பாடல் #418

பாடல் #418: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராதவண்ணந் தாங்கிநின் றானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்கும் உள்ளிருக்கும் உயிராகவும் வெளியிலிருக்கும் உடலாகவும் மூச்சுக்காற்றாகவும் நின்று கர்மாக்கள் வினைகள் சூழ்ந்த அசுத்த மாயையில் இருக்கும் உலக உயிர்களையும் கர்மாக்கள் வினைகள் இல்லாத சுத்த மாயையில் இருக்கும் தேவர்களையும் தாண்டிய பரவெளியில் உண்மைப் பொருளை உணர வைக்கும் பேரொளியாக குருவாய் நின்று அருளுகின்றான் இறைவன். அனைத்து உயிர்களுக்குள் உயிராகவும் உணர்வாகவும் அவற்றின் உடலுக்குள் பரவி இருந்து அந்த உயிர்களின் மூச்சுக்காற்று உடலை விட்டு செல்லாதபடி உடலையும் உயிரையும் உள்ளுக்குள்ளிருந்து தாங்கிக் கொண்டு நிற்பவனும் இறைவனே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.