பாடல் #133

பாடல் #133: முதல் தந்திரம் – 1. உபதேசம்

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

விளக்கம்:

பெரியது எதுவோ அதைவிடவும் பெரியதாக இருக்கும் பெருமையையும் சிறியது எதுவோ அதைவிடவும் சிறியதாக இருக்கும் சிறுமையையும் அறிந்து கொண்டு அருமையையான எம்பெருமான் சதாசிவமூர்த்தியைப் போல அடியவர்களுக்கு அடியவராய் அருளும் எளிமையையும் முழுவதும் அறிந்தவர்கள் யார்? ஆபத்தில் தனது நான்கு கால்கள் ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஒரு ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையைப் போலவே சிவத்தை நோக்கித் தமது ஐம்புலன்களையும் அடக்கித் தியானித்திருக்கும் சிவயோகியர்கள் இறப்பு பிறப்பு இல்லாமல் எப்போதும் இறைவனின் பேரின்பத்திலேயே திளைத்து செயலும் உணர்வும் இல்லாமல் இறைவனின் தன்மைகளை முழுமையாக அறிந்துகொள்வார்கள்.

பாடல் #134

பாடல் #134: முதல் தந்திரம் – 1. உபதேசம்

புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

விளக்கம்:

புரை ஊற்றப்படாத சுத்தமான பாலுக்குள்ளே நெய் கலந்து இருப்பது போலவே கடல் அலைகள் போல அலைபாய்ந்து கொண்டிருக்கும் சிந்தனைகளுக்குள்ளே ஞானகுரு சொன்ன மந்திரத்தை ஜெபித்து இறைவனின் மேல் மனம் ஒருநிலைப்பட்டு இருப்பதை உணர்ந்தவர்கள் தாம் பிறந்த இந்த உடலை விட்டுவிட்டு சூட்சும ஒளியாகி எல்லையில்லாத பேரொளியாகிய இறைவனோடு கலந்து சுத்தமான பரவெளியில் என்றுமே நிலைத்து இருப்பார்கள்.

பாடல் #135

பாடல் #135: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சத்த முதலைந்தும் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

விளக்கம்:

சத்தம் முதலாகிய ஐந்து புலன்களும் அவை தோன்றிய இச்சை வழியிலேயே சென்று அந்த இச்சைகளைத் தீர்த்து பின் அடங்கிவிட்டால் ஆன்மாவின் சித்தமாக இருக்கும் இறைவனின் பேரான்மாவோடு போய் சேர்வதைத் தவிர வேறு வழி இருக்கிறதா? இறைவன் இருக்கும் சுத்தமான பரவெளியில் ஆன்ம ஒளி இறைவனின் பேரொளியோடு சேர்ந்து விடும். பிறவியின் பொருள் இதுதான் என்பதை அனுபவத்தால் அறிந்து கொண்டு தெளிந்த நீரைப் போல மனம் தெளிந்து இருப்பீர்களாக.

பாடல் #136

பாடல் #136: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அப்பினிற் கூர்மை ஆதித்தனின் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

விளக்கம்:

கடல் நீரில் கரிப்பாக கலந்திருக்கும் உப்புச்சத்தே சூரியனின் வெப்பத்தால் ஒன்றுகூடி உப்பு எனும் பேர் பெற்ற பொருளாக உருவம் பெறும். உருவம் பெற்ற உப்பு எனும் பொருளை மறுபடியும் கடல் நீரில் சேர்த்தால் அதன் உருவம் மறைந்து மறுபடியும் கரிப்புச் சத்தாகவே மாறிக் கடலோடு ஒன்றாக கலந்துவிடும். அதுபோலவே சொல்லப்போனால் பேரான்மாவான சிவத்திடமிருந்து பிரிந்து வந்த ஆன்மாவும் இறுதியில் சிவமாகிய பேரான்மாவில் ஒன்றாகக் கலந்து அடங்கிவிடும்.

பாடல் #137

பாடல் #137: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அடங்குபே ரண்டத் தனுஅண்டம் சென்றங்
கிடங்கொண்ட தில்லை ஈதன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

விளக்கம்:

அண்டங்கள் அனைத்துமே அனுக்களாகவே இருப்பதால் அவை அனுவுக்குள் அடங்குபவையாகும். அனுவானது அண்டங்களுக்குள் அடங்கும் ஒரு பொருள் இல்லை அது அண்டங்கள் முழுவதற்கும் மூலப் பொருள். அதுபோலவே உடம்பெடுத்து வந்த உயிர்கள் அனைத்துமே ஆன்மாவால் உருவானவை என்பதால் ஆன்மா உடலுக்குள் அடங்கும் ஒரு பொருள் இல்லை அது உடம்பின் உருவத்திலேயே இருக்கின்ற இறைவனின் ஒரு பகுதி. ஆகவே உடல் முடிந்தபின் உயிர் சென்று சேரும் இடம் எது என்று பார்த்தால் அது எந்த பரமாத்மாவிலிருந்து வந்ததோ அந்த பேரான்மாவாக நின்று கொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளில் தான்.

பாடல் #138

பாடல் #138: முதல் தந்திரம் – 1. உபதேசம்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

விளக்கம்:

பேரான்மாவாக நின்று கொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளை உணர்ந்து கொண்டால் இறைவனின் திருவடியே சிவமாக இருக்கும். இறைவன் இருக்கும் சிவலோகம் எது என்று சிந்தித்தால் இறைவனின் திருவடிகளே சிவலோகமாக இருக்கின்றது. உயிர்கள் சென்று சேருகின்ற இடம் எது என்று சொன்னால் இறைவனின் திருவடிகளே சென்று சேரும் இடமாக இருக்கின்றது. தாமக்குள் இருக்கும் இறைவனை உள்ளுக்குள் உணர்ந்து தெளிபவர்களுக்கு இறைவனின் திருவடிகளே அவர்கள் எப்போதும் சென்று தஞ்சமடையும் இடமாக இருக்கின்றது.

பாடல் #139

பாடல் #139: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

விளக்கம்:

குருவின் திருமேனியைத் தரிசித்து அவரது உருவத்தைத் தமது உருவமாகவே எண்ணி தியானிப்பதும் குருவின் திருநாமத்தை மந்திரமாக சொல்லிக்கொண்டே தியானிப்பதும் குருவின் திருவார்த்தைகளைத் தமக்குள்ளே கேட்டு உணர்வதும் எப்போதும் குருவின் திரு உருவத்தைத் தம் மனதிற்குள் சிந்தித்து தியானிப்பதும் ஆகிய இந்த செய்கைகள் அனைத்தும் மும்மலங்களும் நீங்கித் தாம் யார் இறைவன் யார் என்பதைத் தமக்குள் உணர்ந்து தெளிகின்ற பேரறிவு ஞானத்தைக் கொடுக்கும்.

பாடல் #140

பாடல் #140: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தானே புலனைந்தும் தன்வச மாயிடும்
தானே புலனைந்தும் தன்வசம் போயிடும்
தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.

விளக்கம்:

குருவின் அருளால் இறைவனைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெறுபவர்களுக்குத் தானாகவே இதுவரை அவர்களை ஆட்டி வைத்திருந்த ஐந்து புலன்களும் அவர்களின் வசமாகும். அவ்வாறு அவர்களின் வசமான ஐந்து புலன்களும் அவைகளின் தனிப்பட்ட தன்மைகளை இழந்துவிடும். அவ்வாறு தனிப்பட்ட தன்மைகளை இழந்த ஐந்து புலன்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் விருப்பம் போல செயல்படுபவையாக மாறிவிடும். அவ்வாறு விருப்பம் போல செயல்படும் ஐம்புலன்களும் அவை மூலம் வந்த மலங்கள் முழுவதும் குருவின் திருவருளால் தாமாகவே அவர்களை விட்டு நீங்கி அவர்களின் ஆன்மா மட்டுமே இறைவனைச் சென்று சந்திக்கும்.

பாடல் #141

பாடல் #141: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளினை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

விளக்கம்:

குருவின் அருளினால் தமது அனைத்து மலங்களும் நீங்கிச் சென்று சந்திப்பது இறைவனின் திருவடிகளே ஆகும். எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டியது இறைவனின் திருமேனியே ஆகும். உண்மையை மட்டுமே பேசுகின்ற வாயால் எப்போதும் வணங்கித் துதிக்க வேண்டியது இறைவனின் திருநாமமே ஆகும். நெஞ்சத்திலும் எண்ணத்திலும் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது குருநாதர் கூறிய பொன்னான போதனைகளே ஆகும்.

பாடல் #142

பாடல் #142: முதல் தந்திரம் – 1. உபதேசம்

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

விளக்கம்:

குருநாதர் கொடுத்த புண்ணியமான போதனைகளைத் தமது எண்ணத்தில் வைத்து அவற்றின் பொருளுணர்ந்து தமக்குள் தெளிவு பெற்றவர்கள் தாம் பெற்ற பிறவியின் புண்ணியத்தை அடைந்தவர்கள் ஆவார்கள். அப்படி புண்ணியம் பெற்றவர்கள் குருவின் திருவருளால் இறைவனின் திருநடனத்தைத் தமக்குள்ளே தரிசித்து பேரின்பம் கூடிவர வேதங்கள் துதிக்க விண்ணுலகத்திற்குச் சென்று இறைவனின் திருவடியைச் சேருவார்கள்.