பாடல் #214

பாடல் #214: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

வசைஇல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைஇல் அந்தணர் ஆகுதி வேட்கிலே.

விளக்கம்:

ஒழுக்கத்திலிருந்து சிறிதும் மாறாத வேதம் அறிந்த அந்தணர்கள் கருத்தோடும் சிரத்தையோடும் மந்திரங்கள் ஓதி நெய்யிட்டு ஹோமத்தினால் மாசில்லாத சுத்தமான மழை நீரைத் தரும் மேகங்களைக் கொண்ட வானமும் அது பொழிந்தால் வளம் பெறும் நிலங்களும் அப்படி வளம் பெற்ற நிலங்களில் விளைந்த விளைச்சல்களைப் பெற்று அதைச் சுற்றி எட்டுத் திசையிலும் வாழும் நாட்டு மக்களும் அந்த மக்கள் திசைக்கொரு காவலர்களாக வைத்து வணங்கும் பல தேவர்கள் கூட்டமும் ஆகிய இவை அனைத்தும் தனது காரியங்களை சிறப்பாக செய்ய வேதங்களும் வேள்விகளும் முக்கியமாக இருக்கின்றது.

கருத்து: ஒரு நாட்டில் இருக்கும் அந்தணர்கள் தமது ஒழுக்கத்திலிருந்து சிறிதும் மாறிவிடாமல் சிறப்பான வேதங்களை முதலாக வைத்து முறையாக மந்திரங்கள் ஓதி ஹோமத் தீயை வளர்த்து வந்தால் அந்த நாட்டின் வளமும் அதில் வாழும் மக்களின் வளமும் அவர்கள் வணங்கும் தெய்வங்களின் சக்தியும் சிறப்பாக இருக்கும்.

பாடல் #215

பாடல் #215: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமுமறி வாலே தலைப்பட்ட வாறே.

விளக்கம்:

அரிய பொக்கிஷமான வேதங்களை முறையாக மந்திரங்கள் ஓதி ஹோமத் தீயை வளர்க்கும் அந்தணர்கள் தமது முக்திக்கு வழி தேடி ஹோமம் செய்து பெற்றதை பிறருக்கும் கொடுத்து மிஞ்சியதை மட்டுமே உண்டு வாழ்வார்கள். அப்படி வாழும் அந்தணர்கள் இறைவனை அடையக்கூடிய வாழ்க்கை முறையை உண்மை நெறிப் பாதையை அவர்கள் தவறாமல் செய்த ஹோமத்தின் பயனால் அறிந்து கொண்டு அதன் படியே வாழ்ந்து முக்தி அடைவார்கள்.

கருத்து: வேத முறைப்படி யாகங்கள் தவறாமல் செய்து அதில் கிடைக்கும் பொருட்களைப் பிறருக்கும் கொடுத்து மீதி இருப்பதை உண்டு நெறி தவறாமல் வாழும் அந்தணர்கள் முக்தி அடைவார்கள்.

shiva lingam hd wallpapers Beautiful Photographs 821 best Mahadev images on Pinterest

பாடல் #216

பாடல் #216: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

விளக்கம்:

உயிர்களைக் காத்துக் கொண்டு அவற்றின் துணையாக கூடவே இருப்பது அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயினுள் ஜோதியாக இருக்கும் இறைவனே ஆகும். உயிர்களைக் காத்து துணையாக இருக்கும் இறைவன் அருள் வேண்டி அந்தணர்கள் வேள்விகளை முறையாக செய்ய வேண்டும். முறையாக செய்யப்படும் வேள்வியில் இருக்கும் இறைவனுடன் ஹோமத் தீ இணைந்து வளரும் போது அதன் பயனால் கிடைக்கும் இறையருளே உயிர்களுக்கு துணையாக இருந்து அவர்களை முக்தி பெறும் தூய்மையான வழியில் நடத்திச் சென்று முக்தியையும் அளித்துவிடும்.

பாடல் #217

பாடல் #217: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகியே வெறிக்கின்ற வாறே.

