பாடல் #421

பாடல் #421: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசருக்கு கைஅம்பு தானே.

விளக்கம்:

இறைவன் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் மூலம் பிரளய காலத்தில் பரந்து விரிந்த உலகத்தையும் அலைகள் நிறைந்த கடல்களையும் அறியாமையாகிய அசுரர்களையும் அழித்து அருளினான். இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அதனதன் வினையின்படி அழிந்து நன்மை பெறுவதற்காக இறைவன் அழித்தல் தொழிலை செய்யும் போது நெருப்பு அவனது திருக்கரத்தில் அம்பாக இருக்கின்றது.

பாடல் #422

பாடல் #422: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றிழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலம் தான்வெந் ததுவே.

விளக்கம்:

இறைவன் வினையின்படி அனைத்தையும் அழிக்கும் மூன்று விதமான பிரளய வகைகளில் கற்பாந்தப் பிரளயத்தில் நிலையில்லாத இந்த உலகம் இழிவு நிலை பெற்று அழிந்து போனதை யானும் இறைவனின் திருவருளால் அவனோடு நின்று கண்டு உணர்ந்தேன். உலையில் இடப்பட்ட அரிசி நெருப்பினால் சூடு பெற்று கொதித்து வெந்து சாதமாகிறதோ அதுபோல மலைகளால் சூழப்பட்ட மாபெரும் நிலப்பரப்பான இந்த உலகமும் இறைவன் தந்த நெருப்பினால் வெந்து அழிந்தது.

மூன்று வகை பிரளயங்கள்:

  1. தினப் பிரளயம் – ஒவ்வொரு உயிரும் தினமும் தூங்கி எழும் இடைவெளியில் நிகழும் அழிவுகள்
  2. கற்பாந்தப் பிரளயம் – வினை முடிந்தபின் வரும் அழிவுகள் (உயிர்களோடு உலகமும் அழிவது)
  3. மகாப் பிரளயம் – ஊழிக்காலத்தில் வரும் பேரழிவு (அண்டங்களையே அழிக்கக் கூடியது)

பாடல் #423

பாடல் #423: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.

விளக்கம்:

உயிர்களுக்கு இயற்கையை வழங்கி அவர்களை வாழ வைக்கும் உலகமும் பனிபடர்ந்து ஓங்கி நிற்கும் எட்டு விதமான மலைகளும் ஓசை எழுப்பும் அலைகளைக் கொண்ட ஏழு விதமான கடல்களின் வெள்ளப் பெருக்கும் ஆகிய இவை அனைத்தும் இறைவனின் சிறிதளவு நெருப்பினால் அழிந்து ஆகாயம் போல வெற்றிடமாகும் விதத்தைக் கண்ட உண்மை ஞானிகளுக்கு வியப்பாக இருக்காது.

பாடல் #424

பாடல் #424: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் திசையாதி
ஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கியும் கோலிக்கொண் டானே.

விளக்கம்:

மழை நீரைக் கொண்டிருப்பதால் கருத்த மேகங்கள் காற்றினால் தள்ளப்பட்டு மலைகளின் மழையாகப் பொழிந்து மழை அருவியாகி அருவி ஆறாகி ஆறு எட்டுத்திசையிலும் உள்ள நிலங்களிலெல்லாம் பரவி ஆற்றின் தண்ணீர் நிலத்தில் ஊறி உயிர்களை காக்கும் அனைத்துவிதமான உணவு பொருட்களையும் விளைவித்து பின் ஆற்றின் தண்ணீர் கடலில் கலந்து அதுவே பெருங்கடலாக உருவெடுத்து நிலங்களையெல்லாம் சூழ்ந்து கடல் இருக்கும். வினையின் படி நன்மைக்காக இறைவன் தனது சக்தியை ஓம் எனும் மந்திரத்தை பதம் செய்து யாகக் குண்டத்தின் மேலெழும்பி வரும் சிறிய நெருப்பினால் அழித்து தன்னுள் அடக்கிக் கொள்கிறான் இறைவன்.

உள்விளக்கம்: நல்வினையின் காரணமாக கருத்த மேகங்கள் அழிந்து மழையாகப்பொழிகிறது. மழைநீர் நிலங்களுக்கு பரவி உணவு பொருட்களை உற்பத்தி செய்ய அழிந்து போகின்றது. மீதம் இருக்கும் நல்ல மழை நீர் கடலினில் கலந்து அழிந்து உப்பு நீராகிறது. அந்த நீர் மீண்டும் அழிந்து கருத்த நீர் இருக்கும் மேகமாகின்றது. இது போல் உலகத்தில் நடக்கும் பல அழிவுகளும் உலக நன்மைக்காக இறைவன் ஓம் என்னும் மந்திரத்தை பதம் செய்து உலகம் என்னும் குண்டத்தில் அக்னியை உருவாக்கி செய்கின்றான்.

