பாடல் #702

பாடல் #702: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

விளக்கம்:

பாடல் 700 ல் உள்ளபடி மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் ஓர் பங்கு மூச்சுக்காற்று கலக்கும். அந்த மூச்சுக்காற்று எழும் இடத்தை சொன்னால் எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகள் வழியாக நான்கு இதழ்களைக் கொண்ட மூலாதாரச் சக்கரத்தின் அக்கினியோடு இருந்தவாறே ஆரம்பிக்கின்றது.

கருத்து: நான்கு இதழ்களாக இருக்கின்ற மூலாதார சக்கரத்தில் இருந்து எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளின் வழியாக ஓர் பங்கு காற்று மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் கலக்கிறது.

குறிப்பு: பாடல் #700ல் உள்ளபடி ஓர் பங்கு மூச்சுக்காற்று பாடல் #701ல் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தோடு மூச்சுக்காற்று கலக்கும் விதத்தை சொன்ன திருமூலர் இப்பாடலில் கீழே இருக்கும் மூலாதார சக்கரத்தில் மூச்சுக்காற்று கலக்கும் விதத்தை கூறுகிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.