பாடல் #884

பாடல் #884: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரானின்ஓர் எழுத்தே.

விளக்கம்:

ஞானங்களிலெல்லாம் மேன்மையானது என்று ஞானியரால் புகழப்படுகின்ற சிவஞானத்தையே யான் போற்றிக் கொண்டாடுகிறேன். எனது சிந்தனையில் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் போற்றுதற்குரிய திருவடிகளையே சிந்தித்து சிவஞானத்தில் தெளிவு பெறுகிறேன். யான் தெளிந்து பெற்ற சிவயோகத்தை உங்களுக்கும் சொல்லுகின்றேன் கேளுங்கள். சிவயோகமாவது நமது இறைவனைப் போற்றும் மந்திரங்கள் அனைத்திற்கும் மேலானதாகிய ஓங்காரம் எனும் ஒற்றை எழுத்து மந்திரத்தை உச்சரிக்காமல் எண்ணத்தில் வைத்து மூச்சுக்காற்றோடு கலந்து ஜெபித்துக் கொண்டே இருப்பதாகும். இதையே யானும் எப்போதும் செய்து கொண்டே இருக்கிறேன்.

பாடல் #885

பாடல் #885: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஓரெழுத் தாலே உலகெங்குந் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

விளக்கம்:

பிரணவமாகிய ஓம் என்னும் ஓரெழுத்து மந்திரத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் தாமாகி விரிந்து பரவி இருக்கும் இறை சக்தியே அகாரம் உகாரம் ஆகிய இரண்டு எழுத்துக்களால் சிவம் சக்தி எனும் இருவராக இருந்து பிறகு அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களால் ஒன்றாகி மாபெரும் ஜோதியாக உருவெடுப்பதை மாயை எனும் பேரெழுத்தில் மறைக்கப்பட்டிருக்கும் உலத்தவர்கள் அறிந்துகொள்ளாமல் இறை சக்தியை பலதில் தேடி மயங்குகின்றார்கள்.

பாடல் #886

பாடல் #886: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருவம் பலமே
தேவர் உறைகின்ற தென்பொதுவே ஆமே.

விளக்கம்:

தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலையான தேவனாகிய இறைவன் தங்கியிருக்கும் இடமே சிற்றம்பலம் என்றும், சிதம்பரம் என்றும், திரு அம்பலம் என்றும், தென் நாடு என்றும் போற்றப்படுகின்றது. அந்த தென்நாட்டில் வீற்றிருக்கும் இறை சக்தி உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது ஆகும்.

பாடல் #887

பாடல் #887: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத் தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமே சங்காரத் தருந்தாண் டவங்களே.

விளக்கம்:

பாடல் #886 ல் உள்ளபடி உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான இறை சக்தி வீற்றிருக்கும் தென் நாட்டு சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலம் இறைவனின் ஐந்து வகையான திருக்கூத்துக்களை (நடனம்) காட்டி நிற்கின்றது. அவை அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உயிர்களையும் படைக்கின்ற அற்புத தாண்டவம், அந்த உயிர்களில் உண்மை ஞானம் பெற்றவருக்கு பேரின்பத்தைக் கொடுக்கும் ஆனந்த தாண்டவம், அனைத்து உயிர்களின் வாழ்க்கை முழுதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு மூச்சாய் உயிராய் இயங்குகின்ற அனவரத் தாண்டவம், அவற்றின் விதி முடியும் போது உலக வாழ்க்கையை அழித்து அருளுகின்ற சங்காரத் தாண்டவம், உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் முற்றாக அழித்துத் தம்மோடு மீண்டும் சேர்த்துக்கொள்ளும் ஊழிக்காலப் பிரளயத் தாண்டவம் ஆகிய பெருமை வாய்ந்த ஐந்து தாண்டவங்களே ஆகும்.

பாடல் #888

பாடல் #888: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரந்
தாண்டவக் கூத்துத் தமனியத்திற் தானே.

விளக்கம்:

ஈடு இணையில்லாத தனியெழுத்தான ஓம் என்கிற பிரணவ மந்திரமே இறைவன் ஆடும் தாண்டவத் திருக்கூத்து ஆகும். அந்த தாண்டவமாக இருப்பது அனைத்து உயிர்களுக்கும் மாபெருங்கருணையில் அருள்புரியும் இறைவனது அருளல் தொழிலாகும். தாண்டவத் திருக்கூத்து ஆதியும் அந்தமுமின்றி தனித்து நிற்கும் இறைவனின் தன்மை ஆகவும் இருக்கிறது. இந்தத் தாண்டவத் திருக்கூத்துதான் தில்லையில் பொன்னம்பலத்தில் எப்போதும் நடந்துகொண்டு இருக்கின்றது.

