பாடல் #300

பாடல் #300: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (தெளிவான கேள்வி கேட்டு மனத்தை அடக்கியிருத்தல்)

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

விளக்கம் :

அறநூல்கள் சொல்லும் உண்மைகளைக் கேட்டும் பாடல் # 224ல் உள்ளபடி இருக்கும் அந்தணர்களின் அறிவுரைகளைக் கேட்டும் பாவங்கள் இவை என கூறும் நீதிநூல்கள் கூறுவதை கேட்டும் தேவர்களின் வழிபாட்டு கூறிய மந்திரங்களைக்கேட்டும் இறைவனைப்பற்றி சொல்லாத பிற நூல்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களைக் கேட்டும், பொன் போன்ற ஈசனின் திருமேனியாக இருக்கும் அவன் நாமத்தையும் அதன் தன்மைகளையும் கேட்டு அதன் படி நடந்தால் சிவகதி அடையலாம்.

பாடல் #301

பாடல் #301: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்துஅவர் ஓங்கிநின் றாரே.

விளக்கம்:

தேவர்களின் தலைவனாக இருப்பவனும் அனைத்திலும் மேலானவனுமான இறைவனை ஒருவரும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ளுவதில்லை. இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்த பின் அவரை அடைய அவரின் நாமத்தை சொல்லுங்கள். இறைவனை அறிந்த குருவிடம் அவரைப்பற்றி கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள். இறைவனை நாமங்களை ஒருவர் ஓதி உணர்ந்து விட்டால் அவர் இறைவனின் அடியார்களின் மத்தியில் உயர்ந்து நிற்பார்.

பாடல் #302

பாடல் #302: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்
அயன்பணி கேட்பது அரன்பணி யால்
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

விளக்கம்:

குருநாதராக இருந்து இறைவன் வழங்கிய சிவ ஆகமங்களை கேட்டு உணர்ந்தால் அதன் மூலம் திருமால் இறைவனின் ஆணை பெற்று காக்கும் தொழிலை புரிவதையும் பிரம்மன் இறைவனின் ஆணை பெற்று படைக்கும் தொழிலை புரிவதையும் உருத்திரன் இறைவனின் ஆணை பெற்று அழிக்கும் தொழிலை புரிவதையும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரிந்து உணர்ந்தபின் இறைவனிடம் சிவபணி வேண்டும் என்று எவர் ஒருவர் கேட்டுப் பெறுகிறாரோ அவரே அடுத்து தேவர்களாக மாறி என்றும் அழியாத இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு சிவபணி புரியலாம்.

குறிப்பு : அனைத்து தேவர்களும் சிவனடியாராக இருந்து இறைவனிடம் சிவபணி கேட்டு பெற்று தேவர்களாக நின்று அருள் புரிபவர்கள் தான்.

பாடல் #303

பாடல் #303: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

பெருமான் இவனென்று பேசி யிருக்கும்
திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

விளக்கம்:

தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம் ஒருவன் சிவன் என்பதை அறிந்து கொள்ள தனக்குள் பேசி கேள்வி கேட்டு கேள்வி ஞானத்தின் மூலம் பெரிய தவம் புரிந்த மானிடர்கள் தேவர்களாவதற்கு மகிழ்ந்து அருள் செய்கிறார் தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய ஆதியிலிருந்து இருக்கும் சிவபெருமான்.

குறிப்பு : அமைதியாக பேசாமல் அமர்ந்து இறைவன் யார் என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு இறைவன் அருளால் இறைவனை அடைவதும் பெரிய தவமே.

பாடல் #304

பாடல் #304: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமும் ஆகும் நிகழொளி யாய்நின்று
வாசமலர்க் கந்தமாய் மன்னிநின் றானே.

விளக்கம்:

இறைவன் அருளால் வரும் இறப்பும் பிறப்பும் எப்படி வருகிறது என்று தனக்குள் பேசி கேள்வி கேட்டு பிதற்றி அந்த கேள்வி ஞானத்தால் பதில் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து இருந்தால் வாசனை மிக்க மலர்களில் கலந்திருக்கும் நறுமணம் போல பேரொளியாய் திகழும் இறைவனும் நம்மோடு கலந்து நிற்பான்.

பாடல் #305

பாடல் #305: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

விளக்கம்:

சிவபெருமானின் சிறப்பைப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்வோம். அதனால் கிடைக்கும் ஞானத்தினால் ஒழுக்கம் பெறுவோம். ஒழுக்கத்தினால் நம்மிடம் உண்டாகும் மாற்றத்தை சிந்தையில் உணர்வோம். உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து வழுக்கி விடாமல் தொடர்ந்து நிலையாக இருந்தோமானால் வானத்திலிருக்கும் தேவர்களுக்கெல்லாம் அரசனான இறைவனும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாது எண்ணிலடங்காத காலம் அவர்களுடனே இருந்து பேரின்பத்தை அருளுவான்.

பாடல் #306

பாடல் #306: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானத்தின் மூலம் இறைவனை அடைதல்)

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவரவர் அன்றே.

விளக்கம்:

சிறு பிள்ளைகள் மணலில் வீடு கட்டி களிமண் சோறு சமைத்து அதை உண்மையான சோறுபோல பாவித்து சாப்பிட்டு இன்பப்படுவது போல உண்மையில்லாத உலக ஆசைகளை அனுபவித்து இன்பம் அடைந்துவிட்டு இறையருள் கிடைத்துவிடும் என்று நினைப்பது பொய்யானதாகவே இருக்கும். இறைவன் இப்படிப்பட்டவர் அவரை இப்படி அணுகலாம் என்று குறிப்பால் உணர்த்திவிட முடியாத இறைவன் ஒருவர் இருக்கிறார் அவரை அறிந்து கொள்ளவேண்டும் என்ற கேள்விஞானம் கூட இல்லாமல் வாழ்க்கையை உலக இன்பங்களின் வழி நடப்பவர்கள் எப்போதுமே இறைவனையும் அறியமாட்டார்கள் தம்மையும் அறியமாட்டார்கள்.

பாடல் #307

பாடல் #307: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கில் பிறப்பில்லை தானே.

விளக்கம்:

உலக வாழ்கை வாழ்ந்து இறைவனை அடைய உற்ற துணையாக இருப்பது உயிரும் உடலும் ஆகும். அந்த உயிர் சிவசிந்தனை பெறுவதற்கு உற்ற துணையாக இருப்பது கல்வியும் கேள்வியும் ஆகும். அந்த கேள்வி ஞானத்தால் சிவனது திருவடியை சிந்தையில் வைத்திருப்பது இறைவனை அடைய தக்க துணையாகும். அத்தகைய மிகப்பெரிய துணையை கேட்டுப் பெற்றால் பிறவியில்லை.

பாடல் #308

பாடல் #308: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

விளக்கம்:

இறைவனை கேள்வி ஞானத்தின் மூலம் உணர்ந்து போற்றிப் புகழ்ந்து இருக்கின்ற அடியவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் ஆதிகாலத்திலிருந்து இருக்கும் ஈசன். இறைவனை இகழ்ந்து பேசி இருக்கின்ற மற்றவர்களுக்கு மறக்கருணையினால் துன்பத்தைக் கொடுத்து வினை தீர்ப்பான். அப்படிப்பட்ட ஆதியான இறைவனின் பெருமைகளை உள்ளம் மகிழ்ந்து ஓதி உணராமல் இருப்பவர்களுக்கு இறைவன் கல்லால் ஆன பசு போன்றவன். கல்லாலான பசு எப்படி பாலைத் தராதோ அதுபோல அவர்களுக்கு இறைவனது அருளும் எப்போதும் கிடைக்காது.

Image result for lingam


பாடல் #309

பாடல் #309: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

வைத்துஉணர்ந் தான்மனத் தோடும் வாய்பேசி
ஒத்துஉணர்ந் தானுரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுஉணர்ந் தார்க்கே நணுகலு மாமே.

விளக்கம் :

இறைவனை உள்ளத்தில் வைத்து மனதோடு ஒன்றி தான் வேறு இல்லை இறைவன் வேறு இல்லை என்று உணர்ந்தவர்களும் தன் வாயிலிருந்து பேசும் வார்த்தைகள் அனைத்தும் இறைவனின் வார்த்தையாக உணர்ந்தவர்களுக்கும் அசையும் பொருள் அசையாபொருள் என உருவங்கள் பலவாக இருந்தாலும் அனைத்து உருவங்களிலும் இருப்பவன் இறைவன் ஒருவனே என்று உணர்ந்தவர்களும் உடம்பு என்னும் அச்சிலிருந்து உயிர் என்னும் ஆணி கழன்று விழும் போது ஆதியான சிவபெருமானை விரும்பி உணர்ந்தவர்களுக்கே அவனை அணுகி அடைய முடியும்.