பாடல் #201

பாடல் #201: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.

விளக்கம்:

எனக்கு இவள்தான் என்று உறுதிமொழி கூறி திருமணம் செய்த அன்பான மனைவி தமது வீட்டில் இருக்கும்போதே மற்றொருவர் திருமணம் செய்து பாதுகாத்து வைத்திருக்கும் மனைவியர் மீது ஆசைப்படும் இளைஞர்கள் தமது வீட்டின் கொல்லைப்புறத்தில் காய்த்து பழுத்துத் தொங்கும் பலாப் பழத்தை சாப்பிட விரும்பாமல் எங்கோ முட்காட்டுச் செடிகளுக்கு நடுவே வளர்ந்து கிடக்கும் ஈச்சம் பழத்தைச் சாப்பிட ஆசைப்படுவது போன்ற முட்டாள்தனம்.

பாடல் #202

பாடல் #202: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்த மிலாத புளிமாங்கொம் பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

விளக்கம்:

நன்றாக உரமிட்டு நீர் பாய்ச்சி பாதுகாத்து வளர்த்த மாமரத்தில் விளைந்த சுவைமிகுந்த மாம்பழத்தை சாப்பிட விரும்பாமல் அதை பத்திரமாக அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு தமக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத யாரோ இட்ட விதையிலிருந்து எப்போதோ பெய்த மழை நீரில் வளர்ந்த புளிய மரத்தில் விளைந்த புளியம் பழத்திற்கு ஆசைப்பட்டு உறுதியில்லாத புளிய மரத்துக் கிளையில் ஏறி புளியம் பழத்தை பறிக்கும் போது கிளை முறிந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வது அறிவற்ற செயல். அதுபோல் தமக்கு பெற்றவர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த அழகிய மனைவி இருக்கும்போது அவளை அறைக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டு மற்றவரின் மனைவியின் மேல் ஆசைப்பட்டால் அறைக்குள் பூட்டி வைத்த பழம் எப்படி நாளாக நாளாக அழுகிவிடுமோ அதுபோலவே கட்டிய மனைவியை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தால் அவளுக்கும் முதுமை வந்து அவள் மூலம் பெறக்கூடிய சந்ததி இல்லாமல் போய்விடும்.

பாடல் #203

பாடல் #203: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

விளக்கம்:

உலகத்தில் இருக்கும் செல்வங்களே சிறப்பானவை என்று எண்ணி செல்வங்களை மேலும் மேலும் பெருக்க விரும்பி பல நாடுகளில் படை எடுத்துப் பெரும் செல்வம் சம்பாதித்த அரசனும் இருண்ட வானத்தில் எப்போதாவது தோன்றுகின்ற மின்னல் ஒளி போல அறியாமையாகிய இருளில் எப்போதாவது தோன்றும் சிற்றறிவு ஞானத்தையே பெரிதாக எண்ணிக்கொண்டு தமக்கு அனைத்தும் தெரியும் என்று காட்டிக் கொள்கின்றவனும் ஆண்களைக் கண்டால் பயந்து பார்க்கும் அழகிய பெண்களைக் கண்டு அவர்களின் அழகில் மயங்கி மோகம் கொண்டால் தங்களது அறிவு இருளாகிக் கொண்டு இருப்பதை அறிந்திருப்பவர் ஆகிய இந்த மூவலும் மோகத்தில் சிக்கிக்கொண்ட தங்களின் எண்ணங்களை மாற்ற முடியாமல் இருப்பார்கள் இவர்கள்.