பாடல் #1358

பாடல் #1358: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றிடு மேழ்கட லேழ்புவி யெல்லா
நின்றிடு முள்ளம் நினைத்தவை தானொக்க
நின்றிடுஞ் சித்தி நிலைபெற கண்டிடில்
நின்றிடு மேலை விளக்கொளி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறிடு மெழகட லெழபுவி யெலலா
நினறிடு முளளம நினைததவை தானொகக
நினறிடுஞ் சிததி நிலைபெற கணடிடில
நினறிடு மெலை விளககொளி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று இடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம்
நின்று இடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்க
நின்று இடும் சித்தி நிலை பெறக் கண்டு இடில்
நின்று இடும் மேலை விளக்கு ஒளி தானே.

பதப்பொருள்:

நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) ஏழ் (ஏழு விதமான) கடல் (பெருங் கடல்களிலும்) ஏழ் (ஏழு விதமான) புவி (உலகங்களிலும்) எல்லாம் (அவரால் இருக்க முடியும்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) உள்ளம் (அவரது உள்ளத்தில்) நினைத்து (நினைத்த) அவை (அனைத்து விஷயங்களும் அந்தக் கணத்திலேயே) தான் (அவரது) ஒக்க (எண்ணத்திற்கு ஏற்றவாறே நடக்கும்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) சித்தி (சாதகர் பெற்ற அருள் நிலையானது) நிலை (எப்போதும் மாறாமல் நிலையாக) பெறக் (இருப்பதை) கண்டு (அவர் கண்டு) இடில் (உணர்வார்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) மேலை (உச்சத்தில் இருந்து) விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியாகவும்) தானே (சாதகரே இருக்கின்றார்).

விளக்கம்:

பாடல் #1357 இல் உள்ளபடி சாதகர் சமாதியில் இருந்து இடைவிடாது செய்கின்ற சாதகத்தினால் ஏழு விதமான பெருங் கடல்களிலும் ஏழு விதமான உலகங்களிலும் அவரால் இருக்க முடியும். அது மட்டுமின்றி அவரது உள்ளத்தில் நினைத்த அனைத்து விஷயங்களும் அந்தக் கணத்திலேயே அவரது எண்ணத்திற்கு ஏற்றவாறே நடக்கும். அப்போது சாதகர் பெற்ற அருள் நிலையானது எப்போதும் மாறாமல் நிலையாக இருப்பதை அவர் கண்டு உணர்வார். அதன் பிறகு உச்சத்தில் இருந்து அனைத்தையும் விளங்க வைக்கின்ற பேரொளியாகவும் சாதகரே இருக்கின்றார்.

பாடல் #1359

பாடல் #1359: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விளக்கொளி சௌமுதல் வௌவது வீறாம்
விளக்கொளி சக்கர மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளககொளி சௌமுதல வௌவது வீறாம
விளககொளி சககர மெயபபொரு ளாகும
விளககொளி யாகிய மினகொடி யாளை
விளககொளி யாக விளஙகிடு நீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளக்கு ஒளி சௌம் முதல் ஔம் அது ஈறாம்
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப் பொருள் ஆகும்
விளக்கு ஒளி ஆகிய மின் கொடி ஆளை
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீரே.

பதப்பொருள்:

விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியானது) சௌம் (‘சௌம்’ எனும் பீஜத்தை) முதல் (முதலில் வைத்தும்) ஔம் (‘ஔம்’ எனும் பீஜத்தை) அது (முறைப்படி அமைத்து) ஈறாம் (கடைசியிலும் இருக்கின்றது)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியானது) சக்கரம் (நவாக்கிரி சக்கரமாகவும்) மெய்ப் (அதற்குள் இருக்கின்ற உண்மை) பொருள் (பொருளாகவும்) ஆகும் (இருக்கின்றது)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியாக) ஆகிய (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில்) மின் (மின்னல் போன்ற) கொடி (மாபெரும் சக்தியாக இருக்கின்ற) ஆளை (இறைவியை)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளி) ஆக (ஆகவே இருக்கின்றாள் என்பதை) விளங்கிடும் (தெரிந்து கொள்ளுங்கள்) நீரே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1358 இல் உள்ளபடி இடைவிடாது சாதகம் செய்து அனைத்தையும் விளங்க வைக்கின்ற பேரொளியானது ‘சௌம்’ எனும் பீஜத்தை முதலில் வைத்தும் ‘ஔம்’ எனும் பீஜத்தை முறைப்படி அமைத்து கடைசியிலும் இருக்கின்றது. அந்தப் பேரொளியே நவாக்கிரி சக்கரமாகவும் அதற்குள் இருக்கின்ற உண்மை பொருளாகவும் இருக்கின்றது. இப்படி பேரொளியாக இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் மின்னல் போன்ற மாபெரும் சக்தியாக இருக்கின்ற இறைவியே அந்தப் பேரொளியாகவும் இருக்கின்றாள் என்பதை சாதகர்கள் தெரிந்து கொள்வார்கள்.

பாடல் #1360

பாடல் #1360: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லில்
விளங்கிடு மெல்லிய லாளது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளஙகிடு மெலவரு மெயபபொருள சொலலில
விளஙகிடு மெலலிய லாளது வாகும
விளஙகிடு மெயநினற ஞானப பொருளை
விளஙகிடு வாரகள விளஙகினர தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளங்கிடும் மேல் வரும் மெய் பொருள் சொல்லில்
விளங்கிடும் மெல் இயல் ஆள் அது ஆகும்
விளங்கிடும் மெய் நின்ற ஞான பொருளை
விளங்க இடுவார்கள் விளங்கினர் தானே.

பதப்பொருள்:

விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மேல் (உச்ச நிலையில்) வரும் (வருகின்ற) மெய் (பேருண்மையான) பொருள் (பரம்பொருளை) சொல்லில் (சொல்ல முயன்றால்)
விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மெல் (மென்மையான) இயல் (இயல்பினைக் கொண்ட) ஆள் (இறைவியே) அது (நவாக்கிரி சக்கரம்) ஆகும் (ஆகவும் இருக்கின்றாள்)
விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மெய் (சாதகரின் உடலுக்குள்) நின்ற (நிற்கின்ற) ஞான (உண்மையான ஞானத்தின்) பொருளை (பரம்பொருளை)
விளங்கிடும் (தெரிந்து) இடுவார்கள் (இருக்கின்றவர்களே) விளங்கினர் (தெளிவானவர்கள்) தானே (ஆவார்கள்).

விளக்கம்:

பாடல் #1359 இல் உள்ளபடி இறைவியே நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பேரொளியாகவும் இருக்கின்றாள் என்பதை சாதகர்கள் தெரிந்து கொள்கின்ற உச்ச நிலையில் வருகின்ற பேருண்மையான பரம்பொருளை சொல்ல முயன்றால் அதுவே மென்மையான இயல்பினைக் கொண்ட இறைவியாகவும் இருக்கின்றது. சாதகரின் உடலுக்குள் நிற்கின்ற உண்மையான ஞானத்தின் பரம்பொருளை தமக்குள் உணர்ந்து தெரிந்து இருக்கின்றவர்களே தெளிவானவர்கள் ஆவார்கள்.

பாடல் #1361

பாடல் #1361: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தானே வெளியவ ளெங்கு நிறைந்தவள்
தானே வெளிக்கும் வெளியது வானவள்
தானே சகலமு மாக்கி யழித்தவள்
தானே யனைத்துள வண்ட சகலமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானெ வெளியவ ளெஙகு நிறைநதவள
தானெ வெளிககும வெளியது வானவள
தானெ சகலமு மாககி யழிததவள
தானெ யனைததுள வணட சகலமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தானே வெளி அவள் எங்கும் நிறைந்தவள்
தானே வெளிக்கும் வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்து உள அண்ட சகலமே.

