பாடல் #197

பாடல் #197: முதல் தந்திரம் – 6. கொல்லாமை

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்வதற்கு வழிகாட்டியாக இருக்கும் குருவான இறைவனுக்கு செய்யும் பூஜைக்குப் பலவித மலர்கள் உள்ளது. உயிர்களின் உள்ளத்தால் கிடைக்கும் மலர்களும் உள்ளன. பிற உயிர்களைக் கொல்லாமை ஐந்து புலன்களையும் அடக்கிய பொறியடக்கம் பொறுமை இறைவனை அடைய சிந்திக்கும் அறிவு உண்மையை மட்டுமே பேசும் வாய்மை உண்மையான தவம் அன்பு ஆகியவை இதில் மிகவும் சிறந்த மலர் கொல்லாமையே ஆகும். இறைவனைப் பற்றிய எண்ணத்திலிருந்து சிறிதும் கூட மாறிவிடாத எண்ணங்களே இறைவனின் பூஜைக்கு மிகவும் சிறந்த தீபமாகும். இவை அனைத்தையும் உணர்ந்து செயல்படும் உயிர் சென்று அமரும் இடம் தலை உச்சியிலுள்ள சகஸ்ரரதளமாகும். அவ்வாறு அமர்ந்த உயிர் இறைவனையே அடைந்து பேரின்பம் பெறுகின்றது.

கருத்து : இறைவனை அடைய உலகத்தில் கிடைக்கும் மலர்களில் இறைவனுக்கு செய்யும் பூஜைகளை விட புலனடக்கம் அன்பு தியானம் அறிவு கொல்லாமை பொறுமை வாய்மை ஆகிய நல்ஒழுக்க மலர்களால் இறைவனை பூஜிப்பதால் விரைவில் இறைவனையே அடைந்து பேரின்பம் அடையலாம்.

பாடல் #198

பாடல் #198: முதல் தந்திரம் – 6. கொல்லாமை

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துமவர் தாமே.

விளக்கம்:

பிற உயிர்களை கொன்றுவிடு குத்திவிடு என்று கொலைவெறி பிடித்துக் கூறும் மிருகத்தன்மை கொண்டவர்களை வலிமையாக அடிக்கக்கூடிய எமனின் தூதுவர்கள் வந்து வலிமையான பாசக் கயிற்றால் கட்டி அடிக்கடி நில் செல் என்று மாறி மாறி அதட்டிக் கொண்டே இழுத்துச் சென்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் தீயில் கொண்டு சென்று இங்கேயே நில் என்று கொடிய வெப்பம் கொண்ட தீயினுள்ளேயே நிறுத்திவிடுவார்கள்.