பாடல் #465

பாடல் #465: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில்
ஓகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்குஒரு முட்டைசெய் தானே.

விளக்கம்:

ஆண் பெண் இருவரின் இன்பத்தில் உருவான கருவின் மூலமாக ஆன்மாவை உயிராக உருவாக்கும் கொடைத் தொழிலைப் புரிந்து அருளுகின்றான் புனிதனான இறைவன். கருவிற்குள் இருபத்தைந்து தத்துவங்களையும் (பாடல் #451 இல் காண்க) சேர்த்து ஆண் பெண்ணின் இன்பத்தின் விளைவாக அங்கே ஒரு சினைமுட்டையைச் செய்து அருளுகின்றான்.

உட்கருத்து: ஆணும் பெண்ணும் எத்தனை முறை இன்பம் கொண்டாலும் கரு எளிதில் உருவாகி விடுவதில்லை. அப்படி நடந்தால் பெண் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற வேண்டும். பெண்ணிடம் உருவாகும் அனைத்து கருமுட்டைகளும் சினைமுட்டையாக மாறுவதில்லை. அப்படி நடந்தால் பெண் கோடிக்கணக்கான குழந்தைகள் பெற வேண்டும். கருமுட்டை சினைமுட்டையாகிவிட்டால் மட்டும் குழந்தை உருவாகி விடுவதில்லை. அப்படி நடந்தால் கருத்தரித்த அனைத்து பெண்களும் உயிரோடு இருக்கும் குழந்தையைப் பெற்று இருக்க வேண்டும். அறிவியலின்படி பல பெண்கள் கரு கலைந்தோ அல்லது இறந்த குழந்தைகளை பெற்றெடுக்கின்றார்கள். ஆணும் பெண்ணும் இன்பமாக இருக்கும் போதே இவர்களுக்கு இப்படிப்பட்ட குழந்தைதான் பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதன்படி சினைமுட்டைகளை கருவாக்கி அதைக் குழந்தையின் உடலாக்கி இருபத்து ஐந்து தத்துவங்களையும் சேர்த்த உயிராக்கி பிறக்கும் வரை பாதுகாத்தும் அருளுகின்றான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.