பாடல் #889

பாடல் #889: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந்
தானே அகார உகாரம தாய்நிற்குந்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலமுந் தானே.

விளக்கம்:

ஆதி அந்தமில்லாத இறை சக்தியாகிய பரம்பொருளே பேரொளியின் ஒளி உருவத் தத்துவமாகவும் ஓங்கார மந்திரத்தின் அகார உகார எழுத்துக்களாகவும் பேரொளியின் ஒளி உருவத் தாண்டவத் திருக்கூத்தாகவும் அண்ட சராசரங்கள் அனைத்தையும் தாங்கி அருட் சக்தியாகிய தம்மையும் தாங்கி நிற்பதாகவும் இருக்கின்றது.

பாடல் #890

பாடல் #890: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தராதல மூலைத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமவா சியவாந்
தராதலஞ் சொல்லிற் றான்வா சியவாகுந்
தராதல யோகந் தயாவாசி யாமே.

விளக்கம்:

அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கும் ஆதி அந்தமில்லாத பரம்பொருளாகிய இறை சக்தியே இந்த உலகத்திலுள்ள உயிர்களுக்குள் மூலாதாரத்தில் நமசிவாய என்றும் அதைச் சுற்றியுள்ள அக்கினி மண்டலத்தில் நமவாசிய என்றும் உடலைச் சுற்றியுள்ள சூரிய மண்டலத்தில் வாசிய என்றும் உடலைத் தாண்டி யோக நிலையில் பெறும் கருணையான பரவெளியைச் சுற்றியுள்ள சந்திர மண்டலத்தில் வாசி என்றும் மந்திரச் சொற்களாக இருக்கின்றது.

பாடல் #891

பாடல் #891: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா விடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதியே ஆனந்த மாமே.

விளக்கம்:

பிரணவ மந்திரமான ஓங்காரத்தில் அகாரம் சிவமாகவும் உகாரம் சக்தியாகவும் இருக்கின்றது. இந்த இரண்டு பரம்பொருள்களைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது சிற்றறிவினால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும். இவற்றை இறைவன் ஆடும் திருக்கூத்தின் உண்மையான ஞானத்தைப் பெற்ற யோகியர்களால் மட்டுமே அறிந்து உணர முடியும். ஞானத்தை பெற்று அகார உகாரமாக இருக்கும் சிவசக்தியை அறிந்து உணர்ந்து விட்டால் அதுவே அவர்களுக்கு இறைவனிடத்தில் சரணாகதியாகவும் பேரின்பம் கொடுக்கும் பேரானந்தமாகவும் இருக்கும்.

பாடல் #892

பாடல் #892: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் இங்கில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாகவே அகப்படுந் தானே.

விளக்கம்:

ந என்கின்ற சிகார எழுத்தும் ம என்கின்ற வகார எழுத்தும் அறிவெழுத்துக்கள் ஆகும். ந எழுத்து அறிவைச் செலுத்துவதும் ம எழுத்து செலுத்தியவாற்றிலே சென்று அறிவதும் ஆகும். அறிவதாகிய வகாரம் தன்னைச் செலுத்துவதாகிய சிகாரத்திலே அடங்கி விடும். அதோடு யகரமாகிய சிவம் சேர்க்க வரும் சிவாய என்னும் மூன்றெழுத்து ஆன்மாக்களுக்கு ஆனந்தத்தை வழங்குவதை அறிபவர் மிகச் சிலரே. இவற்றை அறிந்து கொள்பவர்களுக்கு சிவன் ஆனந்த கூத்தனாய் இருப்பதும் அவன் ஆனந்தக்கூத்தும் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #893

பாடல் #893: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

படுவ திரண்டு பலகலை வல்லார்
படுவ தோங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

விளக்கம்:

இறைவனை பல வகையான யோகத்தாலும் ஞானத்தாலும் தமக்குள் உணர்ந்து அடைந்த இறைவனை உணர்ந்து கொள்ளும் முறைகளாக யோகியர்களாலும் ஞானியர்களாலும் சொல்லப்படுகிறது. அவை அம் சம் என்கிற இரண்டு பீஜங்களும் ஓங்காரம் (ஓம்) பஞ்சாட்சரம் (நமசிவாய) எனும் இரண்டு ஆதார மந்திரத் தத்துவங்கள் அடங்கி இருக்கும் இறைவனின் சங்காரத் தாண்டவத்தின் அருளல் தொழிலுமாகிய இவை அனைத்தும் உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு சக்கரங்களிலும் பரவி இருக்கும் முறைகளும் ஆகும்.