பாடல் #467

பாடல் #467: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இலைப்பொறி ஏற்றி எனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.

விளக்கம்:

பெண்ணின் உடல் என்ற இயந்திரத்தினுள் ஆணின் உடல் என்ற இயந்திரத்தை இயக்கி பெண்ணின் கர்ப்பப்பை என்னும் இயந்திரத்தினுள் கருவை உருவாக வைத்த இறைவன் அந்த கருவை ஐந்து பூதங்களால் ஆட்டி வைத்து ஆன்மாவையும் முப்பது தத்துவங்களையும் சேர்த்து உடல் என்ற இயந்திரத்தைக் கொடுத்து குழந்தையாக்கி அதைப் பித்த நீரினுள் பத்து மாதங்கள் மூழ்கி இருக்கச் செய்து மூச்சுக்காற்றினால் உணவைச் சுட்டு எரிக்கும் வயிறாகிய இயந்திரத்துடன் ஒன்பது துவாரங்களைக் கொண்ட உடம்பில் ஆன்மாவையும் உயிரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து அருளுகின்றான் இறைவன்.

ஒன்பது துவாரங்கள்:

கண்கள் 2, காதுகள் 2, மூக்குத்துவாரம் 2, வாய், பிறவிக்குறி, ஆசனவாய்.

முப்பத்தாறு தத்துவங்கள்:

5 சிவ தத்துவங்கள்: நாதம் – தூய அறிவாலான பரம்பொருளின் முழுமையான நிலை, விந்து – இயங்கிக் கொண்டிருக்கும் கிரியா சக்தி, சாதாக்கியம் – சதாசிவன், ஈசுரம் – மறைத்தல் சக்தியான மகேசுரன், சுத்த வித்தை – படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கு அடிப்படையான இறைதத்துவம்.

7 வித்தியா தத்துவங்கள்: காலம், நியதி, கலை, வித்தை, இராகம், மாயம், புருடன் (ஆன்மா)

24 ஆன்ம தத்துவங்கள்: 5 பூதங்கள் – நிலம் (உடல்), நீர் (இரத்தம் மற்று பித்த நீர்கள்), நெருப்பு (உணவைச் செரிக்கும் நெருப்பு மற்றும் உடல் சூடு), காற்று (மூச்சுக் காற்று மற்றும் பத்துவிதமான வாயுக்கள்), ஆகாயம் (உயிர் மற்றும் ஆன்மா). 5 புலன்கள் – கண்களால் பார்த்தல், காதுகளால் கேட்டல், வாயால் சுவைத்தல், மூக்கால் நுகருதல், தோலால் தொடுதல். 5 ஞானேந்திரியங்கள் – ஓசை (கேட்பது), ஊறு (தொடுவது), ஒளி (பார்ப்பது), சுவை (உண்பது), நாற்றம் (முகர்வது). 5 கன்மேந்திரியங்கள்: வாய் (பேச்சு), கைகள் (செயல்), கால்கள் (போக்குவரவு), எருவாய் (கழிவு நீக்கம்), கருவாய் (இன்பமும் பிறப்பும்). 4 அந்தக்கரணங்கள் – மனம் (எண்ணங்கள்), புத்தி (அறிவு), சித்தம் (சிந்தனை), அகங்காரம் (நான் என்ற எண்ணம்).

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.