பதப்பொருள்:

தானே (இறைவி தாமே) வெளி (ஆகாயமாக) அவள் (இருக்கின்றவள்) எங்கும் (அதிலுள்ள அனைத்திலும்) நிறைந்தவள் (நிறைந்து இருக்கின்றவள்)
தானே (இறைவி தாமே) வெளிக்கும் (ஆகாயத்திற்கும்) வெளி (மேலான பரவெளி) அது (ஆகவும்) ஆனவள் (இருக்கின்றவள்)
தானே (இறைவி தாமே) சகலமும் (அனைத்தையும்) ஆக்கி (உருவாக்கி) அழித்தவள் (அவற்றின் வினை முடிந்த பின் அழிக்கின்றவள்)
தானே (இறைவி தாமே) அனைத்து (அனைத்திலும்) உள (கலந்து உள்ளவளாகவும்) அண்ட (அண்ட சராசரத்திலுள்ள) சகலமே (அனைத்துமாகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1360 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் உணர்ந்து தெரிந்து கொள்ளுகின்ற இறைவி தாமே ஆகாயமாகவும் அதிலுள்ள அனைத்திலும் நிறைந்தும் இருக்கின்றவள். அவளே ஆகாயத்திற்கும் மேலான பரவெளியாகவும் இருக்கின்றவள். அவளே அனைத்தையும் உருவாக்கி அவற்றின் வினை முடிந்த பின் அழிக்கின்றவள். அவளே அனைத்திலும் கலந்து உள்ளவளாகவும் அண்ட சராசரத்திலுள்ள அனைத்துமாகவும் இருக்கின்றாள்.

பாடல் #1362

பாடல் #1362: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அண்டத்தி னுள்ளே யளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்
கண்டத்தி னின்ற கலப்பறி யார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணடததி னுளளெ யளபபரி தானவள
பிணடததி னுளளெ பெருவெளி கணடவள
குணடததி னுளளெ குணமபல காணினுங
கணடததி னினற கலபபறி யாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்டத்தின் உள்ளே அளப்பு அரிது ஆனவள்
பிண்டத்தின் உள்ளே பெரும் வெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே.

பதப்பொருள்:

அண்டத்தின் (அண்ட சராசரத்தின்) உள்ளே (உள்ளே இருக்கின்ற இறைவி) அளப்பு (அளவிட்டு சொல்ல முடியாத படி) அரிது (மிகவும் அரியதாக அளவில்லாமல்) ஆனவள் (இருக்கின்றாள்)
பிண்டத்தின் (உடலுக்கு) உள்ளே (உள்ளே இருக்கின்ற) பெரும் (மிகப் பெரும்) வெளி (ஆகாயமாகிய மனதையும்) கண்டவள் (அவளே கண்டு கொண்டு இருக்கின்றாள்)
குண்டத்தின் (நவ குண்டமாகிய உடலுக்கு) உள்ளே (உள்ளே இருக்கின்ற) குணம் (இயங்குகின்ற விதங்களை) பல (பலவாறாகப்) காணினும் (பார்த்து உணர்ந்து கொண்டாலும்)
கண்டத்தில் (அந்த உடலுக்குள்) நின்ற (வீற்றிருக்கின்ற) கலப்பு (இறைவி உடலோடு கலந்து இருக்கின்ற தன்மையை) அறியார்களே (யாரும் அறிந்து கொள்வதில்லை).

விளக்கம்:

பாடல் #1360 இல் உள்ளபடி அண்ட சராசரத்திலுள்ள அனைத்துமாகவும் இருக்கின்ற இறைவியே அண்ட சராசரத்தின் உள்ளே அளவிட்டு சொல்ல முடியாத பட மிகவும் அரியதாக அளவில்லாமல் இருக்கின்றாள். உடலுக்கு உள்ளே இருக்கின்ற மிகப் பெரும் ஆகாயமாகிய மனதையும் இறைவி கண்டு கொண்டு இருக்கின்றாள். நவ குண்டமாகிய உடலுக்கு உள்ளே இருந்து உடலை இயக்குகின்ற பல விதமான இயக்கங்களை பார்த்து உணர்ந்து கொண்டாலும் அந்த உடலுக்குள் வீற்றிருக்கின்ற இறைவி உடலோடு கலந்து இருக்கின்ற தன்மையை யாரும் அறிந்து கொள்வதில்லை.

