பாடல் #344

பாடல் #344: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந்த தன்று கொலையே.

விளக்கம்:

தாருகா வனத்திலிருந்த முனிவர்கள் இறைவனை வணங்காமல் இறைவனின் அருளை விட தங்களின் மந்திர சக்தியே பெரிது தாம் கற்ற மந்திரங்களின் மூலமாக எதையும் அடையலாம் என்ற அகங்காரத்தில் இருந்தனர். இவர்களின் அறியாமையைப் போக்க இறைவன் அழகிய உருவம் கொண்ட பிக்‌ஷாடனராகத் தோன்றி அந்த முனிவர்களின் வீட்டுக்குச் சென்று அங்கு இருந்த முனி பத்தினிகளின் முன்னால் பிச்சை கேட்டு நின்றார். அவரின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள் அவர் பின்னாலேயே மயக்கத்தில் கூடி வர ஆரம்பித்தனர். தங்களது பத்தினிகள் இப்படி ஒரு ஆடவனின் பின்னால் மயங்கி வருவதைக் கண்டு கோபமுற்ற முனிவர்கள் தமது தவ வலிமையால் மூன்றுவிதமான தீயை வளர்த்து மந்திரங்கள் மூலமாக (ஆகவனீயம் – காட்டுத்தீ, காருகபத்தியம் – வீட்டுத்தீ, தட்சிணாக்கினியம் – ஏட்டுத்தீ) கரிய நிறமுடைய ஒரு பெரிய யானையைத் தோன்றுவித்தனர். யாகத் தீயில் தோன்றிய யானை அவரை அழித்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அந்தத் தீயிலிருந்து வெளிவந்த யானையைக் காடே அதிரும்படி பிளந்து கொன்று அதன் தோலை தனக்குப் போர்வையாக போர்த்திக்கொண்டு மூன்று வகையாக நெருப்பும் அதில் சொல்லும் மந்திரங்களும் மந்திரத்தின் பலனாக அதிலிருந்து வரும் பலனும் அனைத்தும் யாமே என்று தாருகா வனத்திலிருந்த முனிவர்களுக்கு உணர்த்தினார். இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவழுவூர் தலமாகும்.

உள்விளக்கம்: உயிர்களுக்கு வரும் கோபத்தினால் நான் என்ற அகங்காரம் அதிகரித்து என்ன செய்கின்றோம் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் மதம் பிடித்த யானை போல் இருக்கும் போது உயிர்கள் இறைவனை சரணடைய இறைவன் கோபத்தையும் அகங்காரத்தையும் அழித்து அனைத்தும் யாமே என்று உணர்த்துகிறார்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.