பாடல் #715

பாடல் #715: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

விளக்கம்:

மூச்சுக்காற்றோடு கலந்து உயிர்களின் உயிர்த்துடிப்பின் நாதமாக நிற்கின்ற பஞ்ச பூதங்களின் தலைவனாகிய இறைவனை அந்த மூச்சுக்காற்று மற்ற நாடிகளின் வழியே சென்று வீணாகிவிடாமல் சுழுமுனை நாடியின் வழியே மேலேற்றிச் சென்று தலை உச்சியில் சடையணிந்த கோலத்தில் நின்ற சங்கரனின் தலைவனாகிய இறைவனோடு கலந்து விட்டால் அந்த இறைவன் உயிர்களின் உடலையே தனக்கு ஏற்ற காளை வாகனமாக்கி அதிலேயே அழியாமல் என்றும் வீற்றிருந்து அருளுவான்.

கருத்து: மூச்சுக்காற்றை மற்ற நாடிகளின் வழியே செலுத்தி வீணாக்காமல் சுழுமுனை நாடி வழியே எடுத்துச் சென்று இறைவனோடு கலந்துவிடும் யோகியர்களின் உடல் என்றும் அழியாமல் இறைவனின் திருவருளோடு நிலைத்து நிற்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.