பாடல் #435

பாடல் #435: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெஞ் சுடரும்
இருளும் அறிநின் றிருட்டறை யாமே.

விளக்கம்:

உண்மை ஞானத்தை அடைந்த உலக உயிர்களுக்கும் விண்ணுலகத் தேவர்களுக்கும் பேரின்பத்தைப் பெறும் வழியை அருளிச் செய்கின்றான் ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவன். உண்மை ஞானத்தை அடையாமல் உலக ஆசையில் இருக்கின்ற உயிர்களுக்கு தினமும் மாறி மாறி வரும் சூரியனின் ஒளியையும் அந்தச் சூரியனின் ஒளியை தன்னுள் வாங்கிக் கொடுக்கும் நிலாவின் ஒளியையும் வெப்பமான தீயினால் கிடைக்கும் ஒளியையும், இந்த மூன்றுவித ஒளியும் இல்லாதபோது இருக்கும் இருளை உணர்வினால் அறிந்திருக்கின்ற உயிர்களுக்கு உணர்வினால் அறியமுடியாத மாயை எனும் இருளைக் கொண்ட உள்ளம் எனும் இருட்டறையில் வீற்றிருக்கின்றான் இறைவன்.

உட்கருத்து: உண்மை ஞானம் பெற்ற உலகத்து உயிர்களுக்கும் விண்ணுலக உயிர்களுக்கும் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் உண்மை ஞானம் பெறாத உயிர்களுக்கு மாயை எனும் இருட்டையே கொடுக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.