பாடல் #367

பாடல் #367: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப்பேறு

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதம் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே.

விளக்கம்:

திருக்கயிலாய வெள்ளி மலையின் மீது அமர்ந்திருக்கும் பிறப்பு இறப்பு இல்லாத இறைவன். ஏழு உலகங்களை படைத்து அந்த உலக தொழில்கள் சீராக நடைபெற திருமாலுக்கு கை பெருவிரலினை ஒட்டி அந்தரத்தில் பறப்பது போல் சக்கரம் தந்து அருளினான். இவ்வுலக தொழில்கள் சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அகங்காரத்தினால் ஏதேனும் தடை ஏற்பட்டால் திருமால் தனது சக்கராயுதத்தால் அகங்காரத்தை அழித்து இவ்வுலகைக் காப்பான்.

Related image

பாடல் #368

பாடல் #368: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கஒண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தான்கூறு செய்ததே.

விளக்கம்:

பாடல் #367ல் உள்ளபடி இறைவனிடம் பெற்ற உலகைக்காக்கும் வலிமை மிக்க சக்கரத்தை தனது கரத்தில் தாங்கும் சக்தி இல்லாததால் திருமால் அனைத்திலும் மேலான வலிமையுடைய இறைவனை அன்புடன் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ள அவனது வேண்டுதலுக்கு மனமிறங்கிய இறைவனும் தனது சக்தியிலிருந்து ஒரு பகுதியை திருமாலுக்குக் கொடுத்து சக்கரத்தைத் தாங்கும் வல்லமை பெறச்செய்து அருளினான்.

Related image

பாடல் #369

பாடல் #369: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

கூறது வாகக் குறித்துநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சக்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

விளக்கம்:

உலகைக்காத்து உலகத்தொழில்கள் சீராக நடைபெற இறைவன் தனது ஆற்றலின் ஒரு பகுதியில் சக்கரத்தை படைத்தார். தனது ஆற்றலின் ஒரு பகுதியான சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தாருளினார். திருமால் அந்த சக்கரத்தை தாங்கும் வலிமை பெறுவதற்காக தமது சக்தியிலிருந்து ஒரு பகுதியையே கொடுத்து அருளினார். தனது ஆற்றலின் ஒரு பகுதியாக இருந்த சக்கரமும் அதன் சக்தியையும் திருமாலுக்கு கொடுத்தாலும் சக்கரமும் அதன் சக்தியாகவும் இருப்பவர் இறைவனே.

Related image

பாடல் #370

பாடல் #370: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.

விளக்கம்:

அறியாமையால் இறைவனை அழிக்க தக்கன் செய்த பெரிய வேள்வியை இறைவனின் அவதாரமான வீரபத்திரர் அழித்துத் தகர்த்தார். அப்போது வந்திருந்த திருமால் பிறை சந்திரனைச் சூடியிருக்கும் வீரபத்திரர் இறைவனின் அவதாரம் என்பதை உணராமல் வேள்வியை முறையின்றி அழித்துவிட்டதாக எண்ணி சக்கராயுதத்தை வீரபத்திரரின் பிறை சூடிய தலையை நோக்கி ஏவினான். அதைப் பார்த்த வீரபத்திரர் தமது கண்களில் நெருப்பு உமிழ அந்தச் சக்கரத்தைப் பார்த்து வாயிலிந்து ஒரு உக்கிர மிரட்டல் விட சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்தது.

குறிப்பு: பாடல் #369ல் உள்ளபடி தனது ஆற்றலின் ஒரு பகுதியாக இருந்த சக்கரமும் அதன் சக்தியையும் திருமாலுக்கு கொடுத்தாலும் சக்கரமும் அதன் சக்தியாகவும் இருப்பவர் இறைவனே ஆகையால் இறைவனின் அவதாரமாய் இருந்த வீரபத்திரரின் கட்டளைக்கிணங்க சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்தது.

Related image