பாடல் #431

பாடல் #431: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனது உருவறி யாதே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் கண்டு உணரக் கூடிய ஜோதி உருவமாக இறைவன் வீற்றிருக்கின்றான். அவன் உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு அடி கூட விலகி நிற்பதில்லை. எப்போதும் உயிர்களின் உள்ளத்துடனே சேர்ந்து இறைவன் இருந்தாலும் மாயையினால் மறைக்கப்பட்ட உயிர்களின் உள்ளம் அவனது உருவத்தை அறியாது.

பாடல் #432

பாடல் #432: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே.

விளக்கம்:

இறைவனோடு இருந்த ஆன்மாக்கள் ஆசைப்பட்டுவிடும் போது அந்த ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டி உலகத்தில் பிறவி எடுக்கும்படி உயிர்களாகப் படைக்கின்றான் இறைவன். அந்த உயிர்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும் போது சில வினைகளும் சேர்த்து விடுகிறது. இந்த வினைகளை அனுபவிக்க வேண்டி உலகப்பற்று குடும்பம் பாசம் என்னும் துயரத்துக்குள் உயிர்களை மாயையால் பூட்டி அடைத்துவிடுகின்றான். எலும்பை முழுவதும் தோல் தசைகளால் மூடி அந்த எலும்போடு ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் இந்த உலக உடம்பானது உயிர்களின் பிறவிக்கு காரணமாகிய வினைகள் முடியும் வரை ஒன்றாகச் சேர்ந்து இருக்கும். இந்தப் பிறவியின் வினைகள் முடிந்ததும் உயிரை முடிப்பதாக இருக்கின்றது.

உட்கருத்து: ஆன்மாக்கள் ஆசையினால் இன்பம் பெறுவதற்காகப் பிறவி எடுப்பதால் அந்த இன்பத்தை அனுபவித்து தீர்க்கும்வரை பேரின்பத்தை மறைத்து அருளும் இறைவன் அந்த ஆன்மாக்கள் எடுத்த பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதினால் கிடைக்கும் வினைகளையும் அதன் விளைவுகளால் ஏற்படும் துன்பத்தையும் அந்தத் துன்பத்திற்குக் காரணமாக இருக்கும் உலகப் பற்றுக்களையும் சேர்த்து பிறவிக்குள் அடைத்துவிடுகின்றான். இதில் எலும்பும் தோலும் போர்த்திய உடலே சிறையாகவும் உலகப் பற்று எனும் மாயை பூட்டாகவும் வினைகள் சாவியாகவும் இருக்கின்றது. எப்போது உயிர்கள் தமது வினைகளை அனுபவித்துக் கழித்து முடிக்கின்றதோ அப்போது இந்தப் பூட்டு திறந்து உலகத்தில் அதுவரை ஆன்மா அனைத்தையும் அனுபவிக்க உதவிய உடலையும் உயிரையும் அழித்து ஆன்மா விடுதலை பெறுகின்றது.

பாடல் #433

பாடல் #433: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.

விளக்கம்:

இறைவன் உயிர்களை படைக்கும் தொழிலுக்கு காரியம் புரியும் தெய்வங்களாகிய உருத்திரன் மாபெரும் தவம் புரிபவனாகிய திருமால் வேதங்கள் ஓதி உயிர்களையும் அவை உலகத்தில் அடையும் இன்பத்தையும் படைத்த பிரம்மன் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து இறைவனின் கட்டளைக்கு ஏற்ப செய்த வலிமை மிக்க இரும்பாலான இயந்திரம் போன்ற உடலுக்குள் மாயையால் மறைத்து இறைவன் வைத்த ஒரு மாபெரும் பரிசு இருக்கின்றது. அதை உயிர்கள் அறியவில்லை.

உட்கருத்து: உலகத்தில் உயிர்களை படைத்த இறைவன் அதன் வினைகளை அனுபவித்துக் கழிக்கும் வரை அந்த உயிர்களைப் பாதுகாக்க இறைவனே மாபெரும் பரிசாக உயிர்களின் உள்ளத்திற்குள் இருக்கின்றதை மாயையால் மறைத்து அருளுகின்றான்.

பாடல் #434

பாடல் #434: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

காண்கின்ற கண்ணொளி காதல்செய் யீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைப்
பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கையின் செயல்அணை யாரே.