பாடல் #425

பாடல் #425: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரத் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

விளக்கம்:

நித்த சங்காரம் என்பது உயிர்கள் உறங்கும் போது தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முற்றிலும் அறியாத நிலையாகும். வைத்த சங்காரம் என்பது உயிர்கள் இளைப்பாற வேண்டும் என்று உறங்கும்போது ஏற்படும் கனவு நிலையாகும். சுத்த சங்காரம் என்பது உயிர்கள் உடலை விட்டு உயிர் பிரிந்த ஆன்மா ஆணவ மலத்திலேயே இருந்து பிறக்கவும் முடியாமல் இறைவனிடமும் செல்ல முடியாமல் எந்தச் செயலும் செய்ய முடியாமல் கிடக்கும் கேவலமான நிலையாகும். உய்த்த சங்காரம் என்பது இறைவனது திருவருளால் ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே சென்று இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையாகும்.

உள்விளக்கம்: நித்த சங்காரம் – தூங்கும் போது நான் என்ற எண்ணம் அழிந்திருந்த நிலை.
வைத்த சங்காரம் – தூங்கும் போது கனவில் எல்லாம் தன்னுடையது போல் இருக்கும் ஆனால் விழித்ததும் எதுவும் தனது இல்லை என்று அனைத்தும் அழிந்த நிலை.
சுத்த சங்காரம் – உடல் அழிந்த பின் ஆத்மா தான் என்ற அகங்காரத்தினால் உடலெடுக்கவும் முடியாமல் இறைவனுடன் கலக்கவும் முடியாத நிலை. இதனை கேவலமான நிலை என்று பாடலில் கூறுகிறார்.
உய்த்த சங்காரம் – உடல், உயிர் அனைத்தும் அழிந்து இறைவனுடன் கலக்கும் நிலை.

பாடல் #426

பாடல் #426: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவனருள் உண்மையே.

விளக்கம்:

நித்த சங்காரத்தில் உயிர் ஸ்தூல சூட்சும சரீரங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். வைத்த சங்காரத்தில் மாயையுடன் கனவு நிலையில் உயிர் ஸ்தூல உடலை விட்டு விலகி சூட்சும உடலுடன் தொடர்பு கொண்டிருக்கும். சுத்த சங்காரத்தில் மனம் எந்த எண்ணமும் இல்லாமல் செயல் ஒன்றும் இல்லாது இருக்கும். உய்த்த சங்காரத்தில் சிவன் அருளில் லயித்து இருக்கும். இதுவே உண்மையான சங்காரம் ஆகும்.

பாடல் #427

பாடல் #427: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரங் கருஇடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்கு
உய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.

விளக்கம்:

உலகத்தில் பிறவி எடுக்க தாய் வயிற்றில் கருவாகப் பிறந்த அனைத்து உயிர்களுமே தங்களின் வினைப் பயனாகிய துன்பங்களையும் சேர்த்துக் கொண்டுதான் பிறக்கின்றன. இறைவனது கருணையினால் அந்த துன்பங்கள் சிறிது நேரமாவது நீங்கித் தம்மை மறந்து உயிர்கள் இருக்கும் தூக்க நிலை தினமும் நிகழும் நித்த சங்காரமாகும். உடலை விட்டு உயிர் பிரிந்து ஆன்மா மட்டுமே இருக்கின்ற நிலை சுத்த சங்காரமாகும் ஸ்தூல உடலும் சூட்சும உடலும் பிரிந்து இருக்கும் கனவு நிலையில் ஆன்மா மாயையிலேயே மூழ்கி கேவலப்பட்டு இருக்கின்ற நிலை வைத்த சங்காரமாகும். வினைகளையெல்லாம் தீர்த்துவிட்ட உயிர் ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சூட்சும உடலும் அழிந்து தனித்தன்மையோடு இருந்த ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே இரண்டறக் கலந்துவிடும் போது நான் எனும் தனித்தன்மை முற்றிலும் அழிந்து சிவமாக மாறும் நிலை உய்த்த சங்காரமாகும்.

பாடல் #428

பாடல் #428: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றுதல்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரனருள்
வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.

விளக்கம்:

உயிர்கள் தங்களது துன்பங்களை மறந்து நீண்ட நேரத்திற்கு இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் நித்த சங்காரம் நிகழ்கிறது. ஆரம்பம் இல்லாத கனவு நிலையில் உலக மாயைகளெல்லாம் மறைந்து எண்ணங்களும் இல்லாமல் உயிர்கள் சிறிது நேரமாவது இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் வைத்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது திருவருளை மட்டுமே எண்ணிக் கொண்டு மற்ற அனைத்தையும் விட்டு விலகி ஆன்மா திரும்ப வர வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் சுத்த சங்காரம் நிகழ்கிறது. அனைத்து வினைகளையும் கழித்த ஆன்மா இனி தனித்தன்மை இல்லாமல் உண்மைப் பொருளான இறைவனுடனே கலந்துவிட வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் உய்த்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது கருணையை மதித்துப் பார்த்தால் இந்த நான்கு சங்காரங்களும் உயிர்களின் நன்மைக்காகவே இறைவன் வைத்திருக்கின்றான்.

