பாடல் #413

பாடல் #413: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்பொழியும் வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.

விளக்கம்:

உலகத்தை படைத்து அதனைக்காக்க அனைத்து உயிர்களின் உடலாகவும் சூட்சுமத்தில் உயிராகவும் அவை பிறந்து வாழும் அனைத்து உலகங்களாகவும் அந்த உலகங்களில் உயிர் தோன்ற வழி செய்யும் கடல்களாகவும் அவை வாழ வழி செய்யும் மழை நீரைப் பொழியும் கருத்த மேகங்களைக் கொண்ட வானமாகவும் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் வெற்றிட ஆகாயமாகவும் அனைத்தும் தானே ஆகவும் உண்மையான அடியவர்கள் தேடி அடையும் முக்தியாகவும் இறைவன் ஒருவனே நிற்கின்றான்.

உட்கருத்து: உயிர்கள் அடைவதற்குரிய பெருவழியான முக்தியை அருளிய இறைவன் உலகப்பொருட்களில் அதுவாகவே இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.