விளக்கம்:

உயிர்களின் மேலுள்ள மாபெரும் அன்பினால் உயிர்களுடனே இருந்து அவர்களின் கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருக்கின்றான் இறைவன். ஆதியாக இருக்கும் இறைவனே அனைத்து உயிர்களின் உருவத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருக்கின்றான். உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே தமது தலையின் உச்சியில் இறைவனாக இருக்கும் அமிர்தத்தை நெஞ்சத்தில் உணராத உயிர்கள் பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தத்தின் செயலை உணராமல் இருக்கின்றார்கள்.

உட்கருத்து: உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் நெஞ்சத்தில் உணர்ந்து விட்டால் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் தலை உச்சியில் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவனாக இருக்கும் அமிர்தத்தையும் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் உயிர்கள் உணவு உண்ணும் ருசிக்கு ஆசைப்பட்டு அதனால் கிடைக்கும் வினையின் காரணமாக மறைக்கப்பட்டு உணராமல் இருக்கின்றார்கள்.

பாடல் #435

பாடல் #435: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெஞ் சுடரும்
இருளும் அறிநின் றிருட்டறை யாமே.

விளக்கம்:

உண்மை ஞானத்தை அடைந்த உலக உயிர்களுக்கும் விண்ணுலகத் தேவர்களுக்கும் பேரின்பத்தைப் பெறும் வழியை அருளிச் செய்கின்றான் ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவன். உண்மை ஞானத்தை அடையாமல் உலக ஆசையில் இருக்கின்ற உயிர்களுக்கு தினமும் மாறி மாறி வரும் சூரியனின் ஒளியையும் அந்தச் சூரியனின் ஒளியை தன்னுள் வாங்கிக் கொடுக்கும் நிலாவின் ஒளியையும் வெப்பமான தீயினால் கிடைக்கும் ஒளியையும், இந்த மூன்றுவித ஒளியும் இல்லாதபோது இருக்கும் இருளை உணர்வினால் அறிந்திருக்கின்ற உயிர்களுக்கு உணர்வினால் அறியமுடியாத மாயை எனும் இருளைக் கொண்ட உள்ளம் எனும் இருட்டறையில் வீற்றிருக்கின்றான் இறைவன்.

உட்கருத்து: உண்மை ஞானம் பெற்ற உலகத்து உயிர்களுக்கும் விண்ணுலக உயிர்களுக்கும் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் உண்மை ஞானம் பெறாத உயிர்களுக்கு மாயை எனும் இருட்டையே கொடுக்கின்றான்.

பாடல் #436

பாடல் #436: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

விளக்கம்:

இன்ப துன்பத்திற்கு ஓர் காரணமாய் இருக்கும் உடல் உறுப்புகள் கேட்கின்ற ஓசை பேசுகின்ற உரை இவற்றிலெல்லாம் உணருகின்ற ஆசை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாமல் வித்தியாசமாய் பலவித உருவங்களில் எங்கும் பரவி இருக்கும் உயிர்கள் பரந்து விரிந்த உலகம் ஆகிய இவை அனைத்தும் இறைவனாகவே இருக்கின்ற பெரிய உண்மையை மறைத்து உயிர்களுக்குள் உணர்ந்து காணக்கூடியவனாக இருக்கின்றான் இறைவன்.

உட்கருத்து: உயிர்கள் தமது ஐந்து புலன்களால் பார்த்து கேட்டு பேசி சுவைத்து உணர்ந்து ஆசையைத் தீர்த்துக் கொண்டு வினைகளைப் புரிந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஐம்புலன்களால் இறைவனை அறிய முடியாது. உள்ளத்துக்குள்ளே உணர்ந்தால் மட்டுமே காணக்கூடியவனாக இருக்கின்றான் இறைவன்.

பாடல் #437

பாடல் #437: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

ஒளித்துவைத் தென்னுள் ளுறவுணர்ந் தீசன்
வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.

விளக்கம்:

இறைவன் எமக்குள் மறைத்திருந்ததை அவனது திருவருளால் எமது உள்ளத்துக்குள்ளேயே உணர்ந்து வேண்டிட அவன் யாம் இருந்த இடத்திலேயே வெளிப்பட்டு நின்று அருள் புரிந்தான். எப்போதுமே தெகிட்டி விடாத பேரின்பத்தை வழங்கும் பெருமைக்குரிய இறைவனை உயிரின் உள்ளத்துக்குள் ஒளிந்து கொண்டு இருந்தாலும் உண்மையான அன்போடு உள்ளம் உருக வேண்டினால் தமக்கு முன்னால் வந்து நின்று அருள் புரிவதை உணரலாம்.

