பாடல் #468

பாடல் #468: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளையில் விளைந்தது தானே.

விளக்கம்:

இன்பத்தில் கலந்த ஆண் பெண் இருவரும் மனமொத்து வைத்த கருவாகிய மண் (பிண்டம்) பந்த பாசத்தால் சிக்குண்டு துன்பத்தைப் பெறும் களிமண்ணாலான கலசம் போன்றது. அதைக் குயவன் போல குழைத்து உருவாக்குபவன் இறைவன் ஒருவனே. இந்தக் களிமண்ணாலான கலசத்தில் ஒன்பது துவாரங்களும் (கண்கள் 2 காதுகள் 2 மூக்குத்துவாரம் 2 வாய் பிறவிக்குறி ஆசனவாய்) பதினெட்டு அச்சாரங்களும் (எலும்புகள்) உள்ளன. எப்படி குயவன் தான் குழைத்து உருவாக்கிய கலசம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சூளையில் இட்டு சுடுகின்றானோ அதுபோல இறைவனும் கருவை தாயின் சூடான அடிவயிற்றுக் கருப்பை எனும் சூளையில் வைத்துப் பத்து மாதங்கள் சுட்டுப் பாதுகாத்து குழந்தையாக உருவாக்கி அருளுகின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.