பாடல் #762

பாடல் #762: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.

விளக்கம்:

பாடல் #761 இல் உள்ளபடி இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதைக் காண முடியாதவர்கள் தாம் பெரிதாக எண்ணியிருந்த உலகச் செல்வங்கள் அனைத்தும் தம் கண் முன்பே அழிந்து போவதைக் காண்கிறார்கள். அழிகின்ற உடலுக்குள்ளும் செல்வத்துக்குள்ளும் என்ன இருக்கின்றதேன்று ஆராய்ந்து பார்த்தால் அழிகின்ற அனைத்து பொருட்களுக்குள்ளும் என்றும் அழியாத பெரும் செல்வமான இறைவன் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

கருத்து: தமக்குள் ஆழ்ந்து தேடி இறைவனை உணர்ந்தவர்களால் மட்டுமே அழிகின்ற அனைத்திலும் என்றும் அழியாத இறை சக்தி இருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.