பாடல் #493

பாடல் #493: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞானர் நால்வர் மெய்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதிகளும் வேற்றுமை தானே.

விளக்கம்:

உடலோடு இருக்கும் போதே இறைவனை உணர்ந்து உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் அதமர், மத்திமர், உத்தமர், சித்தர் என நான்கு வகைப்படுவார்கள். இவர்கள் ஆணவ மலத்தை மட்டுமே கொண்ட விஞ்ஞானர் ஆவார்கள்.

மாயை நீங்கப் பெற்றாலும் ஆணவமும் கன்மமும் நீங்கப் பெறாததால் பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருப்பவர்கள் அபக்குவர், பரமுத்தர், அபரமுத்தர் என மூன்று வகைப்படுவார்கள். இவர்கள் மெய்பிரளய அகலர் ஆவார்கள்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் கொண்டவர்கள் முத்தர், சாதகர், சகலர் என்று மூன்று வகைப்படுவார்கள். இவர்கள் அஞ்ஞானர் ஆவார்கள்.

விஞ்ஞானர், மெய்பிரளய அகலர், அஞ்ஞானர் என உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் 3 பகுதியாக பத்து வகையினராக வேறுபட்டு இருக்கின்றார்கள்.

குறிப்பு:

முதல் வகையினர் கன்மம், மாயை அனைத்தும் நீங்கப்பெற்று நான் என்ற எண்ணம் நீங்கி ஞானம் அடைந்தாலும் இறைவனுடன் கலக்காமல் தனிப்பட்ட தனது பெயரினால் அழைக்கப்படுவதினால் ஆணவமலம் இருக்கின்றது. இவர்கள் மரணமில்லாத உடலுடன் இருக்கும் சித்தர்கள், யோகிகள், ரிஷிகள், தேவர்கள் ஆகின்றார்கள்.

2 வது வகையினர் மாயை நீங்கி ஆணவம் கன்மம் ஆகிய இரண்டு மலங்களை மட்டுமே உடையவர்கள். இவர்கள் இறைவனை உணர்ந்து ஞானம் அடைந்தாலும் இறைவனோடு கலக்காமல் உலக நன்மைக்காக அவ்வப்போது மீண்டும் மீண்டும் உடலேடுத்து பிறந்து இறப்பார்கள் இவர்கள் பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருக்கும் ஞானிகள் ஆவார்கள்.

3 வது வகையினர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் கொண்டு உலக வாழ்க்கையிலேயே மூழ்கி இருக்கின்றவர்கள்.

ஆன்மாவின் மூன்று வகைகளும் பத்து உப வகைகளும்:

  1. விஞ்ஞானர் = 1. அதமர், 2. மத்திமர், 3. உத்தமர், 4. சித்தர்.
  2. மெய்பிரளய அகலர் = 5. அபக்குவர், 6. பரமுத்தர், 7. அபரமுத்தர்.
  3. அஞ்ஞானர் = 8. முத்தர், 9. சாதகர், 10. சகலர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.