குறிப்பு:

நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பேரொளியாக இருக்கின்ற இறைவியானவள் உடலுக்குள் இருக்கும் மனதையும் உடலின் இயக்கத்தையும் உடலோடு கலந்து நின்று கண்டு கொண்டு இருக்கிறாள் என்பதை யாரும் அறிந்து கொள்வதில்லை.

பாடல் #1363

பாடல் #1363: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கலப்பறி யார்கடல் சூழுல கெல்லா
முலப்பறி யாருட லோடுயிர் தன்னை
சிலப்பறி யார்பல தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கலபபறி யாரகடல சூழுல கெலலா
முலபபறி யாருட லொடுயிர தனனை
சிலபபறி யாரபல தெவரை நாடித
தலைபபறி யாகச சமைநதவர தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னை
சிலப்பு அறியார் பல தேவரை நாடி
தலைப்பு அறியாக சமைந்தவர் தாமே.

பதப்பொருள்:

கலப்பு (தமது உடலோடு இறைவியும் ஒன்றாகக் கலந்து இருப்பதை) அறியார் (அறியாதவர்கள்) கடல் (பெரும் கடல்களால்) சூழ் (சூழ்ந்து இருக்கின்ற) உலகு (உலகங்களில்) எல்லாம் (எல்லாம் சென்று இறைவியைத் தேடி அலைகிறார்கள்)
உலப்பு (தமது உடலுக்கு இறப்பு என்ற ஒன்று இருப்பதை) அறியார் (அறியாதவர்கள்) உடலோடு (தமது உடலோடு) உயிர் (உயிரும்) தன்னை (ஒன்றாகக் கலந்து இருப்பதைப் போலவே இறைவியும் கலந்து இருக்கின்றாள் என்கிற)
சிலப்பு (சிறப்பான உண்மையை) அறியார் (அறியாதவர்களாக) பல (பல விதமான) தேவரை (தெய்வங்களை) நாடி (தேடிச் சென்று வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்)
தலைப்பு (இவர்கள் தேடி அலையும் அனைத்து தெய்வங்களுக்கும் தலைவியாக இறைவியே இருக்கின்றாள் என்பதை) அறியாக (அறியாதவர்களாக) சமைந்தவர் (பல வித குழப்பங்களுக்கு) தாமே (ஆளாகிறார்கள்).

விளக்கம்:

பாடல் #1362 இல் உள்ளபடி இறைவி உடலோடு கலந்து இருக்கின்ற தன்மையை அறியாதவர்கள் பெரும் கடல்களால் சூழ்ந்து இருக்கின்ற உலகங்களில் எல்லாம் சென்று இறைவியைத் தேடி அலைகிறார்கள். தமது உடலுக்கு இறப்பு என்ற ஒன்று இருப்பதை அறியாதவர்கள் தமது உடலோடு உயிரும் ஒன்றாகக் கலந்து இருப்பதைப் போலவே இறைவியும் கலந்து இருக்கின்றாள் என்கிற சிறப்பான உண்மையை அறியாதவர்களாக பல விதமான தெய்வங்களை தேடிச் சென்று வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். இவர்கள் தேடி அலையும் அனைத்து தெய்வங்களுக்கும் தலைவியாக இறைவியே இருக்கின்றாள் என்பதை அறியாதவர்களாக பல வித குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

பாடல் #1364

பாடல் #1364: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தானே யெழுந்தவச் சக்கரஞ் சொல்லிடில்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
றேனே யிரேகை திகைப்பற வென்பதிற்
றானே கலந்தறை யெண்பத் தோடொன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானெ யெழுநதவச சககரஞ சொலலிடில
மானெ மதிவரை பததிடடு வைததபின
றெனெ யிரெகை திகைபபற வொனபதிற
றானெ கலநதறை யெணபத தொடொனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தானே எழுந்த அச் சக்கரம் சொல்லிடில்
மானே மதி வரை பத்து இட்டு வைத்த பின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த அறை எண்பத்தோடு ஒன்றே.

