மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #55

9-3-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நமது கண்கள் அனைத்தையும் காண்கின்றன ஆனால் தன்னை காண்பதில்லை. அதுபோலவே மற்றவர்களின் நலன்களை முதலில் எண்ணிய பின்பே நமது நலன்களை நாட வேண்டும். ஆனால் இந்தக் கலியுகத்தில் அவ்வாறு நடப்பதில்லை. அனைவரும் சுயநலத்தில் மூழ்கி அதிலிருந்து வெளிவர முடியாமல் இருக்கின்றனர். ஏன் இப்படி என்று எண்ணிப் பார்த்தால் மற்றவர் போல் நாமும் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்று நினைக்கின்றனர். இந்த மனப்பான்மையை சிறிது மாற்றி சுயநலத்திலிருந்து சிறிது நீங்கி மற்றவர்களின் நலத்தையும் எண்ணுதல் வேண்டும். இதன் முதல்படியாக சிறிதேனும் அன்னதானம் அளித்திடல் வேண்டும். பசியாற்றும் காரியமானது மிகவும் நல்ல கர்மம் ஆகும். இந்த அன்னதானத்தைப் படிப்படியாகப் பெரிதாக்கிக் கொண்டு மற்ற நல்ல காரியங்களையும் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி செய்தல் வேண்டும். பொதுவாக நல்ல காரியங்கள் செய்யும் போது வேறு விதமான எண்ணங்கள் இல்லை என்றாலும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் மேலோங்குகின்றது இதனைத் தவிர்த்தல் வேண்டும். இறைவன் அளிக்கின்றான் நமது என ஒன்றுமில்லை என்பதை மனதில் வைக்க வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். ஏனெனில் பலரின் மனதில் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் மேலோங்குவதை கண்கின்றோம் இதனை உறுதியாக நீக்க வேண்டும்.

தியானங்கள் மற்ற பிரார்த்தனைகள் செய்யாதவர்களும் இக்காலத்தில் ஆரம்பியுங்கள். ஏனெனில் உடலுக்கு உணவுபோல ஆத்மாவிற்கு சில நல்ல பிரார்த்தனைகளும் மந்திரங்களும் உணவாகின்றது என்பதை மறக்காதீர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.