பாடல் #461

பாடல் #461: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சித் திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நண்பால் ஒருவனையே நாடுகின் றேனே.

விளக்கம்:

உயிர்கள் தாம் ஆசைப்பட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்று எலும்புகளை இணைத்து நரம்புகளால் வரிசையாகக் கட்டி வைத்து சிவந்த இரத்தத்தை வைத்து தோலால் அழகாக மூடி திருத்தமாக செய்யப்பட்ட இந்த வீடாகிய உடலுக்கு உயிர் கொடுத்த இறைவனின் கருணையை எண்ணி அவன் மீது பொங்கிய நட்பினால் அவன் ஒருவனை மட்டுமே அன்பினால் தேடி அடைகின்றேன்.

உட்கருத்து: ஆன்மா ஆசைப்பட்டுவிடும் போது அந்த ஆசையைத் தீர்க்க பிறவி கொடுத்து அருமையான உடலைக் கருவிலிருந்தே செதுக்கி அழகான வீடாக்கி அதனுள் உயிராக உலவ விட்ட இறைவனை உயிர்கள் எப்போதும் நினைத்து அவன் கருணையை எண்ணி அன்பு கொண்டு அவனைத் தமக்குள் தேடி அடைய வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.