பாடல் #756

பாடல் #756: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடையில் பொன்திகழ் கூத்தனு மாமே.

விளக்கம்:

பாடல் #755 ல் உள்ளபடி இறைவனோடு ஒன்றாய் இரண்டறக் கலந்து தாமே சிவமாகி இருப்பவர்கள் அளவில்லாத காலங்கள் ஆயுள் வளர்ந்து அழியாமல் இருக்கின்ற முறையை கேட்டுக் கொள்ளுங்கள். தமக்குள் இருக்கும் இறைவனை அடைய உதவுவதால் மிகவும் நல்லது என்று சாதகர்கள் உணர்ந்து கொண்ட இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் வழியாகவும் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து மேலேற்றி கீழிறக்கி என்று சுழற்சி செய்து கொண்டே இருந்தால் பல காலங்கள் உடல் அழியாமல் சென்று கொண்டே இருக்கும். முப்பது நாட்களுக்கு முறையாகச் செய்த பின்பு குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போல தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் பொன் நிற ஜோதி உருவமாக இருக்கும் இறைவனே தாமாகி ஒளிப் பிரகாசமாக எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.

கருத்து: அகயோகம் செய்யும் சாதகர்கள் இறைவனோடு கலந்து அவனைப் போலவே பொன் நிற ஜோதியாகி எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.