பாடல் #753

பாடல் #753: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

விளக்கம்:

பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு இறைவனை அடைய உதவும் இந்த பிறவி எப்படி அழிந்து போகின்றது என்பதைக் கேட்டுக்கொள்ளுங்கள். வினைகளைத் தீர்த்துக்கொண்டு தம்மை வந்து அடைய வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த பிறவியை உயிர்கள் தங்களது ஆசைகளின் வழியிலேயே சென்று மேலும் மேலும் அதிகமாக வினைகளைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் இறைவனை உணர்ந்து அனைவரும் போற்றி வணங்கிடும் நிலை பெற வேண்டிய வாழ்க்கை சீர்குலைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் திரியும் நாய்களைப்போல் திரிந்து இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து அழிகின்ற வாழ்க்கையாக மாறிவிடும்.

கருத்து: உயிர்கள் தங்கள் ஆசைகளின் வழி செல்வதால் வினைகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.