பாடல் #429

பாடல் #429: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

பாழே முதலா எழும்பயிர் அவ்விடம்
பாழே அடங்கினும் பண்டைப்பாழ் ஆகாவாம்
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

விளக்கம்:

சேற்றுச் சகதியில் விதைத்த விதை அந்தச் சகதியையே ஆதாரமாகக் கொண்டு அதனிடமிருந்து வெளிப்பட்டு பயிராக மேலெழும்பி வருவதைப் போல அனைத்திற்கும் பழைமையான இறைவனிடமிருந்து அவனையே முதலாகக் கொண்டு அவனிடமிருந்து வெளிப்பட்டு உலகத்தில் கருவாக வந்து பிறக்கின்றது ஆன்மா. விளைந்த பயிர் பயன்படுத்தப்பட்ட பிறகு அழிந்து திரும்பவும் மண்ணோடு மண்ணாகவே ஆகிவிட்டாலும் அது எப்படி முன்பு விதைத்த விதைக்குள் மீண்டும் போய் சேர முடியாதோ அதுபோலவே உலகத்தில் கருவாக வந்து பிறந்த ஆன்மா உலகத்தில் வாழ்ந்து இறந்த பிறகும் திரும்பவும் இறைவனிடமே சென்று சேர்ந்துவிட முடியாது. இதனாலேயே ஆன்மாவுக்குத் தனித்த வாழ்வு என்பது இல்லாத சங்காரச் சுழற்சியில் தள்ளப்பட்டு மீண்டும் பிரம்மனால் கருவாக பிறந்து திருமாலால் காக்கப்பட்டு வளர்ந்து மறுபடியும் சங்காரத்தில் இறந்து கொண்டே இருக்கும். எப்போது மண்ணில் பிறந்த பயிர் மண்ணிலே கலந்து அந்த மண்ணும் ஒரு நாள் மறைந்து போகின்றபோது அந்தப் பயிரின் தடயமே அழிந்து போய்விடுவது போல உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறக்கும் ஆன்மா எப்போது வினைகளை முடித்துத் தான் என்கிற தடயத்தை (ஆணவ மலம்) முற்றிலும் துறந்து மாயைகளை நீக்கி உண்மையை உணருகின்றதோ அப்போது அது தோன்றிய இறைவனிடமே சென்று அடங்கிவிடும்.

உட்கருத்து: ஆன்மாவைப் பயிராகவும் இறைவனை சகதியாகவும் உருவகிக்கும் திருமூலர் இந்த உவமையின் மூலம் சங்காரத்தின் தத்துவமும் அது ஏன் நிகழ்கிறது என்கிற விளக்கத்தையும் தந்து அருளுகிறார். இறைவனிடமிருந்து முதலில் தோன்றிய ஆன்மா உலகத்தில் பிறவி எடுத்து வினையினால் பிறவிச் சுழலில் சிக்கித் தன் வினைகளையெல்லாம் முடித்துவிட்டு பிறகு இறைவனிடமே வந்து அடங்கிவிடுவதே சங்காரத்தின் தத்துவமும் அதன் பயனுமாகும்.

பாடல் #430

பாடல் #430: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயம்வைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாயுணர்வு ஆரவைத் தானே.

விளக்கம்:

இறைவனிடமிருந்து தோன்றிய ஆன்மா தனது ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துக் கொள்ள செய்யும் செயலினால் சேரும் வினைகளைத் தீர்க்க மாயையை வைத்து அந்த வினைகள் தீர உடலையும் ஆன்மாவிற்கு கொடுத்துப் பிறவி எடுக்க வைக்கின்றான். பிறவி எடுத்த ஆன்மா வினைச் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது என்கிற கருணையினால் உலகத்திலுள்ள அனைத்திலும் கலந்து இருக்கும் இறைவன் தன்னை அடையும் வழிகள் அறிந்த கலந்து குருவாய் இருக்கும் அடியார்களோடு சேர வைத்து தன்னை எப்போதும் நினைக்கக் கூடிய எண்ணத்தை வைக்கின்றான். இறைவனின் சிந்தனையிலேயே இருப்பதால் மாயை அழிந்து நான் என்கின்ற அகங்காரம் அழிந்து ஆன்மா மீண்டும் தம்மை வந்து அடையும் மெய்யுணர்வு வரச் செய்கிறான் இறைவன்.