பாடல் #757

பாடல் #757: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்புஎய்ய லாமே.

விளக்கம்:

பாடல் #756 ல் உள்ளபடி இறைவனோடு இரண்டறக் கலந்து தாமே சிவமாகிவிடும் வழிமுறையை அறிந்து அதன்படியே அகயோகம் செய்து ஆறு ஆதாரச் சக்கரங்களையும் தாண்டி சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் ஒளி உருவமாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் மூன்று மண்டலங்களில் (அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்கள் பாடல் #746 இல் உள்ளபடி) இரண்டு மண்டலங்களைத் தாண்டி மூன்றாவதாக இருக்கும் சந்திர மண்டலத்தில் எட்டுத் திசைகளும் பரவி விரியும்படி இறைவனின் ஒளி உருவத்தை ஏற்றிவைத்து பேரின்பத்தில் திளைத்து அதைத் தரிசித்துக் கொண்டே இருப்பவர்கள் சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பார்கள்.

கருத்து: அகயோகம் செய்து ஜோதியான இறைவனோடு கலந்தவர்கள் அந்த ஜோதியை துவாதசாந்த வெளியிலுள்ள மூன்றாவது சந்திர மண்டலத்தில் எட்டுத் திசைகளுக்கும் பரவி விரியும்படி ஏற்றி வைத்தால் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேரின்பத்தில் வாழ்வார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.