230 இல் உள்ளபடி முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் சரியான வழியை தெரிந்து கொள்ளாமல் அது என்றும் இது என்றும் பலவிதமான வழிகளில் சென்று வாழ்நாட்களை வீணாகக் கழிக்காமல் அடியவர்களை மயக்கும் தேன் கொண்டு மலர்ந்து இருக்கும் நறுமணம் மிக்க பூக்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலுடன் என்றும் இளமையுடன் இருக்கும் நன்மையின் வடிவான இறைவியும் அவளோடு சேர்ந்து இறைவனும் தமக்குள் வீற்றிருக்கும் சகஸ்ரதளத்தில் தமது குண்டலினி சக்தியை பாடல் #1230 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்திலிருந்து மேலேற்றிச் சென்று சேர்த்து அங்கிருக்கும் அமிழ்தத்தைப் பருகி அங்கிருக்கும் இறைவனையும் இறைவியையும் உணர்ந்து அவர்களைப் பணிந்து வணங்க முடிந்தவர்களுக்கு அவர்களின் விதி என்று சொல்லப்படும் அனைத்து கர்மங்களையும் ஆணவத்தையும் மாயையும் வென்றுவிட முடியும்.

பாடல் #1232

பாடல் #1232: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

விளக்கம்:

பாடல் #1231 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் உண்மையாக உணர்ந்து அவர்களைப் பணிந்து வணங்க முடிந்தவர்களால் விதியென்று சொல்லும் அனைத்து கர்ம வழிகளையும் அதனால் இருக்கும் ஆணவத்தையும் மாயையும் வினையினால் உருவாகும் பெரும் பந்த பாசத்தையும் ஆசையை உருவாக்கி மயக்குகின்ற ஐந்து புலன்களையும் அதனால் வருகின்ற ஆசைகளையும் வென்று விட முடியும்.

பாடல் #1233

பாடல் #1233: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரங் குழலாளு மப்பதி தானுமுன்
சாரும் பதமிது சத்திய மாமே.

விளக்கம்:

பாடல் #1232 இல் உள்ளபடி உண்மையான ஞானத்தை உணர்ந்து தெளிந்தவர்கள் அறிந்து கொண்ட மெய்யுணர்வாக இருக்கின்ற ஐம்பத்தோரு அட்சரங்களாகவும் அந்த அட்சரங்களுக்கு தேவதைகளாக பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டு இருக்கின்ற அனைத்து தேவர்களுக்குள்ளும் ஒன்றாகக் கலந்து நிற்பது பரம்பொருளாகும். அந்தப் பரம்பொருளும் நறுமணமும் மருத்துவ குணமும் கொண்ட கோடக மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலைக் கொண்ட இறைவியையும் முதன்மையாகக் கொண்டு அவர்களைச் சார்ந்து இருக்கின்ற மெய்யுணர்வு பெற்றவர்களுக்கு அருளுகின்ற திருவடிகளாகவும் சத்தியத்தின் உருவமாகவும் இருக்கின்றது சிவசக்தியே ஆகும்.

பாடல் #1234

பாடல் #1234: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது வின்றியே யெல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்
சித்துஅது மேவித் திருந்திடு வாரே.

விளக்கம்:

பாடல் #1233 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் முதன்மையாகக் கொண்டு அவர்களைச் சார்ந்து இருக்கின்ற சாதகர்கள் சத்தியத்தின் உருவமாக இருக்கின்ற இறைவியோடும் தாமாகவே தோன்றி எப்போதும் இருக்கின்ற இறைவனோடும் தாமும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்ற உண்மையான ஞானத்தை உணர்ந்து விட்டால் விதை போட்டால் பயிர் வளரும் என்கிற உலக நியதிக்கு எதிராக விதை போடாமலே அனைத்து பயிர்களும் விளைந்து விடும் அதிசயம் போல அனைத்து ஞானங்களும் அவர் முயற்சி செய்யாமலேயே இறையருளால் அவருக்கு கிடைக்கப் பெறும். அது போலவே பாடல் #1224 இல் உள்ளபடி அவருக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஐம்பத்தோரு அட்சரங்களும் அவற்றுக்கு அதிபதியான தேவர்களும் அவரின் சித்தத்தில் இருக்கும் சிவத்தோடு கலந்து அவரின் சிந்தனைக்குள் இருக்கும் அனைத்து மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி மொத்தமும் நன்மையாகவே அவர் மாறிவிடுவார்.

பாடல் #1235

பாடல் #1235: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விட மாரமு தாக
இருந்தனள் தானங் கிளம்பிறை யென்றே.

விளக்கம்:

பாடல் #1234 இல் உள்ளபடி தமது சிந்தனைக்குள் இருக்கும் மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி மொத்தமும் நன்மையாகவே மாறிவிட்ட சாதகருக்குள் வீற்றிருக்கின்ற சிவனும் வில் போன்ற வளைந்த நெற்றியைக் கொண்ட இறைவியும் அவர்களோடு சேர்ந்து வந்து வீற்றிருக்கும் விண்ணுலகத்து தேவர்களும் சாதகருக்குள் இருக்கும் ஒன்றான அம்சத்தை புகழ்ந்து போற்றி வணங்கி வழிபட அவர்கள் அருந்துவதற்கு அந்த இடத்திலேயே எப்போதும் தெகிட்டாத அமிழ்தமாகவும் வளர் பிறைச் சந்திரனாகவும் இறைவியே இருக்கின்றாள்.

