பாடல் #443

பாடல் #443: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசையில் உலகம் அதுவிது வாமே.

விளக்கம்:

குயவன் களிமண்ணைப் பிடித்து தனது மனதுக்கு எதுவெல்லாம் நன்மை தரும் என்று தோன்றுகின்றதோ அந்த மாதிரியெல்லாம் பாத்திரங்கள் வரும்படி வளைத்து உருவாக்குவான். அந்தக் குயவனைப் போலவே குருநாதனாக இருக்கும் எம் இறைவனும் ஆன்மாக்களின் வேண்டுதலுக்கு இணங்கி எதுவாக இருந்தால் அவர்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பதை அறிந்து அதுவாகவே அவர்களை, அசைவில்லாத இந்த அண்டசராசரத்தில் அசைவு பெற்றுச் சுழலும் உலகங்களில் பல்வேறு வித உயிர்களாகப் படைத்து அருளுகின்றான்.

உட்கருத்து: உயிர்கள் உலகத்தில் பிறப்பது அவற்றின் ஆசையினால்தான். ஆன்மாவாக இருக்கும் உயிர் ஆசைப்பட்டுவிடும் போது இறைவனை வேண்டி உயிர் எடுத்து உலகத்தில் பிறக்கிறது. அப்படிப் பிறக்கும் உயிர் எந்த உருவத்தில் இருந்தால் விரைவில் ஆசைகளைத் தீர்த்துக்கொண்டு தனது வினைகளையும் கழித்துக் கொள்ளும் என்பதை அறிந்த இறைவன் அந்த விதத்திலேயே அவர்களைப் படைத்து அருளுகின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.