பாடல் #722

பாடல் #722: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

விளக்கம்:

பாடல் #721 இல் கூறியுள்ளபடி யோக குருவை வழிபட்டு அவரது அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் ஆறுகளைப் போன்ற இடகலை பிங்கலை நாடிகளின் வழியே குதிரையைப் போல குதித்துவரும் மூச்சுக்காற்றை வீணாக்காமல் கட்டி வைத்து சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கே சுரக்கும் அமிர்தத்தைப் பருக முடிந்த யோகியர்களின் உடல் கடலுக்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் நிலத்திற்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் அழியவே அழியாமல் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணையே.

கருத்து: யோக குருவின் அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் தங்களின் உடலும் உயிரும் பிரியும் ஆயுட் காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் யோகியர்கள் அதை மாற்றுவதற்கு அகயோகம் செய்தால் அவர்களின் உடலும் உயிரும் எவ்வளவு ஆயிரம் வருடங்களானாலும் பிரியாமல் இருக்கும் இது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.