பாடல் #700

பாடல் #700: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொ டொன்பது
ஆய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.

விளக்கம்:

ஆராய்ந்து அறிந்து கொள்ளுவதற்கு முடியாத தலைவியாகிய ஆதிசக்தியுடனும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத குண்டலினி சக்தியுடனும் வாயு ஒன்றாகக் கலக்கும் அளவு எவ்வளவு என்று சொன்னால் உயிர்கள் தமக்குள் இழுக்கப்படும் மூச்சுக்காற்றில் 540 அளவுகளில் 539 அளவு உடலின் சக்தியூட்டத்திற்கு பயனாகி மீதியிருப்பது ஒரு அளவே ஆகும். அந்த ஒரு அளவு வாயு மட்டும் உடலின் உள்ளிருந்து மேலே சென்று அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கின்றது.

540 வாயு அளவு விளக்கம்: ஆரோக்யமான ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான். இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இதை 40 கூறுகளாகப் பிரித்தால் மொத்தம் 21,600/40 = 540 பங்குகள் வரும். இந்த 540 பங்கு மூச்சுக்காற்றில் 539 பங்கு மூச்சுக்காற்று உடலின் சக்தியூட்டத்திற்கு பயனாகிறது. ஒரு பங்கு மூச்சுக்காற்று சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைசக்தியுடன் கலக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.