மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #24

12-3-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தெளிவு குருவின் திருமேனி கான்டல் எனத் துவங்கும் அந்நான்கு வரிகள் படித்து நன்றென அவ்வரிகளின் எளிமையை இரசித்தோரும் உண்டு. இருப்பினும் இதன் முழுமையான அர்த்தமும் எவ்விதம் செய்தல் வேண்டும் என்கின்றதும் அறியா நிலையில் உள்ளனர். இதனை யாம் இங்கு எடுத்துரைப்போமாக.

குருவும் தெய்வமும் வேறில்லை என்கின்றதை முதலில் உணர்தல் வேண்டும். நாம் வணங்கும் தெய்வமே குருவின் வடிவில் நம் முன் நிற்கின்றார் என்பதையும் மறப்பது நல்லதல்ல. யாம் வணங்கும் சிவன், கிருஷ்ணன், விஷ்ணு, அம்பிகை என்ற அனைத்தும் குருவுக்குள் அடக்கம் என்பதையும் மறவாது செயல்படுத்துதல் வேண்டும்.

மேலும் குருவை எவ்விதம் வணங்குவது? என்கின்ற ஓர் வினாவும் இங்கு எழும்பிடக் கண்டோம். குருவின் ஆத்மா அவருடய ஆன்மிக சக்தியை நாம் நேசிக்க வேண்டும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. இவ்விதமிருக்க நாம் குருவாக வேண்டும் குரு நாமாக வேண்டும் என்கின்ற ஐக்கிய மனப்பான்மையை வளர்த்தல் வேண்டும். இதனைச் செய்யும் முன் குரு எவ்விதம் இருக்கின்றாரோ அவ்விதம் நாமும் மாற முயற்சித்தல் வேண்டும். இந்நிலையை எவ்விதம் அடைவது என்றால் குருவை எண்ணித் தியானம் செய்தல் வேண்டும். செய்திடும் முன்னதாக கால் தொட்டு சிரசு வரை அங்கங்களை நாம் தொட்டு அவை குருவின் அங்கங்களாக கருதி வணங்கிட்ட பின் குருவின் செய்கைகள் குருவின் தன்மைகள் அனைத்தும் நன்கென தியானித்து மனமதில் நிறுத்தல் வேண்டும். இவ்விதம் சில மாதங்கள் செய்கின்ற போது நமக்கு மகத்தான முன்னேற்றங்கள் குருவழி கிட்டக்கூடும் என்றும் விளக்கிட்டோமே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.