விளக்கம்:

காலை மாலை இரு வேளையிலும் வேத முறைப்படி மந்திரங்கள் ஓதி அந்தணர்கள் ஹோமம் செய்து வந்தால் அந்த ஹோமத்தில் இருக்கும் இறை சக்தியானது ஹோமத்தினால் மகிழ்ந்து உயிர்களுக்கு அருள் வழங்கிவிட்டு உயிர்களின் கூடவே காத்துக் கொண்டு துணையாக நிற்கும். அப்படி செய்யாமல் இருந்தால் ஆண் பெண் இருவரால் உருவாகும் உயிர் காட்டுப் பறவைகளைப் போல தமது விருப்பப்படி அலைந்து திரிந்து மனதில் நிம்மதி இல்லாமலும் செல்வம் இல்லாமலும் துன்பப்பட்டுக் கொண்டு ஆசைகளிலேயே மயங்கிக் கிடக்கும்.

கருத்து: ஒரு நாட்டில் வாழும் உயிர்கள் தமது உலகப் பற்றுக்களை அறுத்து முக்தி பெற வேண்டுமெனில், வேத முறைப்படி தினமும் காலையும் மாலையும் யாகம் செய்யும், பாடல் #215ல் உள்ளபடி பெற்றதை பிறருக்கும் கொடுத்து மிஞ்சியதை மட்டுமே உண்டு வாழும் அந்தணர்கள் அந்த நாட்டில் இருக்க வேண்டும்.

பாடல் #218

பாடல் #218: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரும் அத்தினம் ஆமென்றும்
செய்நின்ற செல்வமும் தீயுமது வாமே.

விளக்கம்:

யாகத்தில் இடும் நெய்யில் பற்றிக் கொண்டு எரியும் பெரிய நெருப்பின் உள்ளிருக்கும் இறைவன் அருளைக் கொண்டு தமது ஆன்ம இருளான மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) எரித்து முக்தி பெறும் விதத்தை அறிந்து கொண்டவர்களுக்கு இருளை நீக்கும் இரத்தினம் போல வேள்வி செய்பவர்களின் உள்ளிருந்து மும்மல இருளை நீக்கி அவர்களை முக்திபெறுபடி செய்யும் மாபெரும் செல்வம் அவர்கள் வளர்த்த ஹோமத் தீயே.

கருத்து: முறையாக வளர்த்த வேள்வித் தீயில் வெளிவரும் இறைஜோதி உயிர்களின் உள்ளே இருந்து அவர்களின் மும்மல இருள்களை நீக்கி முக்திபெற செய்யும் என்பதை அறிந்தவர்கள் வேள்வித் தீயை தினமும் வளர்ப்பார்கள்.

பாடல் #219

பாடல் #219: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

பாழி அகலும் எரியும் திரிபோலிட்
டூழி அகலும் உறுவினை நோய்பல
ஆழி செய்தங்கி உதிக்க அவைவிழும்
வீழி செய்துஅங்கி வினைசுடு மாமே.

விளக்கம்:

இரவு நேர இருளை நீக்க ஆழமான அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றித் திரியை இட்டு எரித்து ஒளியைப் பெறுவது போல பிறக்கும்போதே உயிர்களுடன் பிறக்கும் வினைகளையும் அவற்றின் பயனால் வரும் பலவித துன்பங்களையும் நீக்க யாகக் குழி ஏற்படுத்தி அதில் நெய்யை ஊற்றித் திரிபோல குச்சிகளை இட்டு முறைப்படி மந்திரங்கள் ஓதி யாகம் செய்தால் அந்த யாகத்திலிருந்து தோன்றும் இறைஜோதியானது மேலெழும்பிய உடனே வினைகளை சுட்டு எரித்து விடும் வினையினால் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் விழுந்துவிடும்.

கருத்து: மோட்சத்திற்குத் தடையாக இருப்பதும் பிறந்த பிறவியில் துன்பங்களைத் தருவதும் பிறப்போடு உடன்வரும் வினைகளே ஆகும். அந்த வினைகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் நீங்கி நிரந்தர மோட்சம் கிடைக்க முறையாக மூட்டிய வேள்வித்தீ உதவி செய்யும்.

பாடல் #220

பாடல் #220: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
அருஞ்செல்வந் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணிப்
பருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றாரே.