பதப்பொருள்:

தானே (சாதகருக்குள்ளிருந்து தாமாகவே) எழுந்த (எழுந்து மேலே வந்த) அச் (நவாக்கிரி) சக்கரம் (சக்கரத்தைப் பற்றி) சொல்லிடில் (சொல்ல போனால்)
மானே (தமது மனதையும்) மதி (புத்தியையும்) வரை (ஒன்றாகச் சேர்த்து மானசீக கோடுகளாக) பத்து (இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழுமாகவும் பத்து கோடுகள்) இட்டு (வரைந்து) வைத்த (முறைப்படி சக்கரத்தை அமைத்த) பின் (பிறகு)
தேனே (அமிழ்தமானது) இரேகை (அதன் கோடுகளிலிருந்து கிடைப்பதை பார்த்து) திகைப்பு (திகைத்து போய்) அற (நிற்காமல்) ஒன்பதில் (இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழுமாகவும் உள்ள ஒன்பது அறைகளோடு)
தானே (அதனுடன் தாமும்) கலந்த (ஒன்றாகக் கலந்து இருக்கும்) அறை (அறைகளில் மொத்தம்) எண்பத்தோடு (எண்பத்தொன்று அறைகளில்) ஒன்றே (மனது ஒன்றி இருக்க வேண்டும்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை சாதகர்கள் சாதகம் செய்யும் போது அவர்களுக்குள்ளிருந்து தாமாகவே எழுந்து மேலே வருகின்ற நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி சொல்ல போனால் தமது மனதையும் புத்தியையும் ஒன்றாகச் சேர்த்து மானசீக கோடுகளாக இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழுமாகவும் பத்து கோடுகள் வரைந்து முறைப்படி சக்கரத்தை அமைக்க வேண்டும். அதன் பிறகு அந்தக் கோடுகளில் இருந்து கிடைக்கின்ற அமிழ்த்தைப் பார்த்து திகைத்து போய் நிற்காமல் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழுமாகவும் உள்ள ஒன்பது அறைகளோடு தாமும் ஒன்றாகக் கலந்து நின்று சக்கரத்தில் இருக்கும் மொத்தம் எண்பத்தொன்று அறைகளிலும் மனது ஒன்றி இருக்க வேண்டும்.

பாடல் #1365

பாடல் #1365: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஒன்றிய சக்கர மோதிடும் வேளையில்
வெள்ளி கொள்மேனி மதிவட்டம் பொன்மையாங்
கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்
மன்றிய லம்மை யெழுத்தவை பச்சையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறிய சககர மொதிடும வெளையில
வெளளி கொளமெனி மதிவடடம பொனமையாங
கனறிய ரெகை கலநதிடுஞ செமமையில
மனறிய லமமை யெழுததவை பசசையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வெள்ளி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
மன்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே.

பதப்பொருள்:

ஒன்றிய (சாதகர் மனம் ஒன்றி இருக்கின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) ஓதிடும் (ஜெபம் செய்கின்ற) வேளையில் (போது)
வெள்ளி (வெள்ளி போல) கொள் (வெண்மை நிற ஒளியைக் கொண்டு இருக்கும்) மேனி (சாதகரின் உடலானது) மதி (மனமும் அறிவும்) வட்டம் (முழுமை பெற்று) பொன்மை (தங்க நிற ஒளி) ஆம் (ஆக பிரகாசிக்கும்)
கன்றிய (அப்போது சக்கரத்தில் சக்தியூட்டம் பெற்று முழுமை அடைந்து இருக்கும்) ரேகை (கோடுகளானது) கலந்திடும் (சாதகரின் உடலோடு ஒன்றாக கலந்து) செம்மையில் (செழுமை பெறும்)
மன்று (அதன் பிறகு அம்பலத்தில் இறைவனோடு சேர்ந்து ஆடுகின்ற) இயல் (இயல்பை உடைய) அம்மை (இறைவியின்) எழுத்து (மந்திர எழுத்துக்களாக) அவை (சக்கரத்தில் இருக்கும் பீஜங்கள் அனைத்தும்) பச்சையே (தமது சக்தியூட்டம் குறையாமல் எப்போதும் பசுமையாக நிலைத்து நிற்கும்).

