பாடல் #466

பாடல் #466: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலனைந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத்தில் அமர்ந்திடுந் தானே.

விளக்கம்:

பெண்ணின் கருப்பைக்குள் உருவாகும் குழந்தையின் உடலினுள் மாயையால் ஒன்றும் அறியாத ஐந்துவகைப் புலன்களும் சேர்ந்து உடலோடு வளர்ந்து உடலோடு இறக்கின்றன. அதுபோலவே அண்டசராசரங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் இறைவனின் நாதத் தத்துவத்திலிருந்து உருவாகிய ஆன்மா கருவுக்குள் உயிரோடு பிறந்து உடலோடு இறந்தபின் மீண்டும் இறைவனின் நாத தத்துவத்திலேயே சென்று அமர்ந்து இருக்கின்றது.

உட்கருத்து: அசையா சக்தியாகிய இறைவனிடமிருந்து உருவாகிய ஒளி ஓசை ஆகிய இருவகைத் தத்துவங்களாலேயே ஆன்மா உருவாகின்றது. அத்தகைய ஆன்மா வினைப் பயனால் கருவுக்குள் புகுந்து உடலோடு உயிராகி வளர்ந்து உடல் இறந்தபின் பிரிந்து மீண்டும் அந்தத் தத்துவங்களுடனே சேர்ந்து அடுத்த பிறவி வரை காத்திருத்து பிறவி எடுக்கும். எப்போது அனைத்து பிறவிக்கான வினைகளும் தீர்ந்துவிடுகின்றதோ அப்போது இறைவனுடனே சென்று இரண்டறக் கலந்துவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.