பாடல் #1236

பாடல் #1236: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

என்று மெழுகின்ற ஏரினை யெய்தினார்
அன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1235 இல் உள்ளபடி எப்போதும் தெகிட்டாத அமிழ்தமாக எழுச்சியோடு இருந்து கொண்டே இருக்கின்ற பேரழகு வாய்ந்த இறைவியை தமக்குள் உணர்ந்து அடைந்தவர்கள் அடைந்த அந்தப் பொழுதிலேயே இறைவியாகவே ஆகிவிடுவார்கள். அவர்களோடு நீண்ட கூந்தலை உடைய இறைவியும் தீயவற்றை நீக்கி தூய்மையைத் தருகின்ற கங்கையாகவும் குளிர்ந்த ஒளியைத் தருகின்ற நிலவாகவும் மாபெரும் தவத்தைப் புரிந்த சாதகர்களோடு எப்போதும் பொருந்தி இருக்கின்ற நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாகவும் நிற்கின்றாள்.

பாடல் #1237

பாடல் #1237: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

விளக்கம்:

பாடல் #1236 இல் உள்ளபடி சாதகருக்குள் எப்போதும் பொருந்தி நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாகவும் நிற்கின்ற இறைவியானவள் அவரின் சக்திக்குத் தகுதியான ஆபரணங்களை சூடிக்கொண்டு இருக்கின்றாள். அவளோடு உண்மையான ஞானத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் சாதகர்கள் தங்களின் உள்ளுக்குள் இருக்கும் இறை ஒளியின் மூலம் அவளை முழுவதுமாக உணர்ந்து கொண்டு வீற்றிருக்கும் போது இதுவரை உலகத்தைக் கடந்து சென்ற ஆன்மாக்களின் எண்ணத்தில் அவர்கள் வேண்டிக் கொண்ட வேண்டுகோள்கள் அனைத்தும் வந்து சேரும். அப்போது அவர்களின் வேண்டுகோள்களுக்கு பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும்.

பாடல் #1238

பாடல் #1238: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடு மாங்கவ ளெய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.

விளக்கம்:

பாடல் #1237 இல் உள்ளபடி உலகத்தை கடந்து சென்ற ஆன்மாக்களின் வேண்டுகோள்களுக்கு பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும் போது அப்படி வேண்டிக்கொண்ட ஆன்மாக்களின் விருப்பமான தெய்வத்தின் உருவமாகவே சாதகரும் மாறி அவர்கள் வேண்டிக் கொண்டதை அடைவதற்கான தூய்மையான வழியைக் கொடுத்து அருளும் இறைவியாகவே வீற்றிருந்து பலவிதமான செயல்களைச் செய்து அருளுகின்றார். அப்படி அருளுகின்ற போது அழகிய மானைப் போன்ற கண்களைக் கொண்ட இறைவியும் பேரழகனாகிய இறைவனும் ஒன்றாக அவருக்கு எதிரில் வந்து வேண்டிக்கொண்ட ஆன்மாக்களுக்கு அருள் புரியும் போது இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரும் அதற்கு சாட்சியாக வீற்றிருக்கின்றார்.

பாடல் #1239

பாடல் #1239: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆயு மறிவுங் கடந்தணு வாரணி
மாயம தாகி மதோமகி யாயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயமது ஆய்நெறி யாகிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1238 இல் உள்ளபடி இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர்கள் நுண்ணியதாக அறியும் அறிவையும் தாண்டிய நிலையில் அணுவுக்குள் அணுவாகவும் மாயையாகவும் ஆகி நின்று அனைத்திற்கும் மேன்மையான பெருமையை உடையவளாகவும் இருக்கின்றாள். சிவந்த நிறத்தோடு என்றும் இளமையுடன் பேரானந்தத்திற்கும் மேலான சிவானந்தமாகவே இருக்கின்ற அவளே பேரழகுடன் பேரன்பின் வடிவமாகவே ஆகி சாதகர் செல்கின்ற மேன்மையான வழியாகவும் ஆகி நிற்கின்றாள்.

பாடல் #1240

பாடல் #1240: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடு மாங்கே யடங்கிட லாமே.

விளக்கம்:

பாடல் #1239 இல் உள்ளபடி சாதகர்கள் செல்கின்ற மேன்மையான வழியாகவே ஆகி அவரது வழிகளுக்குத் தகுதியான அணிகலன்களை அணிந்து கொண்டு நிற்கின்ற இறைவியை எப்போதும் இறைவனை விட்டுத் தனியாக பிரித்து வைத்து நினைக்காமல் பிண்ணிய சடை முடியில் கங்கையையும் பிறை நிலாவையும் சூடியிருக்கும் இறைவனுடனே இறைவியை ஒன்றாக சேர்த்து வைத்து எப்போது அதை நினைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தமது எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அவர்களின் மேல் வைத்து தியானிக்கும் சாதகர்கள் அம்மை அப்பராகிய அவர்கள் இருவரோடு தாமும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்குள்ளேயே அடங்கி பேரின்பத்தில் இருப்பார்கள்.