பாடல் #714

பாடல் #714: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே.

விளக்கம்:

இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை நடுவில் உள்ள சுழுமுனை நாடி வழியே நேராக மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனோடு கலந்து அசைவில்லாமல் சிலை போல ஒன்றாக நின்றால் வெளிப்படும் அமிர்தத்தின் மூலம் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனின் அருள் வடிவம் பதினாறு கலைகளிலும் (பாடல் #713 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி 16 நாடிகள்) கலந்து நிற்பதை அறிந்து கொள்ளலாம். யோகியர்கள் மாயையினால் உருவாகும் மயக்கத்திலிருந்து விலகி உண்மை ஞானத்தில் எப்போதும் இருப்பதற்கான வழி இதை அறிந்து கொள்வதே ஆகும்.

கருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை கொண்டு சென்று சக்ஸ்ரதளத்தில் சேர்க்கும் யோகியர்கள் தங்களின் 16 நாடிகளிலும் இறைவனது திருவருள் கலந்து இருப்பதை அறிந்து எப்போதும் மாயை இல்லாத உண்மை ஞானத்தில் இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.