பாடல் #103

பாடல் #103: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அறியயற் காமே.

விளக்கம்:

உயிர்கள் ஆரம்பத்தில் எப்போதுமே இளமையாகவே இருப்போம் அது அளவில்லாதது என்று கருதிக்கொள்வது இளமையின் தன்மை. அந்த இளமையின் முடிவாகத் தோன்றுவது முதுமையின் தன்மை. அந்த முதுமைக்குப் பின் வாழ்க்கையின் முடிவாக வருவது இறப்பின் தன்மை. பிறக்கும் முன்பே வரையறுக்கப்பட்டு பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை ஆகிய நான்கு தன்மைகளும் இயல்பிலேயே மாயையால் உருவாக்கப்பட்டன என்பதை உணர்ந்துகொண்டால் அந்த மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் (அழிப்பவன்) தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் தாம் உணர்ந்த சங்கரனின் தன்மைகளை எடுத்துச் சொன்னால், அது ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கின்றது.

பாடல் #104

பாடல் #104: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

விளக்கம்:

ஆதியிலிருந்து அனைத்திற்கும் ஆரம்பமாக இருக்கின்ற உருத்திரனும் அணிகின்ற மணிகளைப் போன்ற நீல நிறம் படைத்த திருமாலும் படைப்புத் தந்தையாக தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய இவர்கள் மூவரும் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட தொழில்களில் தனிப்பட்டு நின்றாலும் அவர்களுக்குள் இருந்து இயக்கும் சிவத்தின் தொடர்ச்சியில் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள் என்பதை உணரலாம். இதை அறியாமல் அவர்களின் தொழில்களை வைத்து வேறு வேறாகப் பிரித்து, இதில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று தேவையில்லாத குழப்பத்தில் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு உலகத்தவர்கள் துன்பப்படுகின்றார்கள்.

பாடல் #105

பாடல் #105: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந்த் தார்களே.

விளக்கம்:

இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான். அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது. இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள் மும்மலங்களின் மாசு படிந்து இருப்பதால் அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.

பாடல் #106

பாடல் #106: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

விளக்கம்:

சிவபெருமானே அனைத்தின் முதல்வனாய் படைத்தலில் பிரம்மன் காத்தலில் திருமால் அழித்தலில் உருத்திரன் என்கிற மூவராகவும் அவர்களோடு சேர்ந்து அருளலில் மகேசுவரன் மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் சிறப்பாக நின்று உயிர்களின் உடலிலுள்ள சக்திமயங்கள் (ஏழு சக்கரங்களும் அதைத் தாண்டிய பரவெளியும்) அனைத்திலும் ஒன்றோடு ஒன்றாக கலந்து இருக்கின்றார். இவர்கள் அனைவருக்கும் மூலமாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியே ஒளியும் ஒலியுமாய் ஓங்கிப் பரவெளியில் அனைத்திற்கும் முதலாகிய சங்கரன் எனும் பெயரில் ஒருவராக இருக்கின்றார்.

பாடல் #107

பாடல் #107: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

பயனறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ்வானவ ராலே.

விளக்கம்:

இறைவனை அடையவேண்டும் என்பதையே பிறவிப்பயனாக அறிந்துகொண்டு அதற்கான வழிகள் என்னவென்று யோசிக்கும் அளவில் எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் ஒன்றே. இவர்களுக்கு திருமாலும் பிரம்மனும் அன்னியர்கள் இல்லை. முக்கண் முதல்வனாகிய குருநாதன் சிவபெருமானுக்கு சொந்தமே. ஆகையால் உண்மையான பயனை அடையவேண்டும் என்று எண்ணி எந்த வானவர்களை (தெய்வங்கள்) வணங்கினாலும் அதற்கான பயனை சதாசிவமூர்த்தியே அந்த வானவர்களாக (தெய்வங்களாக) இருந்து அருளுவார்.

பாடல் #108

பாடல் #108: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

விளக்கம்:

இறைவனின் திருக்கோலத்தை அடியவர்களும் இறப்பில்லாத தேவர்களும் சூழ்ந்து நிற்க பால் போன்ற வெண்ணீறு அணிந்த அவனின் திருவுடலைப் பணிந்து அடியவனாகிய யான் தொழுது நிற்கும்போது காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலுக்கும் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும் நீ சரிசமமானவன். ஆகையால் உலகத்திற்கு சென்று எமது திருவடியின் திருவருளை அனைவருக்கும் வழங்கிடுக என்று இறைவன் எமக்கு கூறி அருளினான்.

உள் விளக்கம்:

பிரம்மனும் திருமாலும் ஒரு சமயத்தில் ஆன்மாக்களாக இருந்து செய்த மாதவங்களாலேயே இறைவனிடமிருந்து படைக்கும் தொழிலையும் காக்கும் தொழிலையும் பெரும் பேறாகப் பெற்றார்கள் என்பதால் அவர்கள் மாதவம் செய்த இறைவனின் அடியவர்களுக்கு சரிசமமானவர்களே. எனவே உலகில் இறைவனின் திருவடியைப் போற்றி அதன் பயனை மற்றவர்களுக்கும் அருளும் மாதவம் செய்த சிவனடியார்கள் அனைவருமே பிரம்மனுக்கும் திருமாலுக்கும் சரிசமமானவர்கள்.

பாடல் #109

பாடல் #109: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

விளக்கம்:

தேவர்கள் என்றும் மனிதர்கள் என்றும் ஆன்மாக்கள் இருப்பது தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடியிருக்கும் சிவபெருமானின் திருவருளினாலன்றி வேறில்லை. அச்சிவபெருமானின் அருள் இல்லாமல் தானாகவே இருந்தவர்கள் என்றும் தனியொரு தெய்வம் என்றும் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இறைவனே உயிர்களின் உடலுக்குள்ளும் இருக்கின்றான் என்பதை உணர்வதுதான் பிறவியின் உண்மையான பயனாகும்.

பாடல் #110

பாடல் #110: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

விளக்கம்:

ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பான சிவமே படைத்தலில் பிரம்மன் காத்தலில் திருமால் அழித்தலில் உருத்திரன் என்கின்ற மூவராகவும் அவர்களோடு அருளலில் மகேசுவரன் மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் நின்று அந்தத் தொழில்களை செய்துவருவதும் அந்தச் சிவமே ஆதியிலிருந்து இருக்கின்ற பரம்பொருள் என்பதை அறியாத மூடர்கள் அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அவர்களை வேறு வேறு தெய்வங்களாகக் கருதிக்கொண்டு அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று வீணாகச் சண்டையிட்டுக்கொண்டு புலம்புகின்றார்கள்.

பாடல் #111

பாடல் #111: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அயன் ஆகித்
தரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

விளக்கம்:

பரம்பொருள் என்பதில் ஒன்றானவனாகவும் உயிர்களுக்குள்ளும் வெளியிலும் இருப்பவனும் ஆன்மா மாதவம் செய்து பெற்ற வரத்தினால் திருமாலாகவும் பிரம்மனாகவும் தவம் செய்த தகுதிக்கேற்ப வெவ்வேறு விதமான தரங்களில் பலவித தன்மைகள் கொண்ட தெய்வங்களாகவும் செய்கின்ற தொழில்களில் பலவிதமாக நின்று அருளுகின்றவன் சதாசிவமூர்த்தியாகிய ஒருவனே.

பாடல் #112

பாடல் #112: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளன்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

விளக்கம்:

எமது இறைவனாகிய சிவமே ஞானசக்தியை ஒரு பகுதியாகச் சேர்த்து சதாசிவமாக இருக்கின்றான். (சதாசிவம் அசையும் சக்தியாகவும் அசையா சக்தியாகவும் இரு பகுதியாக உள்ளான்) அவனே வானத்தில் இருக்கும் அனைத்து தெய்வங்களின் உருவங்களாகவும் மருவி அங்கு இருக்கின்றான். உலகங்கள் அனைத்திற்கும் தலைவனான அவனே அவ்வுலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களின் உடலுக்குள்ளும் ஒரு பாகமாக இருந்து கொண்டு உள்ளிருந்து அந்த உடலை இயக்கும் உயிர்சக்தியாகவும் இருக்கின்றான். இப்படி அனைத்திலும் ஒரு பாகமாக இருக்கும் சிவமே அனைத்தின் தன்மைகளிலும் கலந்து நின்று அனைத்துமாகவும் இருக்கின்றான்.