பாடல் #721

பாடல் #721: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாகவே மதித்துக்கொள் ளீரே.

விளக்கம்:

யோகியர் தாம் விடும் மூச்சுக்காற்றின் அளவைக் கொண்டே தமக்குள் இறைவன் வீற்றிருக்கும் உடலும் இறைவி வீற்றிருக்கும் உயிரும் எப்போது பிரியும் என்பதை ஒரு சில சோதனைகளால் சிறிதும் பிழையின்றி மிகச் சரியாக அறிந்து கொள்ளலாம். அந்த சோதனைகள் என்ன என்பதை யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளை அரிய மாபெரும் செல்வமாக மதித்து சிரத்தையாக செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கருத்து: உடலை விட்டு உயிர் பிரிந்து விடும் ஆயுளை மிகச் சரியாகக் கணக்கிடும் சாதனைகளை யோக குருவின் அருள் கொண்டு அறிந்து கொண்டு சிரத்தையுடன் செய்யும் சாதகர்களுக்கு இறப்பிலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்கும்.

யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளைச் சிரத்தையாக செய்வதன் மூலம் கிடைக்கும் பலனை அடுத்த பாடல் #722ல் காணலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.