விளக்கம்:

பாடல் #1364 இல் உள்ளபடி சாதகர் மனம் ஒன்றி இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை ஜெபம் செய்கின்ற போது வெள்ளி போல வெண்மை நிற ஒளியைக் கொண்டு இருக்கும் சாதகரின் உடலானது அவரது மனமும் அறிவும் முழுமை பெற்ற பிறகு தங்க நிற ஒளியாக மாறி பிரகாசிக்கும். அப்போது சக்கரத்தில் சக்தியூட்டம் பெற்று முழுமை அடைந்து இருக்கும் கோடுகளானது சாதகரின் உடலோடு ஒன்றாக கலந்து செழுமை பெறும். அதன் பிறகு அம்பலத்தில் இறைவனோடு சேர்ந்து ஆடுகின்ற இயல்பை உடைய இறைவியின் மந்திர எழுத்துக்களாக சக்கரத்தில் இருக்கும் பீஜங்கள் அனைத்தும் தமது சக்தியூட்டம் குறையாமல் எப்போதும் பசுமையாக நிலைத்து நிற்கும்.

பாடல் #1366

பாடல் #1366: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஏய்ந்த மரவுரி தன்னி லெழுதிநீ
வாய்ந்த விப்பொன்னெண்பத் தொன்றி னிரைத்தபின்
காய்ந்தவி நெய்யொட் கலந்துட னோமமு
மாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எயநத மரவுரி தனனி லெழுதிநீ
வாயநத விபபொனனெணபத தொனறி னிரைததபின
காயநதவி நெயயொட கலநதுட னொமமு
மாயநத வியாயிர மாகுதி பண்ணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏய்ந்த மர உரி தன்னில் எழுதி நீ
வாய்ந்த இப் பொன் எண்பத்து ஒன்றில் நிரைத்த பின்
காய்ந்த அவி நெய்யோடு கலந்து உடன் ஓமமும்
ஆய்ந்த அவி ஆயிரம் ஆகுதி பண்ணே.

பதப்பொருள்:

ஏய்ந்த (நவாக்கிரி சக்கரத்தை வரைவதற்கு ஏதுவான) மர (மரத்தின்) உரி (பட்டையை) தன்னில் (எடுத்து அதில்) எழுதி (நவாக்கிரி சக்கரத்தை எழுதி) நீ (நீங்கள்)
வாய்ந்த (அதற்கு ஏற்றபடி வார்க்கப்பட்டு) இப் (புடம் செய்த) பொன் (தங்கத் தகடில் வைத்து) எண்பத்து (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் எண்பத்து) ஒன்றில் (ஓரு அறைகளையும் வரைந்து அதற்குள் எண்பத்தோரு பீஜங்களையும்) நிரைத்த (எழுதி அடைத்த) பின் (பிறகு)
காய்ந்த (நன்றாக காய்ச்சிய) அவி (அவிர் பாகத்திற்கு ஏற்ற) நெய்யோடு (நெய்யுடன்) கலந்து (கலந்து) உடன் (அதனோடு மரக்கட்டைகளை வைத்து) ஓமமும் (ஹோமம் செய்து)
ஆய்ந்த (தங்கத் தகடில் எழுதிய பீஜங்களை நன்றாக ஆராய்ந்து அவற்றையே) அவி (அவிர் பாகமாக) ஆயிரம் (ஆயிரம் முறை ஜெபித்து) ஆகுதி (ஹோமத்தில் ஆகுதி / சமர்ப்பணம்) பண்ணே (செய்யுங்கள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை வரைந்து பூஜை செய்வதற்கு ஏதுவான மரத்தின் பட்டையை எடுத்து அதில் சக்கரத்தை எழுத வேண்டும். அதன் பிறகு அதற்கு ஏற்றபடி வார்க்கப்பட்டு புடம் செய்த தங்கத் தகடில் மரப் பட்டையை வைத்து நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் எண்பத்தோரு அறைகளையும் வரைந்து அதற்குள் எண்பத்தோரு பீஜங்களையும் எழுதி அடைக்க வேண்டும். அதன் பிறகு நன்றாக காய்ச்சிய அவிர் பாகத்திற்கு ஏற்ற நெய்யுடன் கலந்து அதனோடு மரக்கட்டைகளை வைத்து ஹோமம் செய்து தங்கத் தகடில் எழுதிய பீஜங்களை நன்றாக ஆராய்ந்து அவற்றையே அவிர் பாகமாக ஆயிரம் முறை ஜெபித்து ஹோமத்தில் சமர்ப்பணம் செய்யுங்கள்.