விளக்கம்:

உலகத்தில் கிடைக்கும் செல்வங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவை உயிர்களுக்கு துன்பத்தையே கொடுக்கும் கேடு என்பதை உணர்ந்து கொண்டு அரிதான வேதத்தை தந்த இறைவனை நாடுங்கள். இறைவனை அடைந்து பேரின்பமாகிய இறைசெல்வம் கிடைக்க வேண்டும் என்று வேத முறைப்படி யாகத்தை வளர்த்து அதன் மூலம் அதைப் பெறுவதற்கு உயிர்கள் முயற்சி செய்கின்றனர்.

பாடல் #221

பாடல் #221: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுட ரோமத் தலைவனும் ஆமே.

விளக்கம்:

ஈடு இணையில்லாத அழகு பொருந்திய ஜோதியாக இருப்பவனும் அழிவு என்ற ஒன்று இல்லாத தலைவனும் எமது ஆன்மாவோடு இணைந்து எமது உள்ளத்துள் இருக்கின்றவனும் நெற்றிக் கண்ணில் நெருப்பாக இருப்பவனும் ஏழு உலகங்களையும் கடந்து எங்கும் வியாபித்து இருப்பவனும் குளிர்ந்த ஒளியைத் தரும் நிலவைத் தன் தலைமுடியில் சூடியிருப்பவனும் முறையாகச் செய்யப்படும் ஹோமத்திற்கெல்லாம் தலைவன் எம்பெருமான் சதாசிவமூர்த்தியே ஆவான்.

பாடல் #222

பாடல் #222: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடற்
கோமத்துள் அங்கி குரைகனலும் தானே.

விளக்கம்:

ஹோமத்தில் வளர்க்கும் தீயின் உள்ளிருந்து எழும்புகின்ற ஜோதியானவன் எமது இறைவன் சதாசிவமூர்த்தியே. இறந்த உடல்களைத் தகனம் செய்யும் போது அங்கே நெருப்பாக இருந்து உடலை எரிக்கின்றவனும் அவனே. அந்த உடலின் ஆன்மாவை வானத்திற்கு தாங்கி எடுத்துச் செல்கின்றவனும் அவனே. உடல் பிறக்கும்போதே உயிரோடு சேர்ந்து பிறக்கும் கடல் போன்ற வினைகளை ஹோமத்தின் தீயினுள் இருந்து சத்தத்தோடு எரியும் நெருப்பாக சுட்டு எரிப்பவனும் அவனே.

பாடல் #223

பாடல் #223: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்
தங்கி இருக்கும் வகையருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழுமது வாமே.

விளக்கம்:

யாகத்தில் தோன்றும் நெருப்பின் தலைவன் அரும்பெரும் தவத்துக்கு உரியவனான இறைவனே. யாகம் வளர்க்கும் முறைகளை வேதங்களில் வழங்கியவனும் அவனே. வேத முறைகளை பலவித ஆகமங்களாக வகைபடுத்தி அருளியவனும் அவனே. இறைவன் வழங்கிய வேதங்களையும் ஆகமங்களையும் தவறாது செயல்படுத்தி, உலகத்தில் எங்கு சென்றாலும் அங்கு முறைப்படி யாகத்தை வளர்த்து யாகத்தின் மூலம் அங்கிருக்கும் உயிர்களுக்கு இறைவனின் அருளைக் கொண்டு வருபவன் அந்தணன். அதனால் அவன் உடலளவில் சிறிது துன்பப்பட்டாலும் அந்த துன்பத்திலிருந்து இளைப்பாறி பெருமளவு இன்பம் பெறும்படி இறைவன் அவனுக்கு வழங்குவது மாபெரும் புகழேயாகும்.

கருத்து: இறைவன் கொடுத்த முறைகளின்படி உலகெல்லாம் சென்று உயிர்கள் இறைவன் அருளைப் பெற வேண்டி எந்த அந்தணன் யாகம் வளர்க்கின்றானோ அவனுக்கு அளவில்லாத அளவு இன்பத்தையும் புகழையும் இறைவனே வழங்கிவிடுவான்.