பாடல் #438

பாடல் #438: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
நன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்துஇருந் தானே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிரின் உள்ளத்துக்குள்ளும் தாமாகவே நிறைந்து நின்று மாயையால் மறைக்கும் மகேசுவரன். அழிக்கவும் காக்கவும் சென்று உலகங்களிலெல்லாம் இயங்கிக் கொண்டிருக்கும் உருத்திரன் திருமால். நன்மைக்காக படைப்புகளைச் செய்து கொண்டு தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் பிரம்மன் ஆகிய இவர்கள் அனைவரும் தாமாகவே இருந்தும் அவர்கள் புரியும் தொழில்களில் ஒன்றாகவே இணைந்து இருக்கின்றான் இறைவன்.

குறிப்பு: இந்தப் பாடலும் #403 ஆவது பாடலும் ஒன்று போல இருந்தாலும் இப்பாடலில் சிறிது வார்த்தைகளை மாற்றி இறைவனது மாயா காரியங்களைச் சொல்லி அருளுகின்றார் திருமூலர். பாடல் #403 இல் அனைத்தையும் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் மூவர்களாக இருக்கும் இறைவனே இந்தப் பாடலில் எங்கும் நிறைந்து மறைக்கவும் அனைத்து உயிர்களுக்கும் அருளவும் செய்து ஐவராக இருக்கின்றான் என்பதையும் ஐவராக இருந்து அவன் புரியும் இந்தத் தொழில்களை உயிர்களின் மேல் கொண்ட கருணையினால் மறைத்து வைத்திருக்கின்றான் என்பதையும் திருமூலர் சொல்லியிருக்கின்றார்.

பாடல் #439

பாடல் #439: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணா தழுக்கது வாமே.

விளக்கம்:

மாயையால் உலகப் பற்றுக்களில் சிக்கிக் கொண்ட உயிர்கள் அந்த உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பாசத்திலேயே மூழ்கிக் கொண்டு தமது உள்ளத்துக்குள் உத்தமனாக வீற்றிருக்கும் இறைவனை உணர்ந்து அவன் அருளிய அமிர்தத்தை அருந்தி பேரின்பத்தில் திளைக்காமல் இருப்பது எப்படி இருக்கின்றதென்றால் கங்கையின் புனித நீரில் மூழ்கித் தமது பாவ அழுக்குகளைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்யாமல் கரையிலேயே நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருக்கின்றது.

உட்கருத்து: கங்கையில் மூழ்கி பாவத்தைத் தீர்த்துக்கொள்ள முடிந்த போதும் அதைச் செய்யாமல் கரையிலேயே நின்று பார்ப்பது போல தமக்குள்ளேயே இறைவனை உணர்ந்து பேரின்பத்தைப் பெற முடிந்த போதும் அதைச் செய்யாமல் உலகச் சிற்றின்பங்களிலேயே திளைத்து இருப்பதைத்தான் உயிர்கள் விரும்புகின்றன.

Related image

பாடல் #440

பாடல் #440: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணமே ஆகிநின் றானே.

விளக்கம்:

உயிர்களுக்கு நல்ல முறையில் பயன்படும் பல்வேறு விதமான பாத்திரங்களை குயவன் செய்தாலும் அனைத்தையும் ஒரே விதமான களிமண்ணில் இருந்து தான் செய்கின்றான். அதுபோலவே உலகத்தில் பல்வேறு உருவங்களில் பல பிறவிகள் எடுத்தாலும் அனைத்து பிறவிகளிலும் ஆத்மாவாக இறைவன் ஒருவனே இருக்கின்றான். உயிர்களின் கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை ஒரேவிதமான காட்சிகளைக் கண்டாலும் தமது உருவத்தை அவற்றால் காண முடியாது. அதுபோலத்தான் இறைவனும் ஒவ்வொரு உயிரின் உள்ளத்துக்குள் இருந்து உயிர்களுக்கு அனைத்தையும் உணர வைத்தாலும் தம்மையே உணர முடியாதவனாக இருக்கின்றான்.

உட்கருத்து: அனைத்தையும் தமது கண்களால் பார்க்கும் உயிர்கள் தமது கண்களின் பிம்பத்தை கண்ணாடியில் காண முடியுமே தவிர தமது கண்களால் தமது கண்களையே காண முடியாது. அதுபோலவே மாயையால் மறைந்திருக்கும் இறைவன் உள்ளத்துக்குள்ளேயே இருந்து அனைத்தையும் உணர்த்தினாலும் அவனை மட்டும் உணர முடியாமல் இருக்கும்படி உயிர்களை மாயையால் மறைத்து வைத்திருக்கின்றான்.

Related image