குறிப்பு:

இதுவரை நவாக்கிரி சக்கரத்தை மானசீகமாக சாதகம் செய்யும் முறைகளை அருளிய திருமூலர் இந்தப் பாடலில் இருந்து வெளிப்புற பூஜையில் நவாக்கிரி சக்கரத்தை அமைத்து சாதகம் செய்யும் முறைகளை அருளுகிறார்.

பாடல் #1367

பாடல் #1367: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பண்ணிய பொன்னைப் பகைப்பற நீபிடி
யெண்ணிய நாள்களி லின்பமே யெய்திடு
நண்ணிய நாமமு நான்முக னொத்திடுஞ்
சொல்லிய லேறிற் சொக்கனு மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பணணிய பொனனைப பகைபபற நீபிடி
யெணணிய நாளகளி லின்பமெ யெயதிடு
நணணிய நாமமு நானமுக னொததிடுஞ
சொலலிய லெறிற சொககனு மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பண்ணிய பொன்னை பகைப்பு அற நீ பிடி
எண்ணிய நாள்களில் இன்பமே எய்திடும்
நண்ணிய நாமமும் நான் முகன் ஒத்திடும்
சொல் இயல் ஏறில் சொக்கனும் ஆகுமே.

பதப்பொருள்:

பண்ணிய (சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய) பொன்னை (தங்கத் தகடை) பகைப்பு (எந்தவித குற்றங்களோ தீய எண்ணங்களோ) அற (இல்லாமல்) நீ (சாதகர்) பிடி (கைவரப் பெற்றால்)
எண்ணிய (சாதகர் சாதகத்தில் தியானித்து இருக்கும்) நாள்களில் (அனைத்து நாட்களிலுமே) இன்பமே (பேரின்பமே) எய்திடும் (கிடைத்துக் கொண்டிருக்கும்)
நண்ணிய (சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும்) நாமமும் (நவாக்கிரி சக்கரத்திலுள்ள பீஜ மந்திரங்களும்) நான் (நான்கு) முகன் (முகங்களைக் கொண்ட பிரம்மனின்) ஒத்திடும் (படைத்தல் தொழிலுக்கு சமமான சக்தி மந்திரத்திற்கும் வரப் பெறும்)
சொல் (சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் மந்திர பீஜங்களின்) இயல் (சக்தியின் இயல்பை) ஏறில் (முழுவதுமாகப் பெற்று விட்டால்) சொக்கனும் (சாதகரும் சிவனைப் போலவே அன்பாளனாகவும் அருளாளனாகவும்) ஆகுமே (ஆகிவிடுவார்).

விளக்கம்:

பாடல் #1366 இல் உள்ள முறைப்படி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய தங்கத் தகடை எந்தவித குற்றங்களோ தீய எண்ணங்களோ இல்லாமல் சாதகர் கைவரப் பெற்றால் அவர் தியானித்து இருக்கும் அனைத்து நாட்களிலுமே பேரின்பமே கிடைத்துக் கொண்டிருக்கும். சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலுள்ள பீஜ மந்திரங்களும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனின் படைத்தல் தொழிலுக்கு சமமான சக்தி மந்திரத்திற்கும் வரப் பெறும். அதன் பிறகு அந்த மந்திர பீஜங்களின் சக்தியின் இயல்பை சாதகர் முழுவதுமாகப் பெற்று விட்டால் சாதகரும் சிவனைப் போலவே அன்பாளனாகவும் அருளாளனாகவும் ஆகிவிடுவார்.