பாடல் #248

பாடல் #248: முதல் தந்திரம் – 14. வானச் சிறப்பு (வானத்திலிருந்து பெய்யும் மழையின் சிறப்பு)

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.

விளக்கம்:

அமிர்தம் போன்றது மழை நீர். அதன் மூலம்தான் பாக்கு மரம், தென்னை மரம், கரும்பு, வாழை மரம் போன்ற பழங்களைக் கொடுக்கும் அமிர்த சுவையை உடைய பலவித மரங்கள் உலகத்தில் தோன்றுகின்றன. ஆனாலும் அமிர்தத்தைத் தரும் இதே மழைதான் நஞ்சைத் தரும் எட்டிக்காய் போன்ற மரங்களையும் உலகத்தில் தோற்றுவிக்கின்றது.

குறிப்பு : மழை நீர் தன்னை சுவையான பழங்களை கொடுக்கும் மரத்திற்கும் விஷத்தை கொடுக்கும் செடிக்கும் பாகுபாடு இல்லாமல் கொடுக்கின்றதோ அதே போல் உயிர்கள் தனக்குள் இருக்கம் அன்பை பாகுபாடு பார்க்காமல் அனைத்து உயிர்கள் மீதும் கொடுக்கவேண்டும்.

பாடல் #249

பாடல் #249: முதல் தந்திரம் – 14. வானச் சிறப்பு (வானத்திலிருந்து பெய்யும் மழையின் சிறப்பு)

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

விளக்கம்:

வானத்திலிருந்து பெய்து மலைமுகடுகள் வழியாக அருவியாக கொட்டும் மழை நீரில் நுரை இருக்காது அழுக்கு இருக்காது. துல்லியமான தெளிந்த நீராக மட்டுமே இருக்கும் அந்த நீரை இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் இறைவன் சிறப்பாக ஏற்றுக்கொள்வான். அது போலவே சொல்லில் இல்லாமல் உயிர்களின் உள்ளத்திலிருந்து ஊறும் எல்லையில்லாத தூய்மையான அன்பினால் உள்ளத்தில் இருக்கும் இறைவனுக்கு செய்யும் அபிஷேகத்தை இறைவன் சிறப்பாக ஏற்றுக்கொள்வான்.