பாடல் #494

பாடல் #494: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானம் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவமும் விட்டுநின் றாரே.

விளக்கம்:

உயிர்களின் வகைகளில் முதலாவதாக இருக்கும் விஞ்ஞானர் மாயையும் கன்மமும் நீங்கப் பெற்ற ஜீவன் முக்தர்களாக நான்கு வகைப்பட்டு இருப்பவர்கள். முதலாவது வகையினர் ஞானம் பெற்றும் ஆணவம் நீங்காத தஞ்ஞானர் (அதமர்). இரண்டாவது வகையினர் அட்டவித்தீசுர நிலையை அடைந்த எஞ்ஞானர் (மத்திமர்). மூன்றாவது வகையினர் ஏழு கோடி மந்திரங்களின் நிலையை அடைந்த மந்திர நாயகர் (உத்தமர்). நான்காவது வகையினர் உண்மை ஞானமாகிய பேரறிவை பெற்று ஆணவ மலத்தையும் விட்டு நின்ற மெய்ஞ்ஞானர் (சித்தர்).

1, அதமர் விளக்கம்: (ரிஷிகள்)

ஞானம் அடைந்தாலும் தனிப்பட்ட தனது பெயரினால் அழைக்கப்பட்டு இறைவனுடன் கலக்காலம் இறைவனுக்காக யாகங்கள் பூஜைகள் செய்து கொண்டிருப்பவர்கள் அதமர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

2, அட்டவித்தீசுர நிலை பெற்ற மத்திமர் விளக்கம்: (யோகிகள்)

யோகத்தின் வழியாக எட்டு விதமான ஞானம் தத்துவ நிலைகளைப் பெற்று ஈஸ்வர நிலையை அடைந்து எட்டுவிதமான ஞானத்தைப் பெற்றவர்கள் மத்திமர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

3, ஏழு கோடி மந்திர நிலை பெற்ற உத்தமர் விளக்கம்: (தேவர்கள்)

மந்திரங்களில் முக்கியமான 1. நம 2. சுவாஹா 3. சுவதா 4. வெளஷட் 5. வஷ்ட் 6. பட் 7. ஹம் ஆகிய ஏழு விதமான வார்த்தைகளில் முடிகின்ற மந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கோடி வீதம் மொத்தம் ஏழு கோடி ஆகும். இந்த ஏழு கோடி மந்திரங்களாலும் உச்சரித்துப் போற்றி வணங்கப்படும் நிலையை அடைந்தவர்கள் மந்திர நாயகர் என்றும் உத்தமர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

4, சித்தர்கள் விளக்கம்: இறத்தால் தானே பிறப்பதற்கு என்று என்றும் இறப்பில்லாமல் இருப்பதற்கு பல தியான, யோகமுறைகளை கையாண்டு அட்டமா சித்திகள் அடைந்து ஆணவம், கன்மம், மாயை நீங்கி இறைவனை உணர்ந்து ஞானத்தை அடைந்து உடலோடு தானே இறைவன் என்ற நிலையில